ரியல் ஹீரோ வீரபாபு ரீல் ஹீரோவாக களம் இறங்கும் ‘முடக்கறுத்தான்’!
Tuesday September-14 2021

கொரோனா உச்சத்தில் இருந்த போது திரும்பிய பக்கமெல்லாம் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அதை தொடர்ந்து எழுந்த மரண அலறல்களும் அதிகரித்துக் கொண்டிருக்க, ஒருவர் மற்றும் எந்தவித உயிரிழப்பும் இன்றி, அனைவரது உயிரிழையும் காப்பாற்றி கொடுத்துக் கொண்டு இருந்தார். அவர் தான் மருத்துவ கே.வீரபாபு.

 

சித்த மருத்துவர் கே.வீரபாபுவின் மருத்துவத்தாலும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் அளித்த சிகிச்சையாலும், மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக உயர்ந்திருப்பவர், தற்போது ரீல் ஹீரோவாகவும் உருவெடுத்துள்ளார். ஆம், மருத்துவர் வீரபாபு படம்  ஒன்றை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஹீரோயினாக மஹானா நடித்திருக்கிறார்.

 

‘முடக்கறுத்தான்’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய, சிற்பி இசையமைத்திருக்கிறார். பழனி பாரதி பாடல்கள் எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பியும், பழனிபாரதியும் இணையும் படம் என்ற கூடுதல் சிறப்பை பெற்றுள்ள இப்படத்தின் படத்தொகுப்பை ஆகாஷ் கவனிக்க, சண்டைப்பயிற்சியை சூப்பர் சுப்பராயன் மேற்கொள்கிறார்.

 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. சினிமாவில் நடிக்க வந்தது குறித்து பேசிய மருத்துவர் வீரபாபு, “சிறு வயதிலிருந்தே சினிமா மீது எனக்கு ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது அது நிஜமாகி உள்ளது. குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள்  பற்றிய கதைதான் முடக்கறுத்தான். நிறைய குழந்தைகள் பல்வேறு சூழ்நிலை காரணமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கான முழுக்க முழுக்க ஒரு அமைப்பு, திட்டம்  உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது. அது இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். இந்த படத்தை ஒரு பார்வையாளனாக பார்த்து சொல்கிறேன், இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்.” என்றார்.

 

Mudakaruththan

 

சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், “இந்த கொரோனா காலத்தில் எங்கு திரும்பினாலும் உயிரிழப்பு பற்றிய செய்திகள் வந்த சமயத்தில் உயிர்களை காப்பற்றிய மருத்துவர் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தேன். ஒருநாள் வீரபாபு சந்திப்பின் போது கதையை பற்றி அவர் சொன்னார். இந்த காலகட்டத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு முக்கியமான கதை. அருமையாக வந்துள்ளது. குறிப்பாக சித்ரா பாடிய பாடல் ஒன்று சிறப்பாக வந்துள்ளது. பொதுவாக நடிப்பது சுலபம், பாடல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் நடிப்பது சிரமம். ஆனால் அதையும் சிறப்பாக வீரபாபு செய்துள்ளார். கண்டிப்பாக அவர் ஜெயிப்பார்.” என்றார்.

 

தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி பேசுகையில், “நானும் வீரபாபுவும் 20 வருட நண்பர்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் பல மக்களின் உயிரை காப்பாற்றிய வீரபாபு இந்த படத்தை நீங்கள் தான் தயாரிக்க வேண்டும் என என்னிடம் கூறினார். அதனால் எனது வயல் மூவிஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்து இருக்கிறேன். இப்படத்தில் என்னையும் நடிக்க வைத்துள்ளார். தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.” என்றார்.

 

பாடலாசிரியர் பழனி பாரதி பேசுகையில், “இந்த கொரோனா காலகட்டத்தில் பல உயிர்களை காப்பாற்றியவர் வீரபாபு, மனித நேயம் மிக்கவர். குழந்தை கடத்தல் என்பது இன்று பயங்கரவாதமாக உள்ளது. குழந்தைகள் பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறார்கள். அதனை கண்டிக்கும் விதமாக சிறந்த கதையை வீரபாபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் வரும் நான்கு பாடல்களும் பேசப்படும் பாடல்களாக அமையும் என்பது உண்மை. இப்படத்தில் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்களை கேட்டால் கண்கள் கசியும்.” என்றார்.

 

இசையமைப்பாளர் சிற்பு பேசுகையில், “12 ஆண்டுகள் கழித்து இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளேன், இந்த வாய்ப்பினை தந்த இயக்குநர் வீரபாபு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வீரபாபு அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் மனித நேயம் உள்ளவர். வீரபாபு சிறந்த கதையை தேர்ந்தெடுத்து இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக வந்துள்ளது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

நடிகர் மயில்சாமி பேசுகையில், “இந்த படத்தில் குடிகாரர் வேடத்தில் நடித்திருக்கிறேன். குடிப்பழக்கம் உள்ளவர்கள் அக்கொடிய பழக்கத்தை கைவிடுவதற்காக வீரபாபு சார், ஒரு அருமையான யோசனையை படத்தில் சொல்லியிருக்கிறார். அது மதுபழக்கத்தில் இருந்து வெளியே வரவேண்டும், என்று நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மொத்தத்தில், இந்த படம் மக்களை மகிழ்விப்பதோடு, அவர்களுக்கு பயனுள்ள படைப்பாகவும் இருக்கும்” என்றார்.

Related News

7726

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery