Latest News :

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள். அப்படி எல்லா இடத்திலும் இருப்பவராக மை.பா. நாராயணனைச் சொல்லலாம்.  அரசியல் மேடைகளில், ஆன்மீக உரைகளில், பட்டிமன்றங்களில், தொலைக்காட்சி விவாதங்களில், இலக்கிய உரைகளில் என்று எல்லாவற்றிலும் முகம் காட்டுபவர். கூடுதலாக அண்மைக்காலமாக  திரையுலகிலும் முகம் காட்டி வருகிறார். அண்மையில் வெளிவந்த 'வணங்கான்' படத்தில் நீதிபதியாக வரும்  மிஷ்கினிடம் ஒரு போக்ஸோ வழக்கு வரும். அதைத் தொடுத்து மிஷ்கினிடம் மூக்குடை படும் வழக்கறிஞராக கவனிக்கத்தக்க வகையில் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கும் முகத்தைப் படம் பார்த்த அனைவராலும் மறக்க முடியாது. அவர்தான் மை.பா.நாராயணன். இதற்கு முன்பு பாலாவின் , 'நாச்சியார்', 'இறுகப்பற்று' உள்ளிட்ட  13 படங்களில்  நடித்துள்ளார்.

 

மை.பா. நாராயணன் ஆனந்த விகடனில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். இந்தத் துறையில் அவருக்கு 30 ஆண்டு கால அனுபவம் உண்டு. ஊடக விளம்பரத் துறையிலும் ஈடுபட்டவர், ஒரு பத்திரிகையாளராக கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட முன்னணி அரசியல் கட்சித் தலைவர்களையும் பிரமுகர்களையும் நேர்காணல் செய்தவர். திரையிலும் நடிகராக உலா வரும் அவர், தனது திரையுலக அனுபவம் குறித்துப் பேசும்போது,

 

Mai Pa Narayanan

 

”எனது  திரை உலகப் பிரவேசத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் தம்பி ராஜுமுருகன் தான். அவரது 'ஜோக்கர்' படம் தான் எனக்கு முதல் படம். பிறகு 'தீரன் அதிகாரம் ஒன்று', அதற்குப் பிறகு அண்ணன் பாலாவின்   'நாச்சியார்' படத்தில் நடித்தேன்.

 

தலையின் 'நேர்கொண்ட பார்வை'யில் நடித்தேன். பிறகு பெரிய வெற்றிப்படமான 'இறுகப்பற்று' ,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் 'கலகத் தலைவன்', 'பொம்மை நாயகி' என 13 படங்களில் நடித்த பிறகு இப்போது மீண்டும் அண்ணன் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' வந்துள்ளது. அவர் இயக்கத்தில் நடிப்பது என்பது படித்து ஒரு சான்றிதழ் பெற்ற அனுபவத்தைக் கொடுப்பது.  'வணங்கான்' படப்பிடிப்பில் இரண்டாவது முறை அண்ணன் பாலாவின் இயக்கத்தில் நடித்தது மறக்க முடியாதது. ஒரு சிறு பாத்திரமாக இருந்தாலும் அதை உயிர்ப்புள்ள  குணச்சித்திரமாக மாற்றுவதில் அவர் காட்டும் ஈடுபாடு வியக்க வைக்கும். அவர்  நடிப்புக் கலைஞர்களிடம்  வேலை வாங்கும் விதத்தைப் பார்த்து ஏராளம் கற்றுக் கொள்ளலாம். அதே போல் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்யுடன் பேசிப் பழகியதை அவர் காட்டிய அன்பை மறக்க முடியாது.

 

பல அரசியல் கட்சித் தலைவர்களிடமும் பிரமுகர்களிடமும் எனக்கு நட்பான தொடர்பு உண்டு. அவர்கள் அனைவரது அன்புக்கும் பாத்திரமானவனாக நான் இருக்கிறேன், அதுவே எனது வாழ்க்கைப் பாதையில் வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்ய உதவுகிறது.

 

கலைஞர் அவர்களின் மறைவின் போது நடைபெற்ற நேரலை  இரங்கல் நிகழ்ச்சியில் நான் பேசியதும் அதேபோல புரட்சிக் கலைஞர் அவர்களின் மறைவின் போது நடைபெற்ற நேரலையிலும் நான் பேசியதும் என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம் என்று நான் நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் அன்பைப் பெற்றவன் நான்.

 

Mai Pa Narayanan with Kalaingar

 

நான் நடித்த படங்களில் சிறு வேடமாக இருந்தாலும் பார்வையாளர் மனதில் பளிச்செனப் பதியும் வேடங்களில் நடித்து வந்துள்ளேன். இப்போது அறம் கோபியின் புதிய படத்திலும்,  வ.கௌதமனின் காடுவெட்டி குரு கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் புதிய படத்திலும் நடித்து வருகிறேன். மேலும் இரண்டு புதிய  படங்களும் வந்துள்ளன. அது இல்லாமல் ஆன்மீகம், இலக்கியம் என்று சொற்பொழிவு  ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கிறது. இப்படி இறைவன் அருளால் எப்போதும் நான் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஓட்டத்தைத் தொடர்ந்து வருகிறேன். இன்னும் பெரிய அளவில் வளர வேண்டும். அதற்கேற்றபடி  அன்பானவர்கள் வழங்கும் வாய்ப்புகளுடன் மேலும் வளர்வேன் என்று நம்புகிறேன்.”

 

இவ்வாறு மை.பா.நாராயணன்  கூறினார்.

Related News

10293

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery