Latest News :

”தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது”! - அடிதடி பிரச்சினை குறித்து மனம் திறந்த விமல்
Monday March-18 2019

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை விருகம்பாகத்தில் தங்கும் விடுதி ஒன்றில் பெங்களூரை சேர்ந்த நடிகர் அபிஷேக் என்பவர், நடிகர் விமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கினார் என விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும் விமல் மற்றும் அவருடன் வந்தவர்கள் அந்த நபரை தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியானது. இதனால் விமல் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடுவதாகவும் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்று மனம் திறந்துள்ளார் நடிகர் விமல்.

 

“என்னுடைய பிரச்சனை என்ன என்பதை சொல்வதற்கு முன்பாக இப்போது நாட்டு மக்களின் கோபத்தை மிகப்பெரிய அளவில் தூண்டியுள்ள பொள்ளாச்சி சம்பவத்திற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.. அந்த வீடியோவில் அந்தப் பெண்ணின் அலறல் குரலை கேட்கும்போது என் அக்காவும் தங்கச்சியும் அலறுவது போன்ற எனக்கு கேட்கிறது. தமிழர்கள் எல்லோரும் மற்ற பெண்களை அக்கா தங்கையாகத்தான் பார்க்கிறோம்.. நேரில் பார்த்து பழகிய ஆண்களையே நம்பமுடியாத காலம் இது.. சோசியல் மீடியாவை பெண்கள் பயன்படுத்துவதில் தவறில்லை.. ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது ..இந்த நிலையில் ஃபேஸ்புக்கில் வாட்ஸ் அப்பில் பழக்கமான ஒருவரையெல்லாம் நல்லவன் என நம்பிவிடமுடியாது.. அந்த விஷயத்தில் நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.. பெரியவர்களும் இந்த வயதில் யாரை நம்பலாம் நம்பக் கூடாது என இளைஞர்களுக்கு ஒரு அறிவுரை மாதிரி இல்லாமல் ஒரு நண்பனாக அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.. அதே சமயம் இது போன்ற கொடிய குற்றத்தில் ஈடுபட்ட அந்த மிருகங்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று தனது கோபத்தையும் குமுறலையும் வெளிபடுத்தியுள்ளார் நடிகர் விமல்.

 

மேலும் விருகம்பாக்கம் சம்பவம் குறித்து அவர் கூறும்போது, “மணப்பாறையில் எனது சித்தப்பா காலமானார் என்ற தகவல் எனக்கு வந்ததும் நான் குடும்பத்தினருடன் நள்ளிரவில் புறப்படுவதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன்.. அந்தசமயம் மதுரையில் இருந்து வந்த நண்பர் ஒருவரை நாங்கள் வரும்வரை தங்கவைப்பதற்காக விருகம்பாக்கத்தில் உள்ள எனக்கு பழக்கமான அந்த தங்கும் விடுதி மேனேஜருக்கு போன் செய்தேன்.. அவர் போனை எடுக்காததால், சரி நாமே நேரில் சென்று அவரை சந்தித்து நண்பரை அங்கே தங்க வைத்து விட்டு வரலாம் என்று கிளம்பிச் சென்றோம். அங்கே நுழைவாயில் அருகில் ஒரு நபர் நாற்காலியில் அமர்ந்தபடி ஏதோ செய்து கொண்டிருந்தார்.. அந்த விடுதியில் வட இந்திய பையன்கள் சிலர் பணிபுரிவதால் அப்படி ஒரு நபராக அவர் இருப்பாரோ என நினைத்து பையா இங்கே யாருமில்லையா என கேட்டேன்.

 

ஆனால் அவரோ தன்னை மரியாதை குறைவாக அழைப்பதாக நினைத்து என்னையா பையா என்கிறாய்.. நான் யார் தெரியுமா என எங்களுடன் சண்டைக்கு வந்தார்.. 'நான் வேலைக்காரன் இல்லை, இங்கே தங்கி இருக்கும் கெஸ்ட்' என அவர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது.. அப்போதும் கூட அவர்தான் யார் என சொல்லாமல் மீண்டும் என்னை எப்படி மரியாதை குறைவாக அழைக்கலாம் என்று பிரச்சனையை பெரிதாக்கவே ஆரம்பித்தார்.

 

இதனால் என்னுடன் வந்த நண்பர்கள் அவர் ரொம்பவே திமிராக நடந்து கொண்டு என்னை அவமானப்படுத்துவதை பார்த்து கோபத்தில் அவரை அடிக்க பாய்ந்தனர். நான் அவர்களைத் தடுத்து விலக்கிவிட்டு அவர் அருகில் உட்கார்ந்து, தம்பி யாருப்பா நீ.. ஏன் இவ்வளவு கோவமா பேசுற என அவரை அமைதிப்படுத்த முயன்றேன். ஆனால் அவரோ அமைதியாக பேசிய என்னை 'கெட்டப் கெட்டப்' என கூறி கோபமாக பேச ஆரம்பித்தார்.

 

இதை அருகில் இருந்து பார்த்த நண்பர்கள் இன்னும் கோபமானார்கள்.. உணர்ச்சிவசப்படுவது என்பது மனித இயல்புதானே.. ஒரு கட்டத்திற்கு மேல் தன்மானத்தை விட்டுத்தர முடியாது இல்லையா..? அப்படி உணர்ச்சிவசப்படாத அவன் மண்ணாகத்தான் இருக்க முடியும்.. அதனால் ஒரு சிறிய கைகலப்பு ஏற்பட... அப்போதும் நான் தான் அவர்களை தடுத்து சமரசம் செய்ய முயற்சித்தேன். அதற்குள் சத்தம் கேட்க மேனேஜரும் ஓடி வந்து நிலைமையை அறிந்து கொண்டு அந்த நபரிடம் எடுத்துக் கூற முயற்சித்தார்.

 

ஆனாலும் அந்த நபர் நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதை புரிந்து கொள்ளாமலேயே மீண்டும் கடுமையான வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தார் ஒருவேளை அவரது சுபாவமே அப்படித்தானோ என்னவோ.. அப்படியும் நான்தான் அவரையும் என்னுடன் வந்தவர்களையும் சமாதானப்படுத்தி காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி விட்டு அங்கிருந்து சுமூகமாகத்தான் கிளம்பி வந்தோம்.. அந்த மேனேஜருக்கும் இது நன்றாக தெரியும்.

 

அதன்பின் நான் கிளம்பி ஊருக்கு சென்று விட்டேன்.. அங்கே சித்தப்பாவின் காரியங்களை முன்னின்று கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால் பெரும்பாலும் என்னுடைய மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்தேன்.. இதை தவறுதலாக புரிந்து கொண்டு, நான் ஏதோ தலைமறைவாகி விட்டது போலவும் என் மீதுதான் தவறு இருப்பது போலவும் இங்கே வழக்கு பதிவு செய்துவிட்டார்கள்.. செய்திகளும் அப்படியே வெளியாகின. சரி என் மீது குற்றமில்லை வழக்கு போட்டாலும் சந்திக்க தயார்.. சமாதானமாக போகலாம் என்றாலும் அதற்கும் தயார்.. அதற்காக தன்மானத்தை விட்டுக்கொடுத்து எதையும் பண்ணமுடியாது என நினைத்துக்கொண்டு சித்தப்பாவின் காரியங்களை முடித்துவிட்டு சென்னைக்கு வந்தேன்” என கூறியுள்ளார் விமல்.

Related News

4389

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

மக்கள் கொடுத்த வரவேற்பால் பல மொழிகளில் டப்பாகும் ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர்!
Monday July-28 2025

18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...

Recent Gallery