Latest News :

இது எங்கள் கதையல்ல, உங்கள் கதை - '3 BHK' நன்றி தெரிவிக்கும் விழாவில் சித்தார்த் நெகிழ்ச்சி
Wednesday July-09 2025

சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 BHK' திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. '8 தோட்டாக்கள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு மனதைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

 

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் பேசுகையில் “படத்திற்கு வரவேற்பு நன்றாக இருந்தது. மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி”. என்றார்.

 

ஒளிப்பதிவாளர் ஜித்தன் பேசுகையில், “படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்”. என்றார்.

 

இசையமைப்பாளர் அம்ரித் பேசுகையில், “என்னுடைய முதல் தமிழ்ப்படத்தின் இசைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு மகிழ்ச்சியானது. வாய்ப்பு கொடுத்த அருண், ஸ்ரீ இரண்டு பேருக்கும் நன்றி”. என்றார்.

 

நடிகை சைத்ரா பேசுகையில், “கடந்த மூன்று நாட்களாக தியேட்டர் விசிட் போனோம். ஹவுஸ்ஃபுல் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது. இது என்னுடைய தமிழ்ப்படம். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை. இன்னும் படம் பார்க்காதவர்கள் கண்டிப்பாக வந்து பாருங்கள். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”. என்றார்.

 

நடிகை மீதா பேசுகையில், “இந்தப் படத்தின் தேங்க்ஸ் கிவிங் மீட்டில் இருப்பது கனவு போல உள்ளது. ஏனெனில், கடந்த ஒரு வருடகாலமாக அனைவரும் இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறோம். என்னுடைய முதல் படத்தில் இருந்து இப்போது வரை ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்கள் மற்றும் மீடியாவுக்கு நன்றி. இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது பெருமையாக உள்ளது. நன்றி”. என்றார்.

 

நடிகை தேவயானி பேசுகையில், “எங்களுக்கு ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த அருமையான படம் கொடுத்த இயக்குநர் ஸ்ரீக்கு நன்றி. நான் சினிமாத்துறைக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது. ஆனால், அருண் மாதிரியான தயாரிப்பாளரை இப்போதுதான் பார்க்கிறேன். படத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார். இப்படியான ஒரு தயாரிப்பாளர்தான் சினிமாத்துறைக்கு வேண்டும். இதுபோன்ற தியேட்டர் விசிட் நான் பார்ப்பது இதுதான் முதல்முறை. அருண் இன்னும் நிறைய படங்கள் செய்ய வேண்டும். இயக்குநர் ஸ்ரீயும் நிறைய நல்ல கருத்துகளைக் கொடுத்துள்ளார். சரத் சாருடன் நான் நடித்திருக்கும் அனைத்து படங்களும் ஹிட். சைத்ரா, மீதா இன்னும் அதிக படங்கள் நடிக்க வேண்டும். சித்தார்த் எங்கள் வீட்டுப் பையன். எங்கே இருந்தாலும் அந்த இடத்தை எனர்ஜியாக வைத்திருப்பார்” என்றார்.

 

நடிகர் சித்தார்த் பேசுகையில், “இந்தப் படத்தின் கருத்து தான் ஹீரோ. அப்படியான கதையை அமைத்துக் கொடுத்த எனது படக்குழுவினருக்கு நன்றி. என்னுடைய நாற்பதாவது படம் வெற்றியாக அமைந்துள்ளது. எந்த நம்பிக்கையில் இந்தப் படத்தை எடுத்தோமோ அதையே பார்வையாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை படித்து முடித்ததும் என் அப்பாவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் எனத் தோன்றியது. அதே மாதிரியான போஸ்டர் தான் இப்போது தேங்க்ஸ் கிவிங் மீட்டிலும் உள்ளது. இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவருமே கதையை விரும்பி வேலை பார்த்தார்கள். எல்லா கதாபாத்திரங்களையும் பார்வையாளர்கள் தங்களுடனும் தங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் ரிலேட் செய்தார்கள். இந்தப் படம் இவ்வளவு அழகாக வரக் காரணமே சரத் சார், தேவயாணி மேம் தான். வாழ்க்கையில் இவ்வளவு உயரம் வந்த பிறகும் ஒரு சாதாராண மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையை திரையில் கொண்டு வரும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து வலியை புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது பெரிய விஷயம். சைத்ரா, மீதா இருவரது திறமைக்கு இன்னும் பல நல்ல படங்கள் கிடைக்கும். தயாரிப்பாளர் அருண் விஸ்வாவும் இந்தப் படத்தை தன் குழந்தையாகப் பார்க்கிறார். இது எங்கள் கதையல்ல, உங்கள் கதை!” என்றார்.

 

நடிகர் சரத்குமார் பேசுகையில், “ஒரு சிறிய வீட்டிற்குள் நடப்பதை ஒளிப்பதிவில் அழகாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். சண்டை, பாட்டு என கமர்ஷியல் விஷயங்களைக் கொண்டு வராமல் தான் நினைத்ததை திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ். அவர் ரொம்பவே மென்மையானவர். அம்ரித் இசையில் பின்னியெடுத்திருக்கிறார். அவர் என்னுடைய வாட்ச் பிடித்திருக்கிறது என்று சொன்னார். அவருக்கு பிடித்த என்னுடைய வாட்சையே பரிசளிக்கிறேன். தேவயாணி நடிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை. அருண் விஸ்வா தயாரிப்பில் தேவயாணி இயக்கத்தில் நானும் சித்தார்த்தும் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம். மீதாவும் சைத்ராவும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

 

இயக்குநர் ஸ்ரீகணேஷ் பேசுகையில், “மீடியா மக்கள் நல்லபடியாக படம் பற்றி எழுதி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு நன்றி. என்னுடைய இரண்டாவது படம் சரியாக எடுக்க முடியாமல் போனது. ஆனால், மூன்றாவது படத்தை நன்றாக உழைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த வார்த்தையை ‘3BHK’ திரைப்படம் காப்பாற்றி கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எமோஷனல், ஃபேமிலி ஸ்டோரி எடுத்தால் நிச்சயம் குடும்பம் குடும்பமாக வந்து பார்ப்பார்கள் என்று நம்பினோம். அது இப்போது நடந்து வருகிறது. இது எங்களுடைய கதை என படம் பார்ப்பவர்கள் சொல்வதை கேட்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. படத்திற்கு வாய்ஸ் ஓவர் செய்து கொடுத்த கார்த்தி சாருக்கு நன்றி. எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் சிறுகதையில் இருந்துதான் இந்தப் படம் தோன்றியது. மேக்கப் ஆர்டிஸ்ட் சிவா சார் மற்றும் விஎஃப்எக்ஸ் குழுவினருக்கு நன்றி. கடினமாக உழைத்த படக்குழுவினர், தொழில்நுட்பக் குழுவினர், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி. இன்னும் ஒருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை படம் பார்த்துவிட்டு தன்னுடைய முழு ஆதரவையும் நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்தார். அவர் எனக்கு அண்ணன் போலதான். அதேபோல, படத்தின் முதல் காட்சியை தொடங்கி வைத்த இயக்குநர் ராம் அவர்களுக்கும் நன்றி”. என்றார்.

 

தயாரிப்பாளர் அருண் விஸ்வா பேசுகையில், “மொத்த அணிக்குமே இந்த மேடை எமோஷனல் தருணம். ஒவ்வொரு நாளும் திரையரங்குகளில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சினிமாவில் ஜெயிப்பது முக்கியம் என்றால், வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட முக்கியம். சினிமாவில் நல்ல நண்பர்கள் சம்பாதித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தை எத்தனை நாட்கள் தியேட்டரில் ஓட வைக்க முடியுமோ அதை என் தரப்பில் இருந்து நிச்சயம் நான் செய்வேன். படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளோம். மீதா  கதாநாயகியாக நடித்துவிட்டு இப்போது தங்கை கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். அதற்கான பலன் கிடைக்கும். அதேபோல, சைத்ராவுக்கு அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. சாந்தி எனப் பெயர் வைத்ததுமே தேவயாணி மேம் எனக்குள் பர்சனலாக கனெக்ட் ஆகிவிட்டார். சரத் சார் பார்வையாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் எல்லாமே எங்கள் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன். கதையைக் கேட்டதுமே வேறு எது பற்றியும் யோசிக்காமல் சித்தார்த் ஒத்துக் கொண்டார். சீக்கிரம் அவரும் இயக்குநராவார். இந்தப் படத்திற்கு சிவகார்த்திகேயன் அண்ணன் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. ராம் சாரின் ‘பறந்து போ’ படமும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இரண்டு படங்களையும் குடும்பமாக வந்து பார்த்த, பார்க்க இருக்கும் பார்வையாளர்களுக்கு நன்றி” என்றார்.

Related News

10551

45 வது படத்தில், 46 நடிகர்களுடன் நடித்திருக்கும் ஜீவா!
Monday January-12 2026

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

Recent Gallery