முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா மறைந்த பிறகும் மக்களின் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், இவர்கள் மறைந்த பிறகும் நடிகர்களாக புதிய படம் ஒன்றில் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பதை யாரும் யோசித்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அது தற்போது நடந்திருக்கிறது.
ஆம், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஹீரோ ஹீரோயினாக நடிக்கும் ’கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற திரைப்படம் உருவாக தொடங்கிவிட்டது.
கடந்த 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை பெற்றதோடு, பிரம்மாண்டமான படமாகவும் திகழ்ந்தது. அப்படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து எம்.ஜி.ஆர், அதன் இரண்டாம் பாகமாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தை திட்டமிட்டிருந்தார். பிறகு அரசியலில் பிஸியாகி முதல்வராகிவிட்டதால், அவரால் அந்த படத்தை எடுக்க முடியவில்லை.
இதற்கிடையே, எம்.ஜி.ஆரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அவருடன் பல படங்களில் நடித்த அவரது நண்பர் மறைந்த ஐசரி வேலனின், மகன் ஐசரி கணேஷ், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தை அனிமேஷனில் உருவாக்கி வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் படத்திற்கு பூஜைப்போட்ட ஐஸரி கணேஷ், என்.ஜி.ஆர்-க்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் பெயரை விரைவில் அறிவிப்பதாக கூறியிருந்ததோடு, எம்.ஜி.ஆர்-உடன் பல படங்களில் நடித்த பல முன்னணி ஹீரோயின்களில் யாரை தேர்வு செய்யலாம் என்ற பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், மறைந்த முதல்வரும், எம்.ஜி.ஆர்-உடன் 28 படங்களில் ஜோடியாக நடித்தவருமான ஜெயலலிதாவை, இப்படத்தின் ஹீரோயினாக தேர்வு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பை ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளில் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படக்குழு வெளியிட்டது.
தமிழக மக்களின் உணர்வுகளில் கலந்திருக்கும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஜோடியாக நடிக்கும் இப்படம் அனிமேஷன் படம் என்றாலும், இப்படத்தின் மூலம் அவர்களை மீண்டும் திரையில் பார்ப்பதற்கான ஆர்வம் தற்போதே மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “புரட்சி தலைவரின் 101வது பிறந்த நாளில் படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் ஆளுமைகள் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தனர். முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தில் யாரை நாயகியாக நடிக்க வைக்கலாம் என நிறைய யோசித்தோம். புரட்சி தலைவரோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்த ஒரே நாயகியான புரட்சி தலைவி அம்மா அவர்கள் நம்மிடையே இன்று இல்லை. இந்த நேரத்தில் அவர்களையும் இந்த படத்தில் நடிக்க வைக்க விரும்பினோம். அவர்கள் இணைந்து நடிக்கும் 29வது படம் இது. நம்பியார், நாகேஷ், ஐசரி கணேஷ், தேங்காய் சீனிவாசன் ஆகியோரை மீண்டும் இந்த படத்தின் மூலம் திரையில் பார்க்கும் நோக்கத்தில் இந்த படம் உருவாக இருக்கிறது.
எனக்கு 7 வயதாக இருந்த போது வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தை 21 முறை பார்த்திருக்கிறேன். அதன் இரண்டாம் பாகத்தின் கதையும் எனக்கு தெரியும். குழந்தைகள், இளைஞர்கள் உட்பட எல்லோராலும் இன்றும் ரசிக்க கூடிய வகையில் படம் இருக்கும். எஸ்பி முத்துராமன், கே எஸ் ரவிகுமார், பாக்யராஜ், பாண்டியராஜன் ஆகியோரரிடமும் இந்த கதையைப் பற்றி விவாதித்திருக்கிறோம். முன் தயாரிப்பு பணிகள் முடிந்து விட்டது. லாஸ் ஏஞ்சலஸ், பெங்களூரு ஆகிய இடங்களில் படத்திற்கான வேலைகளை துவக்க இருக்கிறோம். எம் ஜி ஆர் கத்தி சண்டை போட்டதை நிறைய படங்களில் பார்த்து விட்டோம். அதனால் இந்த படத்தில் நவீன எந்திரங்களை கையாள்வதையும் வைத்திருக்கிறோம். கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, சூடான் ஆகிய இடங்களை சுற்றி கதை நடக்கும். லாப நோக்கத்துக்காக இந்த படத்தை எடுக்கவில்லை. லாபம் வந்தால் அதை நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்கு நன்கொடையாக அளிப்போம். படத்தில் நடிக்கும் மறைந்த நடிகர்களின் குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க இருக்கிறோம்.” என்றார்.
இப்படத்தின் இயக்குநர் அருள் மூர்த்தி பேசும் போது, “இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. ரத்தம், உணர்வு எல்லாவற்றிலும் இணைந்து இருக்கக் கூடிய இருவர் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும். அவர்களை மீண்டும் பார்க்க மக்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். நான் என் சிறு வயதில் எம்ஜிஆரை தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அவரது படங்கள் எல்லாமே வெற்றிப் படங்கள் தான். அவரது உலகம் சுற்றும் வாலிபன் படத்தை டிஜிட்டலில் மெறுகேற்றும் போது பார்க்க நேர்ந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பே பிரமாண்டத்தோடு தொழில்நுட்பத்தையும் கலந்து சிறந்த படமாக கொடுத்திருந்தார் புரட்சி தலைவர். அதன் முடிவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை அடுத்த வெளியீடாக குறிப்பிட்டிருந்தார். ஒரு முறை ஐசரி கணேஷ் நேரில் சந்தித்த போது இந்த மாதிரி ஒரு படம் செய்யும் முடிவு வந்தது. கதையை தயார் செய்து அவரிடம் சொல்லியிருந்தேன், அவருக்கும் பிடித்து போய் 101 வது பிறந்த நாளில் பூஜை போட்டு, 102வது பிறந்த நாளில் வெளியிட முடிவு செய்தோம். வால்ட் டிஸ்னி மாதிரி கம்பெனிகள் இந்த படத்தை எடுக்க 4 வருடங்கள் எடுத்து கொள்வார்கள். ஆனால் மிக குறுகிய காலத்தில் இந்த படத்தை நல்ல தரத்தோடு முடிக்கும் நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது.
எம்ஜிஆர் படங்களின் ஃபார்முலா இந்த படத்திலும் இருக்கும், இந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையிலும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புரட்சி தலைவருக்கு இணையாக புரட்சி தலைவிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் படங்கள் என்றாலே பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக எம்ஜிஆர் படத்துக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார் வைரமுத்து. எம்ஜிஆருக்கு பாடல் எழுதியதன் மூலம் அவரது கனவு நிறைவேறியதாக கூறினார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இருந்து ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்ய இருக்கிறோம். சர்வதேச தரத்தில் வெளியாகும் ஒரு தமிழ்ப்படமாக ’கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ இருக்கும்.” என்றார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...