விஜய் சாதி சான்றிதழ் ரகசியம் - ‘சாயம்’ பட விழாவில் சர்ச்சை
Tuesday September-14 2021

படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால், அவர்களின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது, என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘சாயம்’. ஒயிட் லேம்ப் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அந்தோணிசாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சைனி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், எலிசெபத், பெஞ்சமின் உள்ளிட்ட பல்லர் நடித்துள்ளனர்.

 

சலீம் மற்றும் கிரிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார். முத்து முனுசாமி படத்தொகுப்பு செய்ய, யுகபாரதி, விவேகா, அந்தோணிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்கள்ல் எழுதியுள்ளனர்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, ஜாக்குவார் தங்கம், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் டைமண்ட் பாபு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ”மாணவர்களிடம் சாதி சாயம் பூசக்கூடது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்கு பயன் தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் பிராக்டிகலாக என்ன செய்திருக்கிறோம்? என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். பள்ளியையே மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என கூறியதும், பின் அமைதியாக ஒப்புக்கொண்டனர். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது. சாதிக்கு நாம் தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்.

 

எனது படத்தில் நடித்த அபிசரவணன் தற்போது விஜய் விஷ்வா என பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். விஜய் என்று சொன்னாலே ஒரு அதிர்வு ஏற்படும். பாலிவுட் கதாசிரியர் தான் சலீம் ஜாவேத் தனது கதையின் ஹீரோக்களுக்கு குறிப்பாக அமிதாப்பின் படங்களில் எப்போதுமே விஜய் என்றுதான் ஹீரோவுக்கு பெயர் வைப்பார். அதேபோல நானும் எனது படங்களின் நாயகர்களுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பேன். அதனால் தான் எனது மகனுக்கும் விஜய் என பெயர் வைத்தேன். விஜய் என்றாலே வெற்றி என்றுதான் அர்த்தம் அந்த  வெற்றி இவரோடு ஒட்டிக்கொள்ள வேண்டும்.” என்றார்.

 

நாயகன் விஜய் விஷ்வா பேசும்போது, “அட்டகத்தி, குட்டிப்புலி படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த பின்னர் மீண்டும் அவர்களை தேடி வாய்ப்பு கேட்க போன போது அங்கே சாதி பார்க்கப்படுவது போல உணர்ந்தேன். அதனால் சாதி பார்க்காத ஆட்களுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என முடிவெடுத்தேன். இன்று இந்த விழாவுக்கு நிறைய சிறப்பு விருந்தினர்களை அழைத்திருந்தோம். ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட சாதி தலைவரின் பிறந்தநாள் என்பதால் அதை வைத்து தாங்களாகவே தொடர்புபடுத்திக்கொண்டு இந்த விழாவுக்கு வர மறுத்துவிட்டார்கள். நிறைய படங்கள் சாதியை பற்றி வருகிறது. ஆனால் இந்தப்படத்தில். சாதியை பற்றியே பேசவேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறோம்.” என்றார்.

 

இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசும்போது, “சாதி வேண்டாம் என்றுதான் நானும் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறேன். பள்ளி விண்ணப்பங்களில் சாதி பற்றியே கேட்க கூடது என ஒரு மசோதாவை தாக்கல் செய்துவிட்டால் போதுமே, ஆனால் அதை செய்ய முடியாமல் சிலர் தடுக்கிறார்கள். நானும் சின்னக்கவுண்டர் போல சாதி பெயரில் படம் எடுத்தவன் தான். ஆனால் எந்த சாதியையும் தூக்கி பிடிக்கவில்லை, யாரையும் தாழ்த்தியும் பேசவில்லை. இதுபோன்ற சமூக நோக்கில் எடுக்கப்படும் சிறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. இங்கே பேசிய இயக்குநர் சாய்ரமணி சொன்னதுபோல, கடந்த ஆட்சியில் அம்மா திரையரங்கம் என ஒரு திட்டம் பேசப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த ஆட்சியில் அதை கலைஞர் திரையரங்கம் என்கிற பெயரிலாவது செயல்படுத்தி ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிக்கு சிறிய அளவிலான தியேட்டர்களை கட்டித்தர வேண்டும். சிறு பட தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.

 

இயக்குனர் அந்தோணிசாமி பேசும்போது, “எஸ்.ஏ.சி சார் சொன்னதுபோல சினிமாவில் தான் ஜாதி பார்ப்பது இல்லை என்கிற நிலை முன்பு இருந்தது. ஆனால் இப்போது சினிமாவில் சாதி பற்று கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவ தொடங்கியுள்ளது.திரௌபதி படத்தின் இயக்குநரே படத்தின் போஸ்டரில் தன் சாதிக்கொடியை பயன்படுத்தியுள்ளதாக சுட்டி காட்டி விழாவிற்கு வர மறுத்து விட்டார். இப்போது என்னால் நிறைய பேச முடியவில்லை. அடுத்தடுத்த மேடைகளில் நிறைய விஷயங்களை சொல்லப்போகிறேன்” என்றார்.

Related News

7728

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery