ஷகிலாவின் வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் ‘ஷகிலா’!
Saturday December-19 2020

தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி அணுகுண்டாக திகழ்ந்தவர் ஷகிலா. அதிலும், மலையாள சினிமாவின் மகாராணியாக பல ஆண்டுகள் வலம் வந்த இவருடைய வளர்ச்சியால் பல முன்னணி மலையாள நடிகர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான கதையும் உண்டு. இப்படி பல ஆண்டுகள் மலையாள ரசிகர்களை தனது கவர்ச்சியால் கிரங்கடித்து வந்த ஷகிலாவின் நிஜ வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஷகிலா’.

 

ஷகிலா நிஜ வாழ்க்கையில் தான் அனுபவித்த வலிகளோடு, அவரது சினிமா வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் ரகசியங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தை சாமிஸ் மேஜிக் சினிமாஸ் மற்றும் இனோவேடிவ் பிலிம் அகடெமி சார்பில் பிரகாஷ் பழனி வழங்க, சம்மி நன்வானி மற்றும் சரவணா பிரசாத் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

 

இந்திரஜித் லங்கேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்திருக்கிறார். மேலும், பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷிவா ரானாகஜோல் சக், சந்தீப் மலானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

இப்பத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர்களுடன், நடிகை ஷகிலா மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பிரவீன்காந்த், நடிகர் தம்பி ராமையா, சமையல் கலை நிபுணர் தாமு ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர்களில் ஒருவரான சரவண பிரசாத், “பெங்களூரில் உள்ள எனது இனோவேடிவ் பிலிம் சிட்டியில் தான் இந்த படம் படமாக்கப்பட்டது. அப்போது படத்தின் கதையை கேட்டபோதே இப்படத்தின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் தான் இந்த படத்தில் தயாரிப்பாளராக நானும் இணைந்துக் கொண்டேன். கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கை படமாக இருந்தாலும், இது அனைத்து தரப்பினருக்குமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. நிச்சயம் ரசிகர்களை இப்படம் வெகுவாக கவரும்.” என்றார்.

 

தம்பி ராமையா பேசுகையில், “ஒரு கவர்ச்சி நடிகையாக பல லட்ச ரசிகர்களை பெற்ற ஷகிலா, வாழ்க்கையில் பல துன்பங்களையும், வலிகளையும் எதிர்கொண்டிருப்பார் என்பது அனைவரும் அறிந்தது தான். அப்படிப்பட்டவருடைய வாழ்க்கை இன்று திரைப்படமாக பல மொழிகளில் வெளியாகிறது என்றால் இது அவருக்கு கிடைத்த கெளரவமாகவே நான் நினைக்கிறேன்.” என்றார்.

 

இயக்குநர் பிரவீன்காந்த் பேசுகையில், ”இந்த படம் ஷகிலா என்ற கவர்ச்சி நடிகைக்காக உருவான படம் அல்ல, அவர் நிஜ வாழ்க்கையில் அனுபவித்த வலிக்காக உருவான படம். ஷகிலாவின் வாழ்க்கை புத்தகத்தை படித்து அதனால் பாதிக்கப்பட்டதால் தான் இந்த படத்தை தயாரித்ததாக தயாரிப்பாளர் கூறினார். அது தான் உண்மை. நடிகை ஷகிலா தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட வலிகளையும், அவரைப் போன்ற நிலை வேறு யாருக்கும் ஏற்பட கூடாது, என்பதற்காகவும் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

 

இறுதியாக பேசிய நடிகை ஷகிலா, “நான் உயிருடன் இருக்கும் போதே, எனது ஆட்டோபயோகிராபி திரைப்படமாக வெளியாவது பெருமையாக உள்ளது. நான் வலிகளை அனுபவித்தேன், என்று பலர் கூறுகிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை, சினிமாவில் எனக்கு கிடைத்த வாய்ப்புகள் மற்றும் வெற்றிகள் அனைத்தும் நான் எதிர்ப்பார்க்காமல் கிடைத்தது. அதுபோல தான் இந்த திரைப்படமும். நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. அதுவாகவே நடக்கிறது. அப்படி தான் இந்த படமும் உருவாகி இன்று பல மொழிகளில் வெளியாக உள்ளது. நான் மற்றவர்களுக்கு எதாவது சொல்ல வேண்டும் என்றால், நான் செய்த தவறை யாரும் செய்ய கூடாது, என்பது மட்டுமே.” என்றார்.

 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள ‘ஷகிலா’ கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வரும் டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

7142

பாரம்பரியமான ஆடைகள் தான் பிடிக்கும் - நடிகை காயடு லோஹர்
Saturday March-21 2026

மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

Recent Gallery