Latest News :

சமூகத்தில் நடக்கும் அவலங்களை எடுத்து சொல்லும் தொடர் ‘இரை’ - சரத்குமார் பேச்சு
Saturday February-19 2022

ஆஹா தமிழ் ஒடிடி தளம் பிரமாண்டமாக துவங்கியிருக்கிறது. இத்தளத்தின் முதல் இணைய தொடராக ‘இரை’ வெளியாகியிருக்கிறது. ‘ராடான் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ராதிகா சரத்குமார் தயாரிப்பில், சரத்குமார் நாயகனாக நடித்திருக்கும் ‘இரை’ தொடரை ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருக்கிறார். 

 

இத்தொடர் வெளியீட்டுக்கு முன்பாக பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில், சரத்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட ‘இரை’ குழுவினருடன் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், விக்ரமன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் ஆஹா சார்பில் சிதம்பரம் பேசுகையில், “ராதிகா மேடமுக்கும், சரத்குமார் சாருக்கும் ஸ்பெஷல் நன்றி. கடந்த வாரம் உங்கள் அன்புடன் ஒவ்வொரு வாரமும் ஒரு வெளியீடை தருவோம் என்ற உறுதியுடன் ஆஹாவை ஆரம்பித்தோம். இந்த வார வெளியீடாக ‘இரை’ வெளியாகியுள்ளது. ராஜேஷ் இதனை அற்புதமாக இயக்கியுள்ளார். எந்த ஒரு விசயத்தையும் அவருடன் எளிதாக விவாதிக்கலாம். ஆஹா தொடர்ந்து உங்களுக்கு நல்ல  கதைகளை தரும், இரை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

நடிகர் சரத்குமார் பேசுகையில், “இரை அந்த புக்கை படிக்கும்போது அதை கையில் இருந்து கீழே இறக்க முடியவில்லை, அப்படி மிக அழுத்தமாக, மனதை பாதிப்பதாக இருந்தது. அதே போல் இந்த தொடரையும் நீங்கள் இடைவேளை இல்லாமல் பார்ப்பீர்கள்,  இந்த தொடரை எடுப்பது மிக சவாலானதாக இருந்தது. நிறைய தடங்கல்களுக்கிடையில் தான் இந்த தொடரை எடுத்தோம். இந்த தொடரில் எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். அதற்கு காரணம் ராஜேஷ் தான், அற்புதமாக எடுத்துள்ளார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை எடுத்து சொல்லும் ஒரு தொடர் தான் இது. இந்த தொடர் இப்போது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. என் மனைவி என்னை பற்றி இன்று நிறைய பாராட்டி விட்டார். தொடரில் உழைத்த குழுவினர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

எழுத்தாளர் மனோஜ் கலைவாணன் பேசுகையில், “ஓடிடி ஒரு எழுத்தாளருக்கு வரம், மேடை நாடகங்களில் இருந்து விட்டு, இவ்வளவு பெரிய ஓடிடியில் எழுதுவது பெருமை. ராஜேஷ் முழு சுதந்திரம் தந்தது மிகப்பெரிய விசயம் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி.” என்றார்.

 

இயக்குநர் விக்ரமன் பேசுகையில், ”இரை என்பது உணவு, இரையை தேடும் கதை, இதை பார்க்கும் போதே ஆர்வம் அதிகமாக இருக்கிறது. சரத்குமார் சார் எது தந்தாலும் அசத்திவிடுவார். இயக்குநர் ராஜேஷ் அழகாக திரைக்கதை எழுதியுள்ளார். நிச்சயாமாக இந்த தொடர் நல்ல வெற்றியை பெறும். சினிமாவுக்கு ஓடிடி நல்ல வரமாக அமைந்துள்ளது.” என்றார்.

 

Irai

 

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேசுகையில், “தயாரிப்பாளர் ராதிகா மேடமுக்கு நானும் ஒரு படம் இயக்கியுள்ளேன். ஜக்குபாய் அப்போதே திருட்டு விசிடியாக ஓடிடியில் தான் வெளியானது. ஆனால் இந்த தொடரை பணம் கொடுத்து வாங்கி ஒளிபரப்புவது மகிழ்ச்சி. ஓடிடியில் கதைகள் நிறைய ஒளிப்பரப்ப வேண்டுமெனில் சின்ன பட்ஜெட் கதைகள் தேவைப்படும். அது சினிமாவுக்கு நல்லது. கமல் சார் படங்களில் வேலை பார்த்த போதே ராஜேஷை தெரியும், இந்த தொடர் மிக விறுவிறுப்பாக இருந்தது. மிக நல்ல திரைக்கதை,  நல்ல முறையில்  இயக்கியுள்ளார். சரத்குமார் மிகச்சிறந்த உழைப்பாளி, அவருடன் நிறைய வேலை பார்த்திருக்கிறேன். பெரிய பழுவேட்டையரின் வேட்டை துவங்கியது போல் தெரிகிறது, அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா பேசுகையில், “கமல் சாருக்கு முதல் நன்றி. நான் இயக்கிய தொடர் நேரிடையாக ஓடிடியில் வெளிவருகிறது. ராடனின் முதல் வெப் தொடரை நான் இயக்கும் வாய்ப்பு வந்தது, கமல் சாரிடம் சொன்னபோது, உடனே போய் செய்யுங்கள் என்றார். சரத் சார் நடிக்கிறார் என்ற போது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. சரத் சார் ஹிரோவாக இல்லாமல் கதாப்பாத்திரமாக கலக்கியுள்ளார். ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள், எல்லோரையும் ரொம்பவும் கஷ்டப்படுத்தியுள்ளேன். ஆனால் தொடர் நன்றாக வந்துள்ளது. பேர்ட்ஸ் ஆஃப் பிரே படிக்கவே ரொம்ப கடினமாக இருந்த புக்,  உண்மையை அப்படியே சொன்ன புக், அதை தழுவி எடுப்பது கடினமாக இருந்தது எங்களால் முடிந்த அளவு உண்மையாக உழைத்துள்ளோம். இரை உங்களை கவரும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் பேசுகையில், “இந்த கமலா தியேட்டரில் நிறைய விழாக்களில் கலந்துகொண்டுள்ளேன். இப்போது மீண்டும் இங்கே, நிறைய பயணத்திற்கு பிறகு இப்போது ஓடிடியில் முதல் தயாரிப்பாக என் கணவர் நடிப்பில் உருவாகி இரை வந்திருப்பது மகிழ்ச்சி.  ஆஹா நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. இந்தகதையை படித்த போது ரொம்பவும் மனதை பாதித்தது. இதை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது. இதனை சரியான முறையில் திரையில் எடுத்து வந்தததற்காக ராஜேஷ், மனோஜ் இருவருக்கும் நன்றி. எங்கள் நிறுவனத்தில் இதை தயாரித்தது பெருமை. ராஜேஷ் மிக மிக அற்புதமாக இந்த தொடரை இயக்கியுள்ளார். இதன் வெற்றிக்கு இதில் நடித்த அனைவரும் தான் காரணம், அல்லு அர்விந்த் குறிப்பிட்டு பாராட்டினார். எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். ஆஹாவில் முதல் முறையாக ஒரு க்ரைம் தொடர். தமிழில் இது போல் வந்திருக்காது. என்பதை உறுதியாக சொல்கிறேன். பூஜா சரத்குமார் நான் டிரெய்ன் பண்றேன் கூட்டி வாருங்கள் என்றேன் பூஜா அவரது வேலையை அற்புதமாக செய்தார். என் கணவர் அவரை கன்வின்ஸ் செய்வது கடினம் ஆனால் அவர் கன்வின்ஸ் ஆகிவிட்டால் அவர் உழைப்பு பிரமிப்பாக இருக்கும், இரையில்  ஒரு ஹீரோவாக இல்லாமல் பாத்திரமாக அட்டகாசமாக நடித்துள்ளார், உடல்நலம் நல்லா  இல்லாத ஒரு நேரத்தில் நடித்தார் அவருக்கு நன்றி. எல்லோரும் பாருங்கள் பிடிக்கும்.” என்றார்.

 

ஜிப்ரான் இசையமைத்துள்ள ‘இரை’ தொடருக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சசி கலையை நிர்மாணிக்க, சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Related News

8045

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery