சொந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்காக தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை கேடயமாக பயன்படுத்தும் முரளி, பதவியில் இருந்து விலக வேண்டும், என்று முன்னாள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.ஆர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. படம் எடுப்பதில் தொடங்கி வியாபாரம் ரிலீஸ் கலெக்ஷன் என்று அத்தனையுமே இன்று சவாலாக மாறிப் போயிருக்கிறது. பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் நான்கு வருடங்களாக முடங்கிப் போய் கிடக்கிறது. நட்சத்திர நடிகர்கள் படங்களைத் தவிர மற்றவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட கிடைப்பதில்லை. சேட்டிலைட் வியாபாரம் ஓடிடி ஆடியோ ரைட்ஸ் கியூப் கட்டணம் டிக்கெட் புக்கிங் கட்டணம் உள்ளிட்ட எதையுமே முறைப்படுத்த முடியாவிட்டால் எதற்கு சங்கத்தலைவர் பதவி?
இத்தனை வருடங்களாக பொறுத்து பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த உறுப்பினர்கள், தலைமைக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் தயாராகிவிட்ட சூழ்நிலையில் அதை முறியடிக்கும் சுயநல சூழ்ச்சியுடன், நடிகர் தனுசுக்கு ரெட் கார்டு, புதிய படங்களை தொடங்காமல் வேலை நிறுத்தம் என்று அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார். இதைப் பற்றி எல்லாம் உறுப்பினர்கள் நேரடியாக கேள்வி கேட்கும் ஜனநாயக உரிமையை மறுக்கும் நோக்கத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற வேண்டிய பொதுக்குழு கூட்டத்தை கூட ரத்து செய்து விட்டார்.
வேலை நிறுத்தம், நடிகர்களுக்கு எதிராக ரெட் கார்டு போடுவது போன்ற முக்கியமான விஷயங்களை மற்ற சங்கங்களுடன் கலந்து பேசி பொதுக்குழுவில் விவாதித்து தான் முடிவு செய்ய வேண்டும். தனது சுயநலத்திற்காக தன்னிச்சையாக தீர்மானம் போடக்கூடாது. இதுபோன்று திடீரென்று மற்றவர்கள் தொழில் செய்வதற்கு தடை விதிப்பது MONOPOLIES AND RESTRICTIVE TRADE PRACTICES ACT ( MRTP) சட்டத்திற்கு எதிரானதாக அமைந்துவிடக்கூடும் என்பது சங்கத் தலைவருக்கு தெரியுமா? தெரியாதா? அனுபவம் இல்லாமல் நேரடியாக பொறுப்புக்கு வருபவர்களால் தான் இப்படி பொறுப்பில்லாமல் யோசிக்க முடியும். பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கமுடியாத பிரச்சினைகளே கிடையாது என்பதுதானே திரையுலக வரலாறு.
தமிழக முதல் அமைச்சர்களில் திரைப்பட துறைக்கு அதிக உதவிகளையும் சலுகைகளையும் வழங்கியவர் டாக்டர் கலைஞர் அவர்கள் மட்டும் தான். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட "கலைஞர்- 100" விழாவைக் கூட உங்களால் சிறப்பாக நடத்த முடியவில்லை. பல கோடிகள் வசூலித்தும் இன்னும் பலருக்கு பாக்கி இருக்கிறது. விழாவுக்கான வரவு செலவுகளை "வெள்ளை அறிக்கை"யாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இன்று வரை பதில் இல்லை.
நான் தலைவராக இருந்த போது அறக்கட்டளையிலும் சங்கத்திலும் சேர்த்து வைத்திருந்த சுமார் 11 கோடி ரூபாயை, விஷால் தலைமையிலான நிர்வாகத்தின் பொருளாளர் எஸ் ஆர் பிரபு " உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கு அஞ்சு பைசா கூட இருக்காமல் செய்து விடுவோம்" என்று பகிரங்கமாக சவால் விட்டு கஜானாவையே காலி செய்தார்கள்.
1994 ல் சங்க உறுப்பினர்கள் நலனுக்காக நானும் கே.ஆர்.ஜி. அவர்களும் அறக்கட்டளையை உருவாக்கினோம். அதில் வரும் வட்டியை எடுத்து தான் உதவி செய்ய வேண்டுமே தவிர டெபாசிட் தொகையில் கை வைக்கக் கூடாது. அப்படி செய்தால் அது சட்டப்படி கிரிமினல் குற்றம். அறக்கட்டளைகள் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும்.
ஆனாலும் அவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பணமும் மீட்கப்படவில்லை. எனவே எஸ்.ஆர். பிரபு, தற்போதைய தலைவர் முரளி, பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் மீது சட்டப்படி கிரிமினல் வழக்குத் தொடர உள்ளேன்.
தனது சொந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, அப்புரானி போல முகத்தை வைத்துக் கொண்டு, தலைவர் பதவியை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருப்பதை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. இந்த சினிமா துறைக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று முரளி நினைத்தால், அது உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக மட்டுமே இருக்க முடியும்.
இவ்வாறு கே.ஆர் தெரிவித்துள்ளார்.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...