Latest News :

செந்தில் கணேஷ், ராஜலட்சுமிக்கு கிடைத்த புது பட வாய்ப்பு - ‘கரிமுகன்’ விழாவில் அறிவிப்பு
Sunday October-21 2018

விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பரவிய நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியினர், இனி நடிகர்களாக கோடம்பாக்கத்தில் வலம் வர இருக்கிறார்கள். அதிலும், செந்தில் கணேஷ் ஹீரோவாக வலம் வர உள்ளார்.

 

ஆம், செந்தில் கணேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ‘கரிமுகன்’ படம் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

இதற்கிடையே, நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற ‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி இருவரையும் தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க இருப்பதாக, அறிவித்தார்.

 

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய சமுத்திரக்கனி, “செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமாவதற்கு முன்பாக, அவர் பாடிய அம்மா பாடல் ஒன்றை யூடியூபில் கேட்டேன். அந்த பாட்டு என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சி, பிறகு அவர் பாடிய அத்தனை பாடல்களையும் கேட்ட போது, ராஜலட்சுமி பாடிய அப்பா பாடல் ஒன்று, என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சி. உடனே, அவங்க போன் நம்பரை வாங்கி, இருவரிடமும் பேசினேன். அதில் இருந்து எங்களுக்கிடையிலான சகோதர உரவு தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. நானே, அவங்க இருவரையும் என் படத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். அதற்குள் செந்தில் கணேஷ் ‘கரிமுகன்’ படத்தில் ஹீரோவாகிவிட்டார். நிச்சயம் எனது படத்தில் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இருவரும் நடிப்பாங்க, அது என் அடுத்த படமான ‘கிட்னா’வாகவும் இருக்கலாம். நிச்சயம் ‘கரிமுகன்’ வெற்றிப் பெறும்.” என்றார்.

 

இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசுகையில், “செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி பாடிய “சின்ன மச்சான்..” பாடலை ‘சார்லி சாப்ளின்’ படத்திற்காக ரீமிக்ஸ் செய்திருக்கிறோம். அந்த பாடல் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்பாடலை கெடுத்துவிடாமல் கையாள வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். அதேபோல் பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. பாடலாசிரியர் செல்ல.தங்கையாவின் வரிகளும் அதற்கும் முக்கியமான காரணம். இந்த ‘கரிமுகன்’ பாடல்களும் ரொம்ப நல்லா இருக்கு, அதுபோல் படமும் நிச்சயம நல்லா இருக்கும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், “செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி பாடிய ”சின்ன மச்சான்..” பாடலை சார்லி சாப்ளின் படத்திற்காக ரீமிக்ஸ் செய்தது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை 3 கோடி பேர் அந்த பாடலை பார்த்திருக்கிறார்கள் என்பது சாதாரண விஷயமில்லை. செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இருவரும் இந்த சினிமா துறையின் இன்னும் பல வெற்றிகளை பெறுவார்கள். ‘கரிமுகன்’ படத்தை நான் முழுவதுமாக பார்த்தேன். படம் ரொம்ப நல்லா இருக்கு. ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இருப்பதோடு, ஒரு கமர்ஷியல் ஹீரோவிடம் என்ன எதிர்ப்பார்ப்போமோ அதை செந்தில் கணேஷ் செய்திருப்பதோடு, பல சுவாரஸ்யமான காட்சிகளும் படத்தில் இருக்கின்றன. என்ன, கொஞ்சம் காத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக செலவு செய்து படத்தை பிரம்மாண்டமாக எடுத்திருக்கலாம், என்ற குறையை தவிர வேறு எந்த குறையும் படத்தில் இல்லை. படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

 

சமுத்திரக்கனி சொன்னது போல தான், ராஜலட்சுமி பாடிய அப்பா பாடலை கேட்ட பிறகு அவரை நான் மகளாகவே பார்க்க தொடங்கிவிட்டேன், இவர்கள் இந்த சினிமா துறையில் இன்னும் மேலும் மேலும் வளர என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன்.” என்றார்.

 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இயக்குநர் ரெபா பேசுகையில், “சூப்பர் சிங்கர் குழுவில் இருந்த செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி சினிமாவில் எண்ட்ரியாகியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. சூப்பர் சிங்கர் மூலம் தான் அவர்கள் இருவரும் பிரபலமடைந்தார்கள், என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியால் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சுவாரஸ்யம் பெற்று பிரபலமானது.” என்றார்.

 

செந்தில் கணேஷ் பேசுகையில், “செல்ல தங்கையா தான் என் 8 வயதுமுதல் ஆசானாகத் திகழ்ந்து வழி நடத்துகிறார். எனக்கு முகவரி கொடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும், இன்னும் அதிகமாகச் சென்றடைய உதவிய ’சார்லி சாப்ளின் 2’ படக்குழுவினருக்கும் பெரிய நன்றி. எங்களது பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

 

’கரிமுகன்’ பட இயக்குநர் செல்ல.தங்கையா பேசும் போது, “’கரிமுகன்’ படத்தின் மூலம் செந்தில் கணேஷுக்கு எப்படி தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைக்கப் போகிறதோ அது போல், அவர் மூலமாக நாட்டுப்புற கலைஞர்களுக்கும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இருளில் வாழ்கிற நாட்டுப்புறக்கலைஞர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிற அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

கே.பாக்யராஜ் பேசும்போது, “திரையில் தனது கணவரைப் பார்த்து மகிழ்ந்த ராஜலட்சுமியைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. டூயட் பாடும் போது, ஒளிப்பதிவாளர்களைக் கைக்குள் போட்டுக் கொள்ளவேண்டும்.அப்பொழுதுதான், நம்மையும் கொஞ்சம் பளிச்சென்று காட்டுவார்கள். சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் வாய்ப்புக்கேட்டு என் அலுவலக வாசலில் நின்றதாகச் சொன்னார்கள். அதே வலியை நானும் அனுபவித்திருக்கிறேன். அதனால் தான் என் அலுவலக வாசலில் காத்திருப்போர் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாவிட்டாலும், ஒரு வார்த்தை பேசியாவது அனுப்பி வைப்பேன்.

 

டக்குனு செட்டாகிட்டா பெண்ணும் சரி சினிமாவும் சரி ருசிக்காது, கொஞ்சம் போராடித்தான் வெற்றியை ருசிக்க வேண்டும். செல்ல தஙகையா ஜெயிக்க வேண்டும். செந்தில் கணேஷ் நன்றாக வருவார்..” என்றார்.

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், இயக்குநர் வசந்தபாலன் மற்றும் ’கரிமுகன்’ படக்குழுவினர் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு பேசினார்கள்.

Related News

3633

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery