Latest News :

’யாரு போட்ட கோடு’ திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா
Friday November-28 2025

டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’.

 

இசைக்கவிஞர் செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜான்ஸ் வி.ஜெரின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸெ.நா.ராஜசேகரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். தீனா, ராதிகா, சிவாஜி ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைக்க, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கார்த்திக் பி.ஆர்.ஓ-வாக பணியாற்றுகிறார்.

 

சமூகத்திற்கு தேவையான கருத்தை தாங்கி உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், இயக்குநர் வி.இசட்.துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் பேசுகையில், “’யாரு போட்ட கோடு படத்தை தயாரித்தது சவால் நிறைந்த அனுபவமாக இருந்தது. மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் எப்படி தயாரித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், எங்கள் பட தயாரிப்பில் நிறைய பிரச்சனைகள் இருந்தது. அது அனைத்தையும் சமாளித்து வெற்றிகரமாக தயாரித்ததற்கு நிறைய பேரின் ஒத்துழைப்பு இருக்கிறது. என் படக்குழுவுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு நன்றி, கலைஞர் டிவி சுந்தரம் சார் மற்றும் விநியோகஸ்தர் சாருக்கு. இந்த படத்தின் கான்சப் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும், நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். உங்கள் ஒத்துழைப்பு தேவை, நன்றி.” என்றார்.

 

படத்தின் இயக்குநர் லெனின் வடமலை பேசுகையில், “வாழ்க்கையில் உச்சாகம் முக்கியம், எப்போதும் உச்சாகமாக இருக்க வேண்டும். இந்த படத்திற்கு ஆண்டவன் தான் இயக்குநர். ஆண்டவனுக்கும், எங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பு தான் தயாரிப்பாளர். இயக்குநர் குழு ராஜேஷ் அண்ணன், 65 வயதில் இளைஞராக எனக்கு பக்கபலமாக இருந்தார். நான் இதில் கடைசி உதவி இயக்குநராக தான் பணியாற்றினேன். இந்த படத்தில் பெரிய நடிகர் நடிப்பதாக இருந்தது, பெரிய தயாரிப்பாளர்  ஆனால் அது கைவிடப்பட்டது. 10 வருடங்களாக படம் இயக்கப் போகிறேன், என்று கூறி ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்தேன். இவன் எங்க படம் பண்ண போறான், உருப்பட போறான், என்று சொன்னார்கள். கேலி, கிண்டல், அவமானம் என நிறைய பார்த்து விட்டேன். ஆனால், அவை அனைத்தையும் ஒரு காட்சியாகவும், என்னை ஏளனம் செய்தவர்களை கதாபாத்திரங்களாக மட்டுமே பார்ப்பேன். என் மனதை மட்டும் பிடிங்கி ஆகாயத்தில் எரிந்து விடுவேன், அது அங்கேயே பத்திரமாக இருக்கும், நான் எதிர்கொள்ளும் காட்சிகள் முடிந்த பிறகு மீண்டும் என் மனது எனக்கு வந்துவிடும்.

 

ஒரு படம் இயக்குவதற்கு ஆயிரம் போராட்டம், படம் கிடைத்த பிறகு ஐயாயிரம் போராட்டம், படம் முடிந்த பிறகு பன்மடங்கு போராட்டம், இந்த போராட்டங்கள் அனைத்தையும் நான் காட்சியாக தான் பார்த்தேன், விளையாட்டாக எடுத்துக் கொண்டேன். ரசித்தேன், மனிதர்களை படித்தேன். ஒரு படம் பண்ண அசுர பலம் வேண்டும், இயக்குநர் தாஸ்னத்தில் இருப்பவர்களுக்கு அசுர பலம் வேண்டும். எங்கேரஜ் பண்றவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும், கெட்ட வைபை தள்ளியிருக்க வேண்டும். டாக்ஸிக் மக்களிடம் இருந்து பாதி தள்ளி வைத்தாலே பாதி வெற்றி கிடைக்கும், முழுவதுமாக தள்ளி வைத்தால் எங்கேயோ போய் விடலாம்.அதனால், நான் டாக்ஸிக் மனிதர்களை தள்ளி வைத்திருக்கிறேன்.

 

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள் மேடையில் அமர்ந்திருப்பவர்கள் அல்ல, கிழே அமர்ந்திருப்பவர்கள் தான். இந்த படத்திற்கு இரண்டு கண்களை போல் இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் செளந்தர்யன் மற்றும் இசையமைப்பாளர் ஜெயக்குமார் இசையமைத்திருக்கிறார்கள். இருவரது பாடல்களும் மிக சிறப்பாக வந்திருக்கிறது.

 

படத்தில் மக்களுக்கு தேவையான நல்ல விசயங்கள் பற்றி சொல்லியிருக்கிறேன். காற்று பேதம் பார்க்காமல் அனைவருக்கும் நன்மை தருகிறது. நீர் எந்தவித பாகுபாடு இன்றி அனைவரது தாகத்தை தீர்ப்பதோடு, மற்ற தேவைகளுக்கும் பயன்படுகிறது. இந்த பூமியும் அப்படி தான் மனிதர்களுக்கு மட்டும் இன்றி அனைத்து ஜீவராசிகளை வாழ வைக்கிறது. ஆகாயமும் இப்படி தான். பஞ்ச பூதங்கள் அனைத்தும் இப்படி பேதம் பார்க்காமல், பெரியவன், சிறியவன் பார்க்காமல் இருக்கும் போது, அதனை உள்ளடக்கிய மனிதன் மட்டும் ஏன் சாதி, பேதம் பார்க்க வேண்டும், என்ற கேள்வி தான் இந்த படம். அனைவரும் சமமாக, சமத்துவத்தோடு வாழ வேண்டும் என்பது தான் ‘யாரு போட்ட கோடு’ படம். நன்றி.” என்றார்.

 

இயக்குநர் வி.இசட்.துரை பேசுகையில், “இயக்குநர் லெனின் கிட்ட ரொம்ப பிடித்தது, இயல்பான மனிதர். மிகவும் சிம்பிளாக இருப்பதோடு, மனதில் இருப்பதை தெளிவாக பேசினார். இந்த நிகழ்வு ஒரு குடும்ப விழா போல் இருக்கிறது. எனது அன்புக்கு பாத்திரமானவர் பிரபாகரன். அவர் நல்ல மனிதர். தலைநகரம் 2 பெரிய படம், அந்த பெரிய படத்தை அவர் முதலீடு செய்து தயாரித்தார். ஒரு தயாரிப்பாளர் ஹீரோவாக மாறியிருப்பது இங்கு நடந்திருக்கிறது. அவர் இந்த படத்தில் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாக்யராஜ் சாரும் முதல் படத்தில் வாத்தியாராக தான் நடித்தார். அவர் ரொம்ப இன்னசண்டாக நடித்திருக்கிறார். ஆனால், பாடல் காட்சியில் மட்டும் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடித்திருக்கிறார். மெஹாலி என் நண்பர், நிறை முறை என்னை சந்தித்திருக்கிறார். விரைவில் நான் அவருடன் பணியாற்றுவேன். இசையமைப்பாளர் செளந்தர்யன் சார், காதல் கடிதம் பாடலை ரொம்ப அழகாக கம்போசிங் பண்ணியிருக்கார். இந்த படத்திலும் பாடல்கள் நன்றாக இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் டாக்டர்.வினிதா கோவிந்தராஜனுக்கு வாழ்த்துகள். எனக்கு மருத்துவர்கள் ரொம்ப பிடிக்கும், எனது மகன்கள் இருவரும் மருத்துவம் தான் படிக்கிறார்கள். உங்கள் குழுவின் உழைப்பு, முயற்சி எனக்கு பிடித்திருக்கிறது. பிரபாகரன் ஏற்கனவே தயாரிப்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார். நாங்கள் மறுபடியும் ஒரு பெரிய புரொஜக்ட் பண்ணப் போகிறோம். என்னுடைய படத்திலும் அவரை நடிக்க வைப்பேன். ஆனால், அவருக்கு ஹிரோயின் கொடுக்க வேண்டும். பிரபாகரன் ஒரு நல்ல நடிகராக வர வேண்டும். விஜயகாந்த் சார், முரளி சாரை தொடர்ந்து கருப்பு நிறத்தில் மக்களை கவர்ந்திழுக்கும் மற்றும் பரிச்சயமாக இருப்பது போல், பிரபாகரனும் அப்படி வர வேண்டும், என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.

 

காவதுறை துணை ஆணையர் வலவன்  பேசுகையில், “சிறிய காரியத்தை யார் வேண்டுமானாலும் செய்வார்கள், ஆனால் பெரிய காரியத்தை சிறியவர்களான இவர்கள் செய்திருப்பது வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன். இயக்குநர் அதிகம் பேசியதாக சொன்னார்கள், ஆனால் விரதத்தின் வழி. அந்த வழி உண்மையில் நல்ல வழியாக, பிரசவத்தின் போது குழந்தையின் முதல் சத்தத்தை வைத்தே குழந்தை நன்றாக இருக்கும் என்று கிராமத்தில் சொல்வார்கள், அதுபோல் இந்த மேடையில் வெளிப்பட்ட முதல் சத்தமே இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி பெற வைக்கும் என்ற நம்பிக்கை வருகிறது.

 

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் டீச்சர்ஸ் ஸ்டிக், ஆசிரியரின் கைதடி, இப்போது எல்லாம் இல்லை. பிரபாகரன் என்றால் ஒளி என்று அர்த்தம். அவரது கண்களில் காந்தம் இருக்கும், அதில் அனைத்து ரசிகைகளும் விழ வேண்டும். லெனின் என்றால் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தவர், இந்த படத்தின் லெனினும் அதுபோன்ற புதிய அத்தியாயத்தை உருவாக்கி, வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் செளந்தர்யன் பேசுகையில், “யாரு போட்ட கோடு, என்பது எவண்டா பண்ணான், என்னாச்சு என்று சில விசயங்களில் நேருக்கு மாறாக நடக்கும் போது, வேதனை தரும்படி நடக்கும் போது, பாதிக்கப்படும் போது, எவண்டா பண்ணியது என்று கேட்பார்கள். இது நல்ல விசயத்துக்கும் சொல்வதுண்டு. இயக்குநர் இப்படி சொன்னதற்கு காரணம், அவர் பார்க்கும் சமூகத்தில் நிறைய தீயதை பார்த்திருக்கிறார். இந்த சமூகம் இப்படி போகிறதே, என்று வேதனைப்பட்டவர், அதற்காக ஒரு கதையை எழுதி அவர் வைத்திருக்கும் தலைப்பு தான் ‘யாரு போட்ட கோடு’.

 

இந்த படத்தில் பாடல்கள் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இயக்குநர் லெனின் மிக பிராமாதமான வரிகளை கொடுத்திருக்கிறார். அவருக்கு இது தான் முதல் பாடலாசிரியர் அனுபவம். அவர் என்னிடம் சில கவிதைகளை எழுதி காண்பித்த போதே அவரால் பாடல் எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்தது. என்னிடம் பலர் பாடல் எழுத வாய்ப்பு கேட்டு வருவார்கள், ஆனால் அவர்களால் முடியுமா முடியாதா என்பதை பார்த்ததும் சொல்லி விடுவேன். அந்த வகையில், இந்த படத்தின் பாடல்கள் எழுதும் போது, இயக்குநரின் வரிகள் அவரால் பாடல் எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அதன்படி, அவர் சிறப்பாக பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். 

 

இந்த படத்தில் குழந்தைகளை வைத்து நல்ல விசயங்களை சொல்லியிருக்கிறார். படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும், ஊடகங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.

 

நாயகன் பிரபாகரன் பேசுகையில், “சினிமா எனக்கு தொடர்பு இல்லாத நிலையில், வி.இசட்.துரை அண்ணன் மூலமாக தலைநகரம் 2 படத்தை தயாரித்தோம். எனக்கு அரசியல் தான் தொழில். எனக்கு சினிமா தெரியாது. லெனின் ஊருக்கு வந்த போது, என்னை நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நடிக்க தெரியாமல் நடித்திருக்கிறேன். அனைத்து நல்ல விசயங்களையும் கீழ் மட்டத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்பதை சொல்கிறது. அதனால் தான் பள்ளி மாணவர்களிடம் இருந்து நல்லவற்றை ஆரம்பிக்க வேண்டும், இந்த நாட்டில் சமத்துவமாக  வாழ வேண்டும், என்ற கருத்தை தான் படம் பேசுகிறது.

 

பெரிய நடிகர்கள் பேச்சும், அவர்களது கருத்தும் தான் அனைத்து மக்களிடமும் சென்றடைகிறது. ஆனால், இதுபோன்ற நல்ல விசயங்களை சிறிய நடிகர்கள் சொன்னால் அது சென்றடைவதில்லை. எனவே ஊடக நண்பர்கள் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நான் சினிமாவில் ஜெயிக்க வேண்டும், தொடர்ந்து படம் நடிக்க வேண்டும் என்பதற்காக இதை உங்களிடம் கேட்கவில்லை. குழந்தைகளிடம் இருந்து நல்ல விசயத்தை தொடங்கினால் எதிர்காலத்தில் அவர்கள் நல்லவர்களாக வாழ்வதால் நாட்டில் குற்றங்கள் ஏற்படாது, என்ற கருத்தை சொல்லியிருக்கும் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், நன்றி.” என்றார்.

 

நாயகி மேகாலி மீனாட்சி பேசுகையில், “முதலில் தினா மாஸ்டருக்கு நன்றி சொல்லனும், அவர் இங்கே இல்லை, இருந்தாலும் அவருக்கு என் நன்றிகள். லெனின் சார் நடிகராகவும், இயக்குநராகவும் இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார். எனக்கு நிறைய விசயங்களை பொறுமையாக சொல்லிக் கொடுத்தார், அவருக்கு நன்றி. தயாரிப்பாளர் மேடம் எனக்கு துணையாக இருந்தார், அவருக்கு என் நன்றி. நாயகன் பிரபாகரன் நன்றாக நடித்திருக்கிறார். நாயகன் பிரகாரன் சாருக்கு நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்து நல்லபடியாக ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்கு முதல் படம் போல் இருக்காது, எதிர்காலத்தில் அவர் நிறைய படங்களில் நடிக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன். ராதிகா மாஸ்டருக்கு நன்றி. மலைப்பிரதேசங்களில் படப்பிடிப்பு நடந்தது, அதற்கு காரணம் தொழில்நுட்ப கலைஞர்களின் கடுமையான உழைப்பு தான். யார் போட்ட கோடு டிசம்பர் மாதம் வெளியாகிறது, அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஊடகத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி.” என்றார்.

 

’யாரு போட்ட கோடு’ படத்தை தமிழகம் முழுவதும் ஃப்ரைடே பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் ஜின்னா வெளியிடுகிறார்.

Related News

10775

’ரிவால்வர் ரீட்டா’ குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படம் - நடிகை கீர்த்தி சுரேஷ் உறுதி
Wednesday November-26 2025

இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’...

முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாடகி மாலதி லக்‌ஷ்மண்!
Wednesday November-26 2025

இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் தயாரிக்கும் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி!
Wednesday November-26 2025

நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே...

Recent Gallery