Latest News :

விளையாட்டுத் துறையில் சாதித்த பிரபல திரைப்பட கலை இயக்குநர் உமேஷ் குமார்!
Tuesday November-23 2021

திரைத்துறையில் பிரபலமாகவும், பிஸியாகவும் இருப்பவர்கள், வேறு சில துறைகளில் சத்தமில்லாமல் சாதித்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் சாதனை வெளியுலகிற்கு தெரிவதில்லை. அந்த வகையில், தமிழ் சினிமாவின் பிரபல கலை இயக்குநர்களில் ஒருவரான உமேஷ் குமார், ’டென்பின் பவுலிங்’ விளையாட்டில் சத்தமில்லாமல் சாதித்து வருகிறார்.

 

’வானவில் வாழ்க்கை’ படம் மூலம் கலை இயக்குநராக அறிமுகமான உமேஷ் குமார், தனது முதல் படத்தின் மூலம் கோலிவுட்டின் கவனம் ஈர்த்தார். அதன்படி தொடர்ந்து ’திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘100’, ’இரும்புத்திரை’, ‘கோமாளி’, ’எனிமி’ உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர், குறைந்த பட்ஜெட்டில் மிக நேர்த்தியான பிரமாண்ட அரங்குகளை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர். 

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘மாநாடு’ திரைப்படத்திற்காக விமான நிலையம் உள்ளிட்ட பல பிரமாண்ட அரங்குகளை வடிவமைத்துள்ள உமேஷ் குமார், வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம், விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம், நிவின் பாலி, அஞ்சலி நடிப்பில் ராம் இயக்கும் படம் உள்ளிட்ட பல பெரிய படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

 

Art Director Umesh Kumar

 

சினிமாவில் இப்படி பிஸியாக இருக்கும் கலை இயக்குநர் உமேஷ் குமார், டென்பின் பவுலிங் விளையாட்டிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற 3 வது கர்நாடக ஓபன் ட்ரையோஸ் டென்பின் பந்துவீச்சு போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்ற டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகித்தார்.

 

கர்நாடக மாநில டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸ் சார்பில் நடத்தப்பட்ட 3 வது கர்நாடக ஓபன் ட்ரையோஸ் டென்பின் பந்துவீச்சு போட்டி, பெங்களூர் சர்ச் ஸ்ட்ரீட் அமீபாவில் நடைபெற்றது. நவம்பர் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், கர்நாடகம், தமிழ்நாடு, மகராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா, உத்தர பிரதேஷ், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து 36 அணிகள் பங்கேற்றன.

 

இத்தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய, அக்ரமுல்லா பெய்க், ஹபீபுர் ரஹ்மான் மற்றும் உமேஷ் குமார் ஆகியோர் அடங்கிய தமிழ்நாட்டை சேர்ந்த ட்ரைடெண்ட் சூப்பர் கிங்ஸ், 211 புள்ளிகளுடன் முதல் ஆட்டத்தை முடித்து, 24 பின்களில் முதலிடத்தில் உள்ள குஜராத்தை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றது.

 

2 வது ஆட்டத்தில், ட்ரைடெண்ட் சூப்பர் கிங்ஸ் இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு 434-434 என போட்டி சமநிலை அடைந்தது. இதையடுத்து டை பிரேக்கர் முறையில் (10-8) இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற்று டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ் தங்கப்பதக்கம் வென்றது.

 

Trident Super Kings

 

இப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த குஜராத் ரோலர்ஸ் வெள்ளிப்பதக்கமும், அரையிறுதியில் தோல்வியடைந்த பெங்களூர் ஹாக்ஸ் மற்றும் குஜராத் கிளாடியேட்டர்ஸ் அணிகள் வெண்கலப்பதக்கமும் பெற்றன.

 

முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி வந்தாலும், டென்பின் பவுலிங் விளையாட்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்து வரும் உமேஷ் குமாருக்கு திரையுலகினர் பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

 

விளையாட்டுத் துறையில் சாதிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. உடலளவில் மட்டும் இன்றி மனதளவிலும் பலமாக இருப்பதோடு, நமது கவனத்தை சிதறவிடாமல் இருப்பது மிக அவசியம். அதிலும், வேறு ஒரு துறையில் பரபரப்பாக இயங்கிக்கொண்டே, விளையாட்டிலும் இப்படி ஒரு வெற்றியை பெறுவது என்றால் நிச்சயம் உமேஷ் குமார், எதிர்காலத்தில் இதை விட மிகப்பெரிய வெற்றிகளை குவிப்பார், என்று பலர் பாராட்டி வருகிறார்கள்.

Related News

7887

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery