Latest News :

சிவாஜி சிலையை மெரினா கடற்கரையில் மீண்டும் நிறுவ வேண்டும் - திரையுலத்தினர் கோரிக்கை
Saturday August-12 2017

மெரினா கடற்கரை அருகே அமைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டுவிட்ட நிலையில், தற்போது கட்டப்பட்டு வரும் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அச்சிலை நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இந்த நிலையில், சிவாஜி கணேசனின் சிலையை மெரினா கடற்கரையிலேயே நிறுவ வேண்டும் என்று பல திரையுலக பிரபலங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், நாம் தமிழர் கட்சியின் தலைவரும், இயக்குநருமான சீமான் ஆகியோர் இன்று கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை மெரினா கடற்கரையில் மீண்டும் நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

 

பிறகு இது குறித்து மூவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, எங்களது அனைத்து உறுப்பினர்களின் சார்பாக அன்பு கலந்த வணக்கங்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழனாகப் பிறந்தது தமிழர்களாகிய நாம் பெற்ற பேறு.

 

இந்திய சினிமாவை முதன் முதலில் உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்ற நடிகர். இயக்குநர் ராஜ்கபூர், சிவாஜியின் முகலட்சணம் நடிப்புக் கலைக்காகவே வடிவமைக்கப்பட்டது என்றார்.  இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சிவாஜியின் பாதம் தொட்டு ஆசீர்வாதம் பெற்றார். நடிப்பில் ஆல் ரவுண்டர் திலீப் குமார் நடிப்பில் சிவாஜிக்கு நிகர் கலையுலகில் எவருமில்லை என்று பாராட்டினார்.

 

அமெரிக்காவின் முன்னணி நடிகர் மார்லின் பிராண்டோ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இலக்கணம் படைத்தவர்  என்று புகழாரம் சூட்டினார்.  நடிப்புக்கலைக்கு உலகின் எந்த பகுதியில் களம் அமைத்தாலும் அந்தக் களத்தில் தன் நடிப்புத்திறனால் பெரும் வெற்றி கண்டவர் நமது நடிகர் திலகம் அவர்கள். 

 

இப்படி கோடானுகோடி தமிழர்களுக்கும் தன் நடிப்புத் திறமையால் பெருமையைத் தேடித்தந்தவரை அடையாளம் கண்டு அரங்கேற்றியவர்  பேரறிஞர் அண்ணா அவர்கள். பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் பாசறையில் உருவான பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்த் திரைப்படங்களில் அரசியலைப் புகுத்தி 1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆட்சியையே புரட்டிப் போட்டவர்.  அவர் அன்று கைப்பிடித்த அரியணை வேறு எவர் கையிலும் சிக்காமல் இன்றும் ஆலமரம் போல தழைத்துக் கொண்டிருக்கின்றது. தமிழர்களும், தமிழும் ஆட்சியில் ஏறி அமர தமிழ்த் திரைப்படங்களும் தமிழ் முன்னணி நடிகர்களும் பெருமளவில் தங்களது உழைப்பை பங்களிப்பாக கொடுத்திருக்கின்றனர் என்பதை  நம்மை விட அண்ணாவின் தம்பிகளுக்கு தேர்தலில் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் தமிழ் மக்கள் அறிவார்கள்.

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திரைப்படங்களில் பேசிய தமிழ் உலக மக்களிடம் தமிழ் மொழியின் வளமையை எடுத்துச் சென்றது.  தமிழர் வாழ்வியல் கருத்துக்களையும், தமிழ் நாகரிகத்தையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டியது. 

 

உரைநடைத் தமிழின் நவரச உணர்வுகளையும், பேசும் செந்தமிழின் இனிமையையும், மக்களின் செவிகளில் தேனாக ஊற்றியவர் சிவாஜி கணேசன். தாய்த்தமிழ் அன்னையின் மூத்த மகனான அவர் மறையவில்லை. சாதனை புரிந்தவராக ஊடகங்களில் நம் தாய்த்தமிழுடன்  வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால், வங்கக் கடற்கரையில் உலவும் தமிழ்த்தென்றல் அவரது சிலையைத் தழுவியபடி அவரை பாராட்டிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது தமிழ்ப் படைப்பாளிகளாகிய எங்களது ஆவல் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆவலும் கூட.

 

எனவே, நடிகர் திலகம் அவர்களின் நல்லுருவச் சிலையை மெரினா கடற்கரைச் சாலையிலேயே நல்லதொரு இடத்தை தேர்ந்தெடுத்து நீங்கள் நிறுவிட வேண்டும் என்று அன்புடன் எங்களது கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறோம். இதையே உலகத்தமிழர்களின் கோரிக்கையாகக் கருதி நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டுமென்று கரம் கூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.

 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

197

தமிழக முதல்வரைச் சந்தித்த ’வித் லவ்’ தயாரிப்பாளர்கள்!
Wednesday February-18 2026

திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ்’ (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர்  மு...

’தலை நிமிர்’ திரை விருதுகள் 2026
Wednesday February-18 2026

தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது...

Recent Gallery