’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast). தற்போதைய காலக்கட்ட காதல் மற்றும் இளைஞர்கள் காதலை பார்க்கும் விதத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் ராணவ் நாயகனாக அறிமுகமாகிறார். மலையாள நடிகை ரோஸ்மின் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சம்பத் குமார், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து மற்றும் விவேகா எழுதியுள்ளனர். எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எஸ்.பாஸ்கர் மற்றும் சுஜித் படத்தொகுப்பு செய்கின்றனர். ஆர்.கே.நாகு கலை இயக்குநராக பணியாற்ற, ஸ்ரீதர் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கிரிஜா வரதராஜ் தயாரித்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணியை எட்டியுள்ள இப்படத்தை ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, நாயகன் ராணவ் , நாயகி ரோஸ்மின், நடிகர் கிருத்திக் மோகன் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா படம் குறித்து கூறுகையில், “முழுக்க முழுக்க காதல் கதை தான், அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் காதல் எப்படி இருக்கிறது, இன்றைய தலைமுறையினர் காதலை எப்படி பார்க்கிறார்கள், பிரிவை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பற்றி தான் படம் பேசுகிறது.
இந்த கதையை புதுமுகங்களை வைத்து தான் எடுக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதற்கு காரணம், புதுமுகங்கள் நடித்தால் தான், நான் சொல்ல வரும் கதை மக்களை சென்றடையும், இல்லை என்றால் நடிகர்கள் தான் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். அதன்படி, ராணவையும், ரோஸ்மினையும் ஆடிசன் வைத்து இந்த கதைக்காக தேர்வு செய்தேன். இவர்கள் இருவரும் நான் நினைத்ததை விட மிக சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். இவர்களது நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்திற்காக ஜி.வி.பிரகாஷை குறுகிய காலத்தில் தான் அனுகினேன். அப்போது அவர் பிஸியாக இருந்ததோடு, தேசிய விருதும் வென்றிருந்தார். இந்த படத்தில், ஐரோப்பிய நாடு மற்றும் பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், அந்தக்காலக்கட்டத்தில் பாடல் காட்சியை படமாக்க வேண்டும் என்பதால் நான் அவரை அவசரப்படுத்தினேன். அவர் எனக்காக குறுகிய காலக்கட்டத்தில் பாடல்களை போட்டுக்கொடுத்தார்.
தற்போதைய காலக்கட்ட காதல் பிரச்சனை மற்றும் பிரிவுகளுக்கு தீர்வோ அல்லது அறிவுரையோ சொல்லவில்லை, ஆனால் படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் யோசிப்பார்கள். Accept the reality என்று சொல்வதும் அதுதான், எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்பது தான் இந்த படத்தின் மையக்கரு.” என்றார்.

நாயகன் ராணவ் பேசுகையில், “இந்த படம் பிக் பாஸுக்கு முன்பாகவே ஒப்பந்தமான படம். சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த எனக்கு, இப்படி ஒரு வாய்ப்பு, அதுவும் இயக்குநர் காந்தி கிருஷ்ணா சார் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாவது என்பது நினைத்து பார்க்காத ஒன்று. சாரிடம் ஆடிசனுக்கு சென்ற பிறகு என் மீது நான் வைத்த நம்பிக்கையை விட, அவர் என் மீது அதிக நம்பிக்கை வைத்தது எனக்கு பிரமிப்பாக இருந்தது. என்னை நிச்சயம் பெரிய ஹீரோவாக ஆக்கி காட்டுவேன், என்று அவர் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது.
சார், சொன்னது போல் இந்த படம் தற்போதைய காலக்கட்ட காதலையும், காதலை தற்போதைய இளைஞர்கள் பார்க்கும் விதத்தையும் எதார்த்தமாக பதிவு செய்திருப்பதோடு, பிரிந்த காதலர்களையும், தம்பதியினரையும் யோசிக்க வைக்கும். இந்த படத்தை பார்த்தால் பிரிந்த காதர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதேபோல், விவாகரத்து வாங்க முடிவு செய்திருக்கும் தம்பதி அந்த முடிவை மாற்றிக் கொள்வார்கள்.” என்றார்.
நாயகி ரோஸ்மின் பேசுகையில், “நான் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். தமிழில் இது தான் எனக்கு முதல் படம். இந்த படத்தில் நடித்ததன் மூலம் நான் பல விசயங்களை கற்றுக்கொண்டேன். என் சினிமா பயணத்தில் இந்த படம் மிக முக்கியமானதாக இருக்கும். இயக்குநர் காந்தி கிருஷ்ணா சாரின் எழுத்து மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது. இப்படி ஒரு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவது மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருத்திக் மோகன் கூறுகையில், “’அஞ்சாமை’ என்ற படத்தில் நடித்திருக்கிறேன். மேலும், சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். அதிலும், படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கிறது. இதற்கு முன்பு இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்பதால், கொஞ்சம் சவலாகவே இருந்தது.” என்றார்.
தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்தாலும், உங்களது மூன்றாவது படத்திற்கு இவ்வளவு பெரிய இடைவெளி ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா, “ஒரு படம் முடிந்த உடனே அடுத்த படத்திற்கான கதை விவாதம் மற்றும் திரைக்கதையை உடனடியாக முடித்து விடுவேன். ஆனால், அது படமாக்கும் போது ஏற்படும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தான் இந்த இடைவெளி ஏற்படுகிறது. ‘கரிகாலன்’ படத்திற்காக சுமார் மூன்று வருடங்கள் பணியாற்றினேன். ஆனால், அந்த படம் எதிர்பாரத சூழ்நிலைகளால் நின்று விட்டது. இருந்தாலும், நான் என் அடுத்தடுத்த கதைகளை எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். அந்த வகையில் என்னிடம் தற்போது 13 கதைகள் முழுமையான திரைக்கதையோடு இருக்கிறது. எனவே நான் தொடர்ந்து பயணித்துக் கொண்டு, எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், அது படமாகும் போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படிப்பட்ட இடைவெளிகள் ஏற்படுகிறது. இது சினிமாவில் வழக்கமானது தான்.” என்றார்.
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...
பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி...