Latest News :

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’. இப்படத்தின் கதையை எழுதி இயக்கி தயாரித்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் ஆர்.தவமணி.  ஒரு முரட்டு சிவ பக்தனின் பக்தியை வெளிப்படுத்தும் வகையில்  குடும்பம் சமூகம் சார்ந்த கதையாக  இந்தப் படம் உருவாகியுள்ளது. இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே.ராஜன் மற்றும் சிறு முதலீட்டுப் படத்தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

 

இந்தப் படத்தின் கதை நாயகனாக ஹரிஹரன் நடித்துள்ளார். ஸ்ரீ செழியன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் லொள்ளு சபா சாமிநாதன் நடித்துள்ளார் . தயாரிப்பாளர் ஆர். தவமணி,ஆசிஃபா , சன் டிவி கோபி,மருது, தாமோதரன், மதுரை ரஜினி சோமு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாலமன் ஒளிப் பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஆர்.டி ஜீவா இசையமைத்துள்ளார். பின்னணி இசை லெஷ்வின், படத்தொகுப்பு கிரி.

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் , விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே.ராஜன் பேசுகையில், “சின்ன படங்களை ஆதரியுங்கள். தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 240 படம் தயாராகிறது, போன வருஷம் கணக்குப்படி, இதில் பூஜையோடு நின்ற படங்கள், கால்வாசி முடிந்த படங்கள், பாதி முடிந்த படங்கள், முடித்தும் வெளியிட முடியாத படங்கள் என்று எவ்வளவோ படங்கள் முடங்கிப் போய் உள்ளன.படம் எடுப்பதை விட வெளியிடுவது இன்னும் சிரமமாக உள்ளது. கியூபுக்கு பணம்   கட்டுவது பப்ளிசிட்டி என்று ஐம்பது லட்சம் தேவைப்படுகிறது. கியூப்புக்கு பணம் கட்ட முடியாமல் 60 -70 படங்கள் இருக்கின்றன.

 

சின்ன படங்கள் எப்போது குடும்பம், தர்மம் என்ற கதை கொண்டதாக இருக்கும். அவை மக்களுக்குத் தீங்கு செய்யாதவை. 200 கோடி 300 கோடி என்று எடுக்கப்படும் படங்களில் பெரிய பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் மது ,குடி, கூத்து, போதை மருந்து , வெட்டு குத்து என்று  சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன. சமூகம் சீரழிய சினிமாவும் ஒரு காரணம் என்று சொல்லும் படி அந்த படங்கள் இருக்கும். பெரிய படங்களில் 70% இப்படித்தான் உள்ளன.இது மாதிரி சின்ன பட்ஜெட் படங்களில் அப்படிக் காட்டப்படுவதில்லை.கோடிக்கணக்கான ரூபாய் அப்படிச் செலவு செய்து  தீமையைப் பரப்புகிறார்கள். எனவே சின்ன பட்ஜெட்  படங்களை ஆதரியுங்கள்.வெற்றி பெறச் செய்யுங்கள்.

 

இப்போது கூட ஒரு  நடிகர், நல்ல நடிகர் குடும்ப பிரச்சினையால் போதை விவகாரத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் மதுவோ போதையோ பிரச்சனையிலிருந்து நமக்கு விடுதலை பெற்றுத் தராது. போதை தீயவழியில் தான் அழைத்துச் செல்லும் .எனவே தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மதுவிலக்கைக்  கொண்டு வர வேண்டும்.பொதுநலன் கருதி, நாட்டு நலன் கருதி, மக்கள் நலன் கருதி சொல்கிறேன். மதுவை ஒழித்து மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

தயாரிப்பாளர் தவமணி இந்தப் படத்தை யாரிடமும் கடன் வாங்காமல் தனது சொந்தக் காசில்  எடுத்து முடித்து இருக்கிறார்.அவர் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரை நான் பாராட்டுகிறேன். இப்படிப்பட்டவர்கள் சினிமாவுக்கு வரவேண்டும். இந்தப் படத்தை நான் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

Maheshwaran Magimai

 

சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச் செல்வன் பேசுகையில், “நான் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் .தயாரிப்பாளர்களின் நிலைமைகளை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆனால் சினிமாவுக்கு எதிரி வெளியிருந்து வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவுக்கு விரோதியாக இருக்கிறார்கள். எந்தப் படத்தைப் பற்றியும் தவறாகப் பேசுவது எதிர்மறை விமர்சனங்களைப் பரப்புவது சினிமாக்காரர்கள் தான். படத்தை பார்க்காமலேயே நன்றாக இல்லை ,தேறாது, ஓடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இப்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களை எல்லாம் ஓடவில்லை என்கிறார்கள்.ஏண்டா நீ படத்தை பார்த்தியா என்றால்,அவன் சொன்னான் இவன் சொன்னான் என்கிறான். படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள். அதுவும் விமர்சனம் நீங்கள் செய்யக்கூடாது, நீ விமர்சகன் கிடையாது.

 

உங்களுக்கு பிழைப்பு தரும் சினிமாவை ஏன் நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள்?அதுதான் உன் வேலையா ? இது அநியாயம் இல்லையா? மரியாதையாகப் படத்தை பார்த்து விட்டுப் பேசு, எவனோ பார்த்ததைப் பற்றி நீ விமர்சனம் செய்யாதே. இப்படி சினிமாக்காரர்களே விமர்சனம் செய்தால் இந்தத் துறை எப்படி உருப்படும்?  சினிமாக்காரர்களே சினிமா விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் இந்த சினிமா உருப்படும் . உண்மையிலேயே சினிமாவை நம்பினால் அது யாரையும் கைவிடாது.” என்றார்.

 

நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருக்கும் கதை நாயகன் ஹரிஹரன், ஆசிஃபா ,லொள்ளு சபா சாமிநாதன் ,இசை அமைப்பாளர்கள் ஆர்.டி. ஜீவா, லெஷ்வின், இயக்குநர் சிதம்பரம்,பாடல் ஆசிரியர்கள் செங்கதிர்வாணன்,ஹேமந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related News

10543

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery