நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் என்.அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் ’குட் டே’. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நடிகர் கலை இயக்குநர் விஜய் முருகன் பேசுகையில், “இந்தப்படம் மிகச் சுவாரஸ்யமான படம், மிக நல்ல கதை. படம் பார்த்து விட்டேன் பிரித்திவி மிக அழகாகச் செய்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் கதை. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
ஜீவா சுப்பிரமணியம் பேசுகையில், “இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம். இதுவரைக்கும் சேலை கட்டிக்கொண்டு நடித்திருக்கிறேன், ஆனால் இதில் எனக்கு வித்தியாசமாக போலீஸ் உடை தந்தார்கள். ஆடிசனில் எனக்கு போலீஸ் டிரெஸ் தந்தார்கள், எங்கே என்னை தேர்ந்தெடுக்க மாட்டார்களோ என நினைத்தேன், என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் தந்த இந்த “குட் டே” படக்குழுவிற்கு நன்றி. சிவகார்த்திகேயன் அண்ணா சூப்பர்ஸ்டார் எல்லாம் இப்போது வரும் படங்களுக்கு ஆதரவு தருகிறீர்கள், அதுபோல எங்கள் படத்தையும் பார்த்து ஆதரவு தாருங்கள். நீங்கள் தரும் ஆதரவு மிகப்பெரிது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.
ஒளிப்பதிவாளர் எடிட்டர் மதன் குணாதேவ் பேசுகையில், “எல்லாருக்கும் வணக்கம். குட் டே. இந்தப்படம் , ஒரு ஒரு இரவில் நடக்கும் கதை. அதனால் முழுக்க இரவில் தான் ஷூட் செய்தோம். இந்த டீமில் அனைவருமே நண்பர்கள் தான். எல்லோரும் எங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்துள்ளோம். வரும் 27 ஆம் தேதி படம் வெளியாகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.
திரைக்கதை எழுத்தாளர் பூர்ணா ஜே.எஸ். மைக்கேல் பேசுகையில், “இது மூன்று வருடம் கஷ்டபட்டு செய்த படம், அனைவரும் நண்பர்கள், எல்லோரும் சிறப்பாக உழைத்துள்ளோம். ரொம்ப பெரிய படம் இல்லை. ரொம்ப சின்ன படம். ஆனால் ரொம்ப அழகான படம். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா அவரோட கதையை ஒரு முறை சொன்னார். அதிலிருந்து உருவானது தான் இந்த ஒன்லைன். இந்தப்படம் என்டர்டைனும் பண்ணும். உங்களை எங்கேஜும் பண்ணும். இந்தப்படத்தில் புதிதாக ஒன்றை முயற்சி செய்துள்ளோம். இன்டர் கட் இல்லாமல் முழுப்படத்தை சொல்ல முயற்சி செய்துள்ளோம். முதல் ஒரு ரெண்டு நிமிஷம் மட்டும்தான் இன்டர் கட் இருக்கும். அதன் பிறகு முழுக்க கட் ஆகாது. கேமரா ஒரு கேரக்டரை ஃபாலோ செய்யும். இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். இந்தக்கதை குடி மட்டும் கிடையாது. அந்த குடியால பல மனநிலைகள் பல வாரியா பல அடுக்குகளா மாறும். அந்த மாதிரியான ஒரு பல அடுக்குகள் கொண்ட ஒரு கதாபாத்திரம்தான் இந்த கதையில் இருக்கிற சாந்தகுமார். எழுத்துக்கு வாய்ப்பளித்த என்னுடைய ப்ரொடியூசர் என்னோட டைரக்டர் இருவருக்கும் நன்றி. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில், “இது என்னுடைய வாழ்வில் நடந்த, கடந்த கால கதை, அன்பால் என்னை இதிலிருந்து மீட்டு கொண்டு வந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி. அண்ணன் பாலாஜி தரணிதரன் மற்றும் ராஜுமுருகன் ஆகியோர் என் வாழ்வில் முக்கியமானவர்கள். இருவருக்கும் நன்றி. கோவிந்த் வசந்தா இப்படத்தில் அற்புதமான பாடல்கள் தந்துள்ளார். இந்த திரைப்படம் வெறும் குடியை மட்டும் பேசுவதில்லை, குடி ஒரு பக்கம் குற்ற உணர்வையும், இன்னொரு பக்கம் அச்சத்தையும் தரும். இது இரண்டும் பின்னிப் பிணைந்த நம்ம சமூகமே, கில்ட் மேனியக் சொசைட்டி தான். இந்த சமூகத்தில் ஒருவன் எப்படி குடிகாரனா மாறுகிறான் என்பதற்கு, நிறைய நிறையக் காரணங்கள் உண்டு. அப்படி ஒரு காரணத்தில் போய் வீழ்ந்தவன்தான் நானும். ஒரு 20 வருடம் போதைக்குள்ளேயே உழன்று மயக்கத்தில் எல்லாத்தையும் செய்து, அப்படியே இருந்தவன்தான். ஒருவன் குடிகாரனா மாற சமூக கட்டமைப்பு ஒரு காரணமா இருக்கிறது. கடுமையான பொருளாதார ஏற்ற தாழ்வுகள், ஒரு பக்கம், பணம் போய்க்கொண்டே இருக்கிறது, ஒரு பக்கம் பணம் இல்லை. ஆனால் அதே உழைப்புதான் எல்லோராலும் போடப்படுகிறது. ஆனால் பணம் வரலை எனும் போது, கிடைக்கக்கூடிய அந்த ஏமாற்றம் மனிதனை போதைக்குள் தள்ளுகிறது. அந்த விரக்தியை வெளிப்படுத்த முடியாமல், அப்படி வீழ்த்தப்பட்டவர்களில் நானும் ஒருத்தன். சலிப்புணர்வு மற்றொரு முக்கிய காரணம் இன்று எல்லாருமே போதை நோக்கி ஓடிட்டு இருக்கிறோம். இந்த சலிப்புணர்வை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறதுதான் காரணம். அப்படி ஒரு குடிகாரனின் வாழ்க்கையை நெருங்கி பேசுகிறது இந்தப்படம். அதிலும் இந்த திரைக்கதை பின்னப்பட்ட விதம் ஆச்சரியம் தருகிறது. இயக்குநர் அரவிந்த் அவர்களுக்கும் கதாசிரியர் மைக்கேலுக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி. வெறுமனே ஒரு கொண்டாட்டமான ஒரு படமா இல்லாமல், குடியை நியாயப்படுத்தவும் செய்யாமல், இது தப்பு அப்படிங்கிறதை ரொம்ப ஆணித்தரமாக சொல்லி, ஆனால் அவன் குடிக்கப் போனதுக்கான காரணம் அவன் மட்டும் கிடையாது, பல பேர் இருக்கிறார்கள் அப்படிங்கறதையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள். இந்த படம் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கிறது. இந்த மாதிரியான நிறையப் படங்கள் வரவேண்டும். பெரிய கதை இது ஒரு நாள் இரவு நடக்கறதுனால அந்த இரவுக்குள்ள என்னென்ன சொல்ல முடியுமோ அதைச் சொல்லியுள்ளார்கள். இந்த படம் வெற்றி அடைந்து பொருளாதார ரீதியாகத் தயாரிப்பாளர் நல்ல லாபம் அடைய வேண்டும். இந்தப்படம் எல்லோருக்கும் வெற்றியைத் தரட்டும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
இயக்குநர் அரவிந்தன் பேசுகையில், “இந்த படத்தில் வேலை செய்த அனைத்து கலைஞர்களுக்கு என் நன்றி. அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. பிரித்விராஜ், கார்த்தி அண்ணா, மதன் குணதேவ அண்ணா, பூர்ணா, முக்கியமா எங்கள் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கு என் நன்றிகள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், “எல்லாருக்கும் வணக்கம். குட் டே டீம்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் படம் பார்த்து விட்டேன். மிக அருமையான படம். கார்த்திக் நேதா அண்ணா என்ன சொன்னாரோ அதையே தான் நானும் உணர்ந்தேன். இந்த படம் போதையைப் போற்றி பேசுவதில்லை. போதையிலிருக்கும் ஒருவரின் வலியும், அவரைச் சுற்றியவர்களின் துயரங்களும் பற்றியது. படம் பார்த்ததும், எனக்கு “It’s a Wonderful Life” னு ஒரு பழைய ஆங்கில படம் நினைவுக்கு வந்தது. ஒரே நாளில் நடக்கிற கதையாக இருந்தாலும், அதுக்குள்ள அந்த உணர்வின் ஆழம் இருந்தது. படத்தின் இயக்கம், திரைக்கதை, இசை எல்லாமே அருமை. "மின்மினிய ராசாத்தி" பாடல் உண்மையிலேயே நெகிழ வைத்தது. நல்ல படங்கள் ஓடும் – இந்த படமும் நிச்சயமாக ஓடும். நன்றி.” என்றார்.
கலை இயக்குநர் சங்கர் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். “குட் டே” என்னுடைய இரண்டாவது படம். இப்படத்திற்கு உரிய கதைக்களம் உருவாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பது மிகுந்த மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் பிரித்திவி அண்ணா, மற்றும் இயக்குநர் அரவிந்தன் பிரதர், இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. படத்தில் வேலை செய்த அனைத்து குழுவினருக்கும் நன்றிகள்.” என்றார்.
இயக்குநர் ராஜுமுருகன் பேசுகையில், “இந்த படம், ஒரு குடிகாரனின் வாழ்க்கையை ‘glorify’ செய்வதற்கல்ல. குடிக்குப் பின்னால் இருக்கும் சமூக, உளவியல், பொருளாதார வேர்கள் என்னவென்று கேட்கும் படம். எனக்கும் அந்த அனுபவம் இருந்ததால் தான் இதன் அழுத்தம் புரிகிறது. நாகராஜனுடைய ஒரு சிறுகதையை படித்த மாதிரி, வைக்கம் பஷீருடைய அந்த உலகத்துக்குள்ள போய்விட்டு வந்த மாதிரி ஒரு உணர்வை இந்த படம் கொடுத்தது. விஜய் மல்லையாவின் ஒரு வீடியோவைப் பார்த்து குடியை விட்டுள்ளேன் நான். இது போன்ற படங்கள் தான் அந்த அனுபவங்களை மீண்டும் நினைவூட்டுகின்றன. போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் – அது தவிர்க்க முடியாத சமூக அழுத்தங்களால் உருவாகிறது. இந்த படம் அந்த உண்மையை மிக அழகாகச் சொல்கிறது, படம் பார்ப்பவர்களில் ஒரே ஒரு இதயத்தையாவது மாற்றக்கூடிய படம் தான் பெரிய படம். இந்த படமும் அந்த வகையிலான படம் தான். கார்த்திக் நேதா ஒரு அழகான கவிஞர். கோவிந்த வசந்தா இசை – படம் முழுக்க ஆன்மாவாக இயங்குகிறது. இந்த படத்தில் பணியாற்றிய எல்லோரும் மிகச் சிறந்த பணியைச் செய்திருக்கிறார்கள், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.
ட்ரீம் வாரியர்ஸ் குகன் பேசுகையில், “ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் புதிய திரைப்படமான ’குட் டே’ தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான பரிமாணத்தை உருவாக்க இருக்கிறது. புதிய இளைஞர்களின் கூட்டு முயற்சியாக உருவாகியுள்ள இப்படம், மனிதர்களின் மன அழுத்தம், குடிப்பழக்கத்தின் சமூகப் பின்னணி, மற்றும் வாழ்க்கையின் அர்த்தம் என மிக ஆழமான கருத்துகளுடன் நகர்கிறது. “இந்தப் படம் புதுமையை, இன்ஸ்டிங்க்ட்டை, உணர்வை, சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடித்துள்ள பிரித்விராஜ், தனது கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். இவருடைய நடிப்பைத் தமிழ் சினிமா கண்டிப்பாக அங்கீகரிக்கும்.” “திருப்பூர் – வேலைவாய்ப்புக்காகப் பலரும் நகரும் நகரம். அந்த நகரம் எவ்வாறு ஒரு சாதாரண மனிதனை மன அழுத்தத்திற்குள்ளாகி, அவனை புதிய வழி தேட வைக்கிறது என்பதே இந்த படத்தின் கதை. இது, ஒரு மனிதனின் ஆதங்கம் மற்றும் தேடலைச் சொல்லும் அழகான திரைப்படம்.” “தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் சமூக அழுத்தங்களை இந்த படம் நுணுக்கமாகப் பேசுகிறது. மனநல மருத்துவர்களும் சொல்லும் மூன்று முக்கிய காரணங்களை இந்தக் கதையில் காணலாம்.”கோவிந்த வசந்தா மற்றும் கார்த்திக் நேதா படத்திற்கு மிக அருமையான இசை மற்றும் வரிகள் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு இத்திரைப்படத்தின் ஆன்மாவாக உள்ளது. இந்த திரைப்படம், உங்கள் அனைவரது நண்பர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கக்கூடியது. இளைய தலைமுறை மட்டுமல்லாது, எல்லா தரப்பினருக்கும் ரிலேட்டாகக்கூடிய படம். ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ‘குட் டே’ படத்திற்கு உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டுகிறோம் நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர், நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் பேசுகையில், “ஒரு படம் செய்வதாக இருந்து திடீரென அது ரத்து ஆனபோது, கையில ரூ.1000 தான் இருந்தது. அந்த நேரத்தில் நண்பர் அரவிந்த் ‘படம் பண்ணலாமா?’ என்றார். அப்படியே அந்த நம்பிக்கையில் ஆரம்பமானது ‘குட் டே’. அன்று நாங்கள் பேசிய ஒரு உரையாடல் தான் இந்த படத்துக்கு விதையாக அமைந்தது. பணம் இல்லாமல், நண்பர்களின் நம்பிக்கையால், உருவானது தான் இந்தப்படம். உருவாக்கப்பட்டது. சிலர் நம்பிக்கையோடு பணம் கொடுத்தார்கள், சிலர் சம்பளம் வேண்டாமென நடித்தார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள். என் நண்பர் கவிஞர் கார்த்திக் நேதாவின் வாழ்க்கை, அவர் சொன்ன குடிப்பழக்கம், மனநிலை பற்றிய உண்மையிலிருந்து தான் இந்தக் கதைக்கரு பிறந்தது. 40–50 மணி நேரம் அவருடன் பேசியதிலிருந்து இப்படம் உருவானது. நான் சினிமாவுக்கு நடிகனாகவே வந்தேன். ஆனால் இந்தப் படம் என் முதல் ஹீரோ வாய்ப்பு. அந்த நம்பிக்கையை எனக்குக் கொடுத்தது என் டைரக்டர் அரவிந்த். அவர்தான் என்னை நடிகனாகவே உருவாக்கினார். அவருக்கு என் நன்றி. ரவி சார், தீபக் ராஜு, லைட்மேன் மயில் அண்ணன், யூனியன் நண்பர்கள், பாண்டிச்சேரி ஷூட்டிங் குழு, கோவிந்த வசந்தா, மதன் , டைரக்ஷன் டீம்... எல்லோருக்கும் என் உயிர் நன்றிகள். இவர்களுடைய உழைப்பும் நம்பிக்கையும் இல்லாமல் இந்தப்படம் சாத்தியமில்லை. எஸ்ஆர் பிரபு சார் படம் பார்த்து நிம்மதியா தூங்குங்கன்னு சொன்னார். குகன் சார், ராஜமுருகன், பாலாஜி அண்ணன், ஜிதேஷ் (Trend Music) – எல்லோரும் இந்த படத்தைத் திரைக்குக் கொண்டு வர துணைநின்றார்கள். ஜூன் 27, 'குட் டே' திரையரங்கில் வெளியாகிறது. இது நம்ம எல்லாருடைய பயணமும், கனவுகளும் இணைந்த ஒரு உண்மையான கலைச்சோதனை. உங்கள் ஆதரவும், அன்பும் இந்தப் படத்திற்குத் தேவை. அனைவருக்கும் நன்றி.” என்றார்.
திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வரும் எளிய ஊழியன், இக்கட்டான நிலையில், தன் மேனேஜர் வீடு தேடிப் போகும் ஒரு இரவில், சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களும் தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் முழுக்க காமெடி கலந்து, உணர்வுப்பூர்வமான, சமூக அக்கறை மிக்க படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
பிரித்திவிராஜ் ராமலிங்கம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், காளிவெங்கட், மைனா நந்தினி, பக்ஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் முருகதாஸ், போஸ் வெங்கட் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு பூர்ணா JS மைக்கேல் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை மதன்குணதேவ் செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, பாடல்கள் மற்றும் கூடுதல் வசனத்தைப் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில், பிரபல தயாரிப்பாளர் S.R பிரபு இப்படத்தை வெளியிடுகிறார். வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...