Latest News :

’கே.ஜி.எஃப்’ படத்திற்கு பலமே இயக்குநர் பிரஷாந்த் தான் - நடிகர் யஷ்
Saturday April-09 2022

இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கே.ஜி.எஃப்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

 

கே.ஜி.எஃப் 2 படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் நடிகர் யஷ், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, இயக்குநர் பிரஷாந்த் நீல், நடிகை ஈஸ்வரி ராவ், நடிகர் சரண், தமிழ் பதிப்பை வெளியிடும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யஷ், “மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடைய நண்பர் விஷால் மூலம் கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டோம். அதற்கு ஆதரவு அளித்ததற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடும் உழைப்பாளிகள். சண்டைப்பயிற்சி இயக்குநர் அன்பறிவு இதற்கு சிறந்த உதாரணம். சண்டைக் காட்சிகளின் போது ஒவ்வொரு ஷாட்டிலும் மிகுந்த அக்கறையுடன் பாதுகாப்பு அம்சங்களை ஒன்றுக்கு பல முறை ஆய்வு செய்து பிறகு நடிகர்களை அக்காட்சியில் நடிக்க வைப்பார். அவரது இந்த அணுகுமுறை அவருடைய தொழில் மீது அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பை உணர்த்தியது. இதற்காக நான் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய கடின உழைப்பிற்கு, படத்தின் முதல் பாகத்தில் பணியாற்றியதற்காக அன்பறிவு மாஸ்டருக்கு தேசிய விருது கிடைத்தது.

 

வசனகர்த்தா அசோக் கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக உழைத்திருக்கிறார். சாதரணமாக இது ஒரு டப்பிங் படம் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் கேஜிஎப்பைப் பொருத்தவரை ஒவ்வொரு மொழிக்குரிய முக்கியத்துவத்தை அளித்திருக்கிறோம். ஏனெனில் மொழி என்பது மதிப்புமிக்கது அதற்குரிய மரியாதை தரவேண்டும். ஒட்டு மொத்த படக்குழுவினரும் அதற்கான மரியாதையை வழங்கியிருக்கிறோம். ஒவ்வொரு மொழிக்கேற்ற வகையில், அதன் நேட்டிவிட்டி மாறாமல் வசனங்களை எழுதியிருக்கிறார்கள். இதற்காக வசனகர்த்தாவிற்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேகர் என்ற கலைஞர் எனக்காக தமிழில் பின்னணி பேசி இருக்கிறார் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல் பாகத்திலேயே நான் தமிழில் பின்னணி பேச முயற்சித்தேன். ஆனால் முழுமையான தன்னம்பிக்கை இல்லாததால் பேசவில்லை. இனி வரும் படங்களில் தமிழில் பின்னணி பேச முயற்சிக்கிறேன்.

 

பாடலாசிரியர் மதுரகவியின் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒளிப்பதிவாளர் புவனிடம்,‘ உனக்கு தான் கொஞ்சம் தமிழ் தெரியுமே.. பேசலாமே என்று கேட்டேன். அதற்கு அவர் மைக் முன் சென்றால், கன்னடமும் மறந்துவிடும்’ என்றார். மைக்கில் பேசவில்லை என்றாலும் அவர் திரையில் தன் திறமையை பேச வைத்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளரான கார்த்திக், பட உருவாக்கத்திலும், படப்பிடிப்பிற்கான திட்டமிடலும் தன்னுடைய பங்களிப்பை நேர்த்தியாக செய்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சரண் நல்ல திறமையான நடிகர். அவர் நடித்த காட்சி ஒன்றைப் பார்த்து வியந்தேன். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

 

நடிகை ஈஸ்வரி ராவ் அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்பொழுது மிகுந்த உற்சாகமாக இருப்பார். ஆனால் காட்சியின்போது க்ஷண நேரத்தில் சோக காட்சியில் நடித்துவிட்டு பிறகு மீண்டும் உற்சாகமாக பழகுவார். அவரின் இந்த மேஜிக்கான திறமை கண்டு வியந்திருக்கிறேன்.

 

நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கேஜிஎஃப்காக  செலவழித்த காலகட்டத்தை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவரின் இந்த அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. இது எந்த நடிகையிடம் இல்லாதது. ஏனெனில் ஒவ்வொரு நடிகைக்கும் காலம் பொன் போன்றது. இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் அவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.

 

கே ஜி எஃப்பை பொருத்தவரை இயக்குநர் பிரசாந்த் தான் பலம். தயாரிப்பாளர் விஜய் அவர்களும் இதற்கு பக்கபலமாக இருந்தார். இந்த இருவரும் தான் கே ஜி எஃப் உருவாக காரணமாக இருந்தனர். ஏப்ரல் 14ஆம் தேதியன்று கேஜிஎப் 2 வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

KGF 2

 

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், '' கடினமாகவும், அர்ப்பணிப்புடனும் உழைத்து கே ஜி எஃப் 2 படைப்பை உருவாக்கி இருக்கிறோம். படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளர் பிரபு அவர்களுக்கு படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் ராக்கிங் ஸ்டார் யஷ் நிஜ நட்சத்திர நாயகனைப் போல் எங்களிடம் அக்கறையும், அன்பும் காட்டினார். தயாரிப்பாளர், இயக்குநர், ராக்கிங் ஸ்டார் மூவரும் இணைந்து உருவாக்கிய கே ஜி எஃப் உலகத்தை காண ஏப்ரல் 14ஆம் தேதி வரை காத்திருக்க முடியாது. இந்த உலகை காண உற்சாகமாக வாருங்கள். கொண்டாடுங்கள். அற்புதமான அனுபவத்தை பெறுங்கள். வெற்றிபெற செய்யுங்கள்.” என்றார்.

 

இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், ”கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்திற்கு பேராதரவு வழங்கிய தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கேஜிஎப் 2 படத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக அளித்துவரும் அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படைப்புகள் மூலம் இரு மாநில மக்களுக்கு இடையே பரந்த மனப்பான்மை ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன். கே ஜி எஃப் 2 படத்தை வெளியிடுவதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் தயாரிப்பாளர் பிரபு அவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அழகான நடிகர்களை வைத்துக்கொண்டு கே ஜி எஃப் போன்ற அற்புதமான கதையை சொல்லியதற்காக நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். கே ஜி எஃப் படத்தின் வெற்றிக்கு என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பு வழங்கினர். அதனால்தான் இந்தப் படத்தை பிரம்மாண்ட படைப்பாக உருவாக்க முடிந்தது. கே ஜி எஃப் என்ற கனவு உலகத்தை காட்சிகளாக நடிகர் யஷ்ஷால் உணர முடிந்தது. அதனால் அதனை அவர் தன்னுடைய தோள்களில் ஒற்றை ஆளாக சுமந்து பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கியிருக்கிறார். இதற்காக அவருக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில், ”கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்திலேயே இணைந்து பணியாற்ற வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பல்வேறு சூழல் காரணமாக இணைந்து பணியாற்ற முடியவில்லை. கே ஜி எஃப் படத்தின் ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய கலைஞர்கள் தெளிவான திட்டமிடலுடன் நேர்த்தியாக பணியாற்றியதால் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படைப்பாக இது உருவாகி இருக்கிறது. எங்களுடைய நிறுவனத்திலிருந்து தயாராகும் திரைப்படங்களை மட்டுமே விநியோகித்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு ஏனைய தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களையும் வினியோகிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

 

திரைப்பட துறையில் பிரம்மாண்டத்திற்கு என எப்போது ஒரு தனி ஈர்ப்பு உண்டு. டைரக்டர் ஷங்கர் சார் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டம் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தினார். அதனால் திரைத்துறை ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்தது. வணிக எல்லையும் விரிவடைந்தது. புதுபுது தொழில்நுட்பங்களும், புதிய சிந்தனைகளும் உருவானது. மற்றொருபுறம் ராஜமௌலி சார் பிரம்மாண்டத்தை தன் பாணியில் வழங்கி ஆச்சரியப்படுத்தினார். அதை தொடர்ந்து பிரசாந்த் நீல் சார் அனைவரையும் திக்குமுக்காடும் வகையில் புதிய வகையிலான  பிரமாண்டமான கே ஜி எஃப்பை வழங்கினார். எப்படி அவரால் இப்படியும் ஒரு விசயத்தை சிந்திக்க முடிந்தது என்று வியந்து பார்க்கிறேன். ஒவ்வொரு மாநில திரைத்துறையும் ஒன்றிணைந்து இன்று இந்திய திரைப்படத் துறை என்ற புது வடிவம் பெற்றிருக்கிறது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு மொழியில் உருவான படத்தை இந்தியா முழுவதும் பார்வையாளர்களால் ரசிக்கப்படுவது சந்தோஷமாக இருக்கிறது. இதன்மூலம் சர்வதேச தரத்திலான படைப்புகளை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது சாதாரணமான விசயமல்ல. இதற்கான முயற்சியை தயாரிப்பாளர், இயக்குநர், நட்சத்திர நடிகர் என மூவரும் ஒன்றிணைந்து, பொறுமையுடன் காத்திருந்து ,தெளிவான திட்டமிடலுடன் உழைத்து பூர்த்தி செய்திருக்கிறார்கள். இந்த வகையில் உருவான கே ஜி எஃப் 2 ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதற்காக எங்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாகி இருப்பதால் கொண்டாட்டமான காலகட்டம். இரண்டு படங்களையும் பார்த்து கொண்டாடுங்கள். இயக்குநர் பிரசாந்த் நீல் அவர்கள் கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது படத்தை இயக்கிவருகிறீர்கள். விரைவில் தமிழிலும் திரைப்படத்தை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ராக்கிங் ஸ்டார் யஷ் அவர்களுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உருவாகி இருப்பதால், நீங்களும் தமிழில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.


Related News

8155

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery