Latest News :

இங்கு எல்லாமே நாடகமாக இருக்கிறது - இயக்குநர் சேரன் ஆதங்கம்
Sunday March-14 2021

செங்கோல் படைப்பகத்தின் சார்பில் தலைவனின் தம்பி சுதன் (இலண்டன்) தயாரிப்பில், கலைமாமணி முனைவர் புதுவை சித்தன் தெ.ஜெயமூர்த்தி இசையமைத்து திரைப்படப் பாடலாசிரியர்கள் கவிஞர் கவிபாஸ்கர், கவிஞர் இளையகம்பன் மற்றும் தமிழீழக் கவிஞர்கள் புதுவை இரத்தினதுரை, துளசிச்செல்வன், திருக்குமரன், அகதன் உள்ளிட்டோர் எழுதிய பாடல்களின் தொகுப்பான ’இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்ற மக்கள் இசைப் பாடல்களின் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இயக்குநர் சேரன், “இந்த மண் மக்களின் சொந்த மண், என்று சொல்லுகிற இடத்தில் இருப்பது யாரென்றால் அது நாம் தான்! எந்த இடத்தில் போராட வேண்டுமோ, எந்த இடத்தில் குரல் கொடுக்க வேண்டுமோ, எந்த இடத்தில் எதிர்த்து நிற்க வேண்டுமோ, எந்த இடத்தில் நமது உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அழுத்திச் சொல்லனுமோ, அந்த இடத்திலெல்லாம் நாம் மவுனமாக இருந்ததின் காரணம் தான், இன்று நாம் இந்த மண் நமது சொந்த மண் என்று சொல்லியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறோம்!

 

மழுங்கி போனவர்கள் தமிழர்கள் என்று வரலாறு பதிவு செய்து விடுமோ, என்று எனக்கு தோன்றுகிறது. அப்படி ஒரு இக்கட்டான இடத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். நமது போராட்டமும், நமது குரலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் நமது உரிமைக்காகவும், போராட்டத்திற்காகவும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. எந்த மாற்றமும் நிகழவில்லை. அதற்குக் காரணம், அரசியல்.! மக்களுக்காக பணியாற்றக் கூடிய ஒரு தலைவன் இன்னும் நாற்காலியில் அமரவில்லை! அதுதான் இங்கு பிரச்சனை! அப்படி ஒருவர்  நமக்காக அமர்ந்திருந்தால் ஈழத்தில் நமது மக்கள் கொல்லப்படும் போது அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கும், நமக்கான நியாயம் கிடைத்திருக்கும். இங்கு எல்லாமே நாடகங்களாகவே இருக்கு! மக்களை மயக்க பிஸ்கட் கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இது அவர்கள் மீதான குற்றமில்லை. நமது இயலாமையை, நமது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வருகிறவர்களுக்கு நாம் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறோம்! நமக்காக குரல் கொடுப்பவர்களை, நமக்காக சிந்திப்பவர்களை நாம் ஒதுக்கித்தள்ளுகிறோம்! நாம் விழித்துக் கொண்டால் மட்டுமே எழுச்சியும் மாற்றமும் நிகழும்!

 

நம்மை சோம்பாறிகளாக்கி, இலவசங்களுக்கு அடிமையாக்கி, நம்மை அவர்களுக்கான ஆட்களாக வைத்திருக்கிறார்கள். முதலில் மக்களிடமிருந்து புரட்சி எழவேண்டும். அதன்பிறகுதான் மாற்றம் நிகழும்!

 

மக்களுக்காகப் போராடுகிறவர்களை மக்கள் இன்னும் கண்டுகொள்ளவே இல்லை. அரிதாரம் பூசியவர்களின் முகமும், கவர்ச்சியும் தான் மக்களுக்கு தேவைபடுகிறது. அந்த கவர்ச்சிதான் நம்மை ஐம்பதாண்டு காலம் பின்னோக்கி இழுத்துவிட்டது. திரும்பவும் அந்த கவர்ச்சியின் பின்னாடி நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். நான், இயலாமையில் பேசவில்லை, கோபத்தில் பேசவில்லை, அனைத்தையும் உள்ளத்தில் போட்டு விழுங்கி நானும் அமைதியாக இருக்கும் ஒரு சராசரி மனிதனாகி விட்டேன். ஆகவே இந்த மண் நமது சொந்தம் என்று சொல்லுவதற்கு காரணமே நாம் தான் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

 

சித்தன் தெ.ஜெயமூர்த்தி அடிக்கும் பறை அனைவரையும் விழிப்படைய செய்யும்! நாள் நெருங்கிவிட்டது. முதலில் நாம் விழிப்படைவோம்!” என்று பேசினார். இவ்வாறு அவர் பேசினார்.

 

இந்நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் பாடல்களை வெளியிட்டு நிறைவுரையாற்றினார். இயக்குநர் மு.களஞ்சியம், இயக்குநர் மணிமாறன், ஐயா கி. வெங்கட்ராமன் (இணையாசிரியர் – தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்) பேரா. கு.சின்னப்பன் (பதிவாளர் (பொ) தமிழ்ப்பல் கலைக்கழகம் – தஞ்சை) பேரா. பெ. கோவிந்தசாமி (கலைப்புலத்தலைவர், தமிழ்ப்பல் கலைக்கழகம்–தஞ்சை) கவிஞர் இளம்பிறை, கவிஞர் இளையகம்பன் தமிழீழக் கலைஞர் தேவர் அண்ணா, எழுத்தாளர் விசவனூர் தளபதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை பாடலாசிரியர் கவிஞர் கவிபாஸ்கர் மேற்கொண்டார். கவிஞர் ஜே. தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார் விழா நிறைவில் இசையமைப்பாளர் – திரைப்படப் பின்னணி பாடகர் முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி ஏற்புரை நிகழ்த்தினார்.

 

அரங்கு நிறைந்த இவ்விழாவில், பறையாட்ட கலைஞர்களின் சிறப்புமிக்க நடனங்களும் பாடலாசிரியர் கவிபாஸ்கர் – தமிழ் வணக்கம் மற்றும் பறையிசை பாடல்களும் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது!

Related News

7391

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery