Latest News :

கணவன் மனைவி உறவை அழகுப்படுத்திய ‘காற்றின் மொழி’ - ஜோதிகா
Monday November-05 2018

ஜோதிகா நடிப்பில், ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காற்றின் மொழி’ திரைப்படத்தை பாப்டா நிறுவனம் மூலம் தனஞ்செயன் தயாரித்திருக்கிறார். வரும் நவம்பர் 16 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

 

இதில் ஜோதிகா, விதார்த், லக்‌ஷ்மி மஞ்சு உள்ளிட்ட படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய ஜோதிகா, “ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது.

 

'மொழி' படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சியும் நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.

 

லட்சுமி மஞ்சு கூறியது போலவே, இந்த படத்தில் நடித்த அனுபவமே இல்லை. கமல் நடிக்கும்போது தான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதேபோல எம்.எஸ்.பாஸ்கரையும் வியந்து பார்த்தேன். ஒரே ‘டேக்’கில் நடித்துவிடுவார். கிளிசரின் இல்லாமலே அழுவார். விதார்த் எனக்குப் போட்டியாக சிறப்பாக நடித்திருக்கிறார். மனோபாலாவுடன் நடிக்கும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறு வலியே எடுத்தது. குமரவேல் மிகவும் இயல்பாக நடிப்பார். தேஜஸ் உடனான காட்சிகளில் மிகவும் ரசித்து நடித்தேன். குழந்தைகள் என்றாலே மொபைல் போனில் விளையாடுவார்கள். ஆனால் தேஜஸ் ஒருமுறை கூட விளையாடி நான் பார்த்ததே இல்லை. எல்லோருடனும் பேசிக் கொண்டிருப்பான். பிறந்த நாள் என்றாலே SMS மூலம் வாழ்த்து தெரிவிக்கும் இந்த காலத்தில், எல்லோருடனும் இணைந்து பேசுவான். இவனைப் பார்த்த பிறகு என் பிள்ளைகளுக்கும் இவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

 

என் அம்மாவும், நான் அம்மாவாக அழைக்கும் என் மாமியாரையும் தான் நான் மாதிரியாக கருதுவேன். என் மாமா சிவகுமார் என்னுடைய எல்லா படங்களையும் திரை அரங்கத்திற்கு சென்று தான் பார்ப்பார். நான் நடித்த எல்லா படங்களுமே அவருக்கு பிடிக்கும்.

 

இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

 

சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது.” என்றார்.

 

Kaatrin Mozhi

 

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “BOFTA -வில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த படத்தை உதாரணமாக கூறுவேன். ஏனென்றால், இயக்குநர், நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தயாராக இருந்தால்தான் ஒரு படம் இவ்வளவு வேகமாகவும், இடைவெளி இல்லாமலும் குறுகிய காலத்தில் உருவாக முடியும். அதிலும் ஜோதிகாவிடம் நடிக்க கேட்கும்போதே அவர் உடனே ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல் படப்பிடிப்புக்கான தேதிகளையும் தாராளமாக கொடுத்தார். அதேபோல அனைத்துக் காட்சிகளையும் ஒரே ‘டேக்’கில் நடித்து முடித்துவிட்டார்.

 

மேலும், இந்த படம் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டதல்ல. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்.” என்றார்.

 

இயக்குநர் ராதாமோகன் பேசுகையில், “’காற்றின் மொழி’ படம் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் என்னுடைய வேலையை அனைவரும் சுலபமாக்கிக் கொடுத்தார்கள். அனைவரும் அவர்களுடைய முதல் படத்தில் நடித்தது போல நடித்துக் கொடுத்தார்கள். இப்படத்திற்கு A.H.காஷிப் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து வந்தவர். பார்த்திபன் நன்றாக வசனம் எழுதியிருக்கிறார்.” என்றார்.

Related News

3704

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery