Latest News :

அரசியல் திரில்லராக உருவாகியுள்ள ‘செங்களம்’ இணையத் தொடர்! - மார்ச் 24 ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது
Sunday March-19 2023

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தொடர்ந்து பல தரமான திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை வெளியிட்டு வருகிறது. அந்நிறுவனத்தில் வெளியான ‘விலங்கு’, ‘அயலி’ போன்ற தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று பல சாதனைகளை படைத்த நிலையில், தற்போது தென் தமிழகத்தின் பின்னணியை கொண்ட அரசியல் திரில்லர் ஜானர் இணையத் தொடர் ஒன்றை ஜீ5 வெளியிட உள்ளது.

 

‘செங்களம்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த தொடரில் வாணி போஜன், கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி பைரவி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் அன்னி போப், அர்ஜய், பவன், பிரேம், கஜராஜ், பூஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

அபி & அபி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிட். சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரித்திருக்கும் இத்தொடரை, ‘சுந்தரபாண்டியன்’, ’இது கதிர்வேலன் காதல்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருக்கிறார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசையமைத்துள்ளார். பிஜு.வி மற்றும் டான் போஸ்கோ படத்தொகுப்பு செய்துள்ளனர்.

 

வரும் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஜீ5 தளத்தில் வெளியாக உள்ள ‘செங்களம்’ தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தொடரில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களோடு, இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்கள்.

 

Sengalam

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகை வாணி போஜன், “ஜீ5- லிருந்து எந்தக் கதை வந்தாலும் நான் ஒப்புக்கொள்வேன், ஏனென்றால் அவர்கள் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நல்ல படைப்புகளை மட்டுமே தருகிறார்கள்.  ஜீ5 கௌஷிக் தான் முதலில் இந்தக்கதாபாத்திரம் பற்றிச் சொன்னார். இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்தேன், எனக்குப் பிடித்திருந்தது ஆனால் இடையில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் நான் செய்யவில்லை என்றேன். ஆனால் எல்லோரும் எனக்கு ஆதரவளித்து என்னை இந்த கதாபாத்திரம் செய்ய வைத்துள்ளார்கள். எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றே நினைக்கிறேன். இப்போது பார்க்கும் போது நான் ஒரு நல்ல படைப்பில் பங்கேற்றிருக்கிறேன் என மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் சாருக்கு நன்றி. செங்களம் படைப்பிற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன்  பேசுகையில், “அமீர் சாரை இரண்டு நாளுக்கு முன்பு தான் அழைத்தேன் அவர் வந்திருந்து எங்களை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. என் முதல் படத்திற்கு இருந்த அதே உணர்வில் தான் உங்கள் முன் முதல் வெப் சீரிஸிற்காக நிற்கிறேன். கௌஷிக் சாரிடம் இந்தக் கதையைச் சொன்ன போது வெப் சீரிஸாக பண்ணலாம் என்றனர். எனக்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள், ஜீ5 நிறுவனத்தால் தான் இந்தப்படைப்பு உருவானது, அவர்களுக்கு என் நன்றிகள். இந்த தொடர் ஒரு பொலிடிகல் திரில்லர். உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் தரும். கலையரசன் எந்த கதாபாத்திரம் தந்தாலும் அசத்தக்கூடியவர், இதிலும் அட்டகாசமாக நடித்துள்ளார். வாணி போஜன் மிக நல்ல நடிப்பைத் தந்துள்ளார். விஜி மேடம், ஷாலி, கண்ணன் என எல்லோருமே கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள். என் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் இருவருமே எனக்கு மிகப்பெரும் பலம். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் எதையும் எதிர்பாராமல் உழைத்துள்ளனர். விரைவில் உங்களுக்குத் திரையிடவுள்ளோம். பார்த்து உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.” என்றார். 

 

இயக்குநர் அமீர்  பேசுகையில், “இந்த படைப்பில் வேலை பார்த்துள்ள பலரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளார்கள். இந்த டிரெய்லர் பார்த்த போது, இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது. ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பைப் பார்த்து இப்படி பொறாமை ஏற்பட்டாலே,  அது நல்ல படைப்பாகத் தான் இருக்கும். அந்த வகையில் எஸ் ஆர் பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார். இந்த டிரெய்லரில் முதலில் என்னைக் கவர்ந்தது இசை தான் மிகச்சிறந்த இசை. காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். ஜீ5 தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தந்து வருகிறார்கள் அவர்களுக்கு இந்த செங்களம் தொடரும் வெற்றிப்படைப்பாக அமையும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

Vani Bhojan in Sengalam

 

நிகழ்ச்சியில் ஜீ5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன் பேசுகையில், “எஸ் ஆர் பிரபாகரன் உடன் ஒரு மிகப்பெரிய பயணம், செங்களம். விருதுநகரில் நடக்கும் ஒரு கதை. தமிழில் நீங்கள் பார்க்காத பொலிடிகல் கதை. கண்டிப்பாக ரசிகர்களைத் திருப்திப்படுத்தும். அயலிக்கு நீங்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது அதே போல் செங்கலமும் உங்களுக்குப் பிடிக்கும். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். உங்கள் ஆதரவைத் தாருங்கள்.” என்றார்.

 

ஜீ5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன் பேசுகையில், ”அயலிக்கு நீங்கள் தந்த ஆதரவு பெரிது. அது வேறு உலகம் இது வேறொரு உலகம். இதுவும் உங்களைக் கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும். இத்தொடரை மிக உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ள குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் முன் இப்படைப்பைக் கொண்டு வரவுள்ளோம். பார்த்து ஆதரவளியுங்கள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் தரண் பேசுகையில், “தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் என் நண்பர், அவர் தான் என்னை இப்படைப்பிற்குள் கொண்டு வந்தார். மிகச்சிறந்த ஒரு படைப்பாக இது இருக்கும். இயக்குநர் என்னிடம் மிகச் சிறப்பான இசையை வாங்கியுள்ளார். நடிகர்கள் அனைவருமே அட்டகாசமாக நடித்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன்  பேசுகையில், “என்னுடைய முதல் வெப் சீரிஸ் பிரபாகரன் சாருடன் என்னுடைய முதல் படம், அமீர் சாரின் ரசிகன் அவர் என் விஷுவல் பார்த்துப் பாராட்டுவது மகிழ்ச்சி. செங்களம் ஒரு நல்ல படைப்பாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நடிகை விஜி சந்திரசேகர்  பேசுகையில், “ஜீ5 என்றாலே கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புகள் அத்தனை சிறப்பாக உள்ளது. இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் மிகச்சிறப்பான படைப்பை உருவாக்கியுள்ளார். படக்குழுவினர் கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். நான் நல்லதொரு கதாப்பத்திரம் செய்துள்ளேன். பார்த்து ஆதரவளியுங்கள்.” என்றார்.

 

நடிகர் பிரேம் பேசுகையில், “செங்களம் மிகப்பெரிய வெற்றிப்படைப்பாக இருக்கும். அனைத்து நடிகர்களும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். எஸ் ஆர் பிரபாகரனின் திரைக்கதை வசனம் அட்டகாசமாக இருந்தது. அவர் நினைத்ததை உருவாக்கியுள்ளோம். விரைவில் திரையில் காண நானும் ஆவலோடு உள்ளேன் நன்றி.” என்றார்.

 

‘செங்களம்’ தொடரின் டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதோடு, ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகும் இணையத் தொடர்கள் அனைத்தும் புதிய களத்துடனும், விறுவிறுப்பும் சுவாரஸ்யமிக்கதாகவும் இருப்பதாலும் தொடரின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

மொத்தம் 9 பகுதிகளை கொண்ட ‘செங்களம்’ இணையத் தொடர் வரும் மார்ச் 24 ஆம் தேதி வெளியாகிறது.


Related News

8880

விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது!
Wednesday March-27 2024

விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் ஹோலி பண்டிகை தினத்தன்று வெளியிடப்பட்டது...

இயக்குநர் லோகேஷ் கனகராஜை தேர்வு செய்தது ஏன்? - நடிகை ஸ்ருதி ஹாசன் விளக்கம்
Tuesday March-26 2024

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில் ‘இனிமேல்’ என்ற சுயாதீன வீடியோ பாடல் வெளியாகியுள்ளது...