Latest News :

சூர்யாவுடன் நடிக்க ஆசைப்படும் கார்த்தியின் காதலி!
Monday December-16 2019

‘பாபநாசம்’ படத்திற்குப் பிறகு ஜீத்து ஜோசப் தமிழில் இயக்கும் படம் ‘தம்பி’. கார்த்தி, ஜோதிகா அக்கா, தம்பியாக நடிக்கும் இப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்ப சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகிறது.

 

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். ‘கிடாரி’படத்திற்கு பிறகு நிகிலா விமல் நடிப்பில் வெளியாகும் தமிழ்ப் படம் ‘தம்பி’ என்பதால், அவர் இப்படத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம், இப்படத்தில் அவரது கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும், ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவுக்கு சிறப்பாக உள்ளதாம்.

 

இது குறித்து கூறிய நிகிலா விமல், “ஏற்கனவே இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அப்போது வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியவில்லை. அவரும் அடுத்தப் படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றார். பிறகு தான் இந்த படத்தில் நடிக்க அழைத்தார். இதில் என்னை அழைக்கும் போதே, கார்த்தி மற்றும் ஜோதிகாவுக்கு தான் படத்தில் முக்கியத்துவம் இருக்கும், நீ கார்த்திக்கு ஜோடியாக நடிக்க வேண்டும், என்று சொன்னார். அவரது நேர்மை எனக்கு பிடித்தது. அதனால் உடனே ஓகே சொல்லிவிட்டேன்.

 

ஜோதிகா மற்றும் கார்த்தி போன்றவர்களுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். கார்த்தி தனக்கு என்று தனி பாணியை வைத்துக் கொள்ளாமல், அனைத்து வேடங்களுக்கும் பொருந்தும் நடிகராக இருக்கிறார். கமர்ஷியல் படங்களுக்கும் அவர் சூட்டாகிறார். இதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்களுக்கும் செட்டாகிறார். அவரைப் போல ஒரு மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை.

 

சிறிய வேடமாக இருந்தாலும் நடிக்க கூடிய வேடமாக இருக்க வேண்டும், என்று நான் நினைப்பேன். அந்த வகையில், ‘தம்பி’ படத்தில் எனது வேடம் கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடமாக அமைந்திருக்கிறது. படப்பிடிப்பில் ரொம்ப ஜாலியாக இருந்தோம். 

 

ஊட்டி, பாலக்காடு, கோயம்பத்தூர், கோவா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. கோவாவில் கார்த்தியின் பகுதி மட்டும் நடந்தது. சரியான திட்டமிடுதல் இருந்ததால், அட்டவணைப்படி 65 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம். தமிழ் படத்தில் நடித்த அனுபவத்தில் இப்படம் விரைவாகவே முடிவடைந்திருக்கிறது.

 

படப்பிடிப்பு தளத்தில் நன்றாக அரட்டை அடிப்போம். ஒருத்தருக்கொருத்தர் கலாய்த்துக் கொள்வோம். இதற்கிடையில், சத்யராஜ் குடும்பத்தார்கள் வந்தார்கள், கோயம்பத்தூரில் இருந்து சிவகுமாரின் உறவினர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தாருடனும் பேசுவோம். சூர்யாவும் ஒரு நாள் வந்தார். அவரிடமும் பேசினேன்.

 

என்னுடைய தோழி அபர்ணா 'சூரரைப் போற்று' படத்தில் நடிக்கிறார். அதை நினைத்து இருவரும் உற்சாகமானோம். சிறந்த நடிகருடன் நடிக்கும்போது இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கும். தங்களுடைய கதாப்பாத்திரத்திற்காக எப்படி மாறுகிறார்கள் என்பதை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகையால், சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.

 

Nikila Vimal

 

பொதுவாக படப்பிடிப்பின் துவக்கத்தில் சில நாட்களுக்கு சிறு சிறு காட்சிகள் தான் கொடுப்பார்கள். ஏனென்றால், அப்போதுதான் அனைவரிடமும் நமக்கு இயல்பான நிலை வரும். ஆனால், இந்த படத்தில் எனக்கு முதல் நாள் படப்பிடிப்பே டூயட் பாடல் தான். அதுவும் உதட்டோடு பதிக்கும் முத்தக் காட்சி என்றதும் சிறிது பதட்டமாக இருந்தது. கார்த்தியைப் பார்த்ததும் இவரைப் பார்த்து நடிக்க வேண்டுமே என்ற பயம் வேறு. ஆனால், கார்த்தி என்னை சமாதானப்படுத்தி இலகுவாக இருக்கும்படி கூறினார். முதலில், பாடலைக் கேட்கும் போது பதட்டமாக இருக்கும். இப்போது நன்றாக இருக்கிறது என்று தோன்றுகிறது. இதுதவிர, விருந்து பாடலும், கோவாவில் கார்த்திக்கு ஒரு பாடலும் இருக்கிறது.

 

நான் கோவிந்த் வசந்தாவின் பேண்ட் வாத்தியத்தின் விசிறி. சமீபத்தில், கேரளாவில் அவருடைய இசை ஆல்பம் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடைய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். '96' மற்றும் 'அசுரவதம்' படத்தில் அவருடைய பின்னணி இசை பிடிக்கும்.

 

இப்படம் இரண்டு குடும்ப உறவுகள் கலந்த திரில்லர் படமாக இருக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் தொடர்பு இருப்பதால் இப்படத்தின் கதையை பற்றி விளக்க முடியாது. படம் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்க டிசம்பர் 20-ம் தேதி வரை நாங்களும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கிறோம். மேலும், 'கிடாரி' படத்தில் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று இன்னமும் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், இந்த படத்திற்கும் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.” என்றார்.

 

தற்போது இரண்டு மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிகிலா விமல், தமிழ்ப் படங்களுக்கான கதைகளை கேட்டு வருகிறாராம். விரைவில் தமிழ்ப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளாராம்.

Related News

5994

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery