Latest News :

’வேம்பு’ பட ஒளிப்பதிவாளர் குமரனுக்கு குவியும் பாராட்டுகள்!
Thursday May-29 2025

அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள படம் ‘வேம்பு’. மெட்ராஸ் (ஜானி) ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடிக்க, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். முக்கிய வேடங்களில் மாரிமுத்து, ஜெயராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இது உருவாகி, பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஒளிப்பதிவாளர் குமரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

 

தனது சினிமா பயணம் மற்றும் வேம்பு படம் குறித்து குமரன் கூறும்போது, “நான் கல்லூரியில் பி.டெக் படித்து முடிப்பதற்கு முன்பாகவே சினிமாவில் எனக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்துவிட்டது. மருதமலை படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வைத்தியிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவருடன் மலையாளம், கன்னட மொழிகளில்  பணியாற்றி உள்ளேன். கன்னடத்தில் ஒளிப்பதிவாளராக இரண்டு படங்களில் பணியாற்றிய நிலையில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குநராக மாறிய ’வேலையில்லா பட்டதாரி’ படத்தில் ஆப்பரேட்டிவ் கேமராமேனாக பணியாற்றினேன். 

 

அதன் பிறகு அவர் இயக்கிய ’தங்க மகன்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக மாறினேன். அது தான் என் முதல் படம். அதன் பிறகு ’எங்கம்மா ராணி’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளேன். 

 

’பாதாம் கீர்’ என்கிற படத்தில் பணியாற்றியபோது அந்த படத்தில் உதவி இயக்குநராக ஜஸ்டின் பிரபு வேலை பார்த்தார். அப்போது ஏற்பட்ட நட்பில் அவர் இயக்குநராக அறிமுகமான ’வேம்பு’ படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்தேன். பல கதைகளை நானும் அவரும் இணைந்து விவாதித்தோம். அதில் இந்த வேம்பு கதை தான் தயாரிப்பாளருக்குப் பிடித்திருந்தது.

 

இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற கிருஷ்ணகிரி பகுதி பெரும்பாலும் சினிமாக்காரர்கள் செல்லாத ஏரியா. அழகாகவும் இருந்தது. கதைக்கும் பொருத்தமானதாக இருந்தது. ஒரு காட்சியில் மழை பெய்வது போல இருந்தால் நன்றாக இருக்கும் எனப் பேசி முடிவு செய்திருந்தோம். ஆனால் நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடத்தில் செயற்கையாக மழையை பெய்ய வைப்பதற்காக அந்த பகுதிக்குள் தண்ணீர் வண்டியைக் கூட எங்களால் கொண்டுவர இயலவில்லை. அந்த அளவிற்கு வாகன போக்குவரத்திற்கு இடைஞ்சலான பகுதி அது. அதனால் சாதாரணமாகவே அந்த காட்சியை எடுக்கலாம் என நினைத்தபோது, எதிர்பாராத விதமாக மழை பெய்யத் துவங்கியது. 

 

உடனடியாக நாங்கள் ஏற்கனவே பேசி வைத்திருந்தபடி இயற்கை மழையிலேயே அந்தக் காட்சியை அழகாக எடுத்து முடித்தோம். அந்த சமயத்தில் உண்மையிலேயே நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன்.

 

படம் பார்த்த பலரும் தற்போது பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சிலர் பாலுமகேந்திராவின் ஃபிரேம்களை பார்த்தது போல இருக்கிறது என்று சொன்னார்கள். பெருமையாக இருந்தாலும் அப்படி ஒரு ஜாம்பவானுடன் ஒப்பிடுகிறார்களே என பயமாகவும் இருந்தது.

 

தற்போது சிங்கிள் ஷாட்டில் உலக சாதனையாக உருவாகியுள்ள ‘ப்ளீஸ் ஓப்பன் தி டோர்’ என்கிற படத்தில் பணியாற்றியுள்ளேன். இது ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. சிங்கிள் ஷாட்டில் எடுக்க வேண்டி இருந்ததால் நிறைய சவால்களும் இருந்தன. இதற்காக பெங்களூரில் இருந்து சில சாதனங்களை வரவழைத்து எந்த ஒரு இடத்திலும் காட்சி படமாவது தடைபடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. 

 

இந்தப் படம் தற்போது கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்பட இருக்கிறது. அது மட்டுமல்ல உலகத்திலேயே சிங்கிள் ஷாட்டில் அதிக நீளம் கொண்ட படம் இந்த ‘ப்ளீஸ் ஓபன் தி டோர்’ படம் தான். அடுத்ததாக காளி வெங்கட் நடிக்கும் படத்தில் பணியாற்றி வருகிறேன். ரகுராம் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

 

Cinematographer Kumaran

 

இன்னொரு படமாக காளி வெங்கட் மற்றும் தம்பி ராமையா இணைந்து நடிக்கும் படத்திலும் பணியாற்றி வருகிறேன். சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு நீதிமன்றக் காட்சியைப் படமாக்கினோம், அந்த காட்சியை இரண்டு கேமராக்களை பயன்படுத்தி ஒரு புதிய யுக்தியில் படமாக்கினேன். படக்குழுவினர் அனைவருமே அதை பாராட்டினார்கள். குறிப்பாக தம்பி ராமையா என்னிடம் வந்து, “ஒரு இயக்குநராக சொல்கிறேன்.. இதுவரை நான் பார்த்த படங்களில் இது போன்று ஒரு காட்சியை யாரும் படமாக்கியது இல்லை குமரா” என்று பாராட்டியதுடன், பார்க்கும் அனைவரிடமும் இந்த காட்சி படமாக்கப்பட்ட விதம் பற்றி சிலாகித்துக் கூறி வருகிறார். அது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

 

நான் பணியாற்றிய பாதாம்கீர் திரைப்படம் அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இன்னொரு பக்கம் சமீர் அலிகான் தயாரித்து இயக்கி நடித்துள்ள ‘தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு' படத்தில் பணியாற்றியுள்ளேன். 90களில் வெளியான பாலிவுட் படங்களின் விஷுவல் போல ரம்யமாக இருக்கும். வேம்பு படத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒளிப்பதிவை அதில் பார்க்கலாம். அந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு இந்த படத்தின் வியாபாரக் காட்சிகளுக்காக என டி ஐ (DI) பண்ணவே தேவையில்லை. அந்த அளவிற்கு குவாலிட்டியாக எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்று இயக்குநர் பாராட்டினார்.

 

அடுத்ததாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகிவரும் நாதமுனி படத்தில் பணியாற்றியுள்ளேன். குழந்தைகளின் மீதான பாலியல் துன்புறுத்தலை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. மாதவன் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தாத்தா கதாநாயகியாக நடித்துள்ளார்”. வேம்பு படத்தின் வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

Related News

10497

இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை! - உற்சாகத்தில் ‘லோகா - அத்தியாயம் 1’ படக்குழு
Thursday September-04 2025

நடிகர் துல்கர் சல்மான் தனது வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’...

’பனை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Wednesday September-03 2025

பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...

குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக ‘குமாரசம்பவம்’ உருவாகியுள்ளது - இயக்குநர் பாலாஜி வேணுகோபால்
Wednesday September-03 2025

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

Recent Gallery