Latest News :

”மக்களை மகிழ்விப்பது தான் என் நோக்கம்” - சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த நடிகர் சந்தானம்
Sunday January-28 2024

‘டிக்கிலோனா’ படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் யோகி மற்றும் சந்தானம் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விஸ்வபிரசாத் தயாரித்திருக்கும் இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, மாறன், கூல் சுரேஷ், இட்ஸ் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். 

 

இந்த நிலையில், ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 27 ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யா கலந்துக்கொண்டார்.

 

நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய நடிகர் சந்தானம், “பீப்பிள் மீடியா ஃபேக்டரி தெலுங்கில் நிறைய படங்கள் செய்திருக்கிறார்கள். தமிழிலும் இரண்டு படங்கள் செய்திருக்கிறார்கள். அதில் முதல் படமாக ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெளியாகிறது. 65 நாட்களும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நேர்த்தியாக செய்து கொடுத்தார்கள். என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் எடுத்துள்ள விஸ்வா சாருக்கு நன்றி. ‘கே.ஜி.எஃப்’ எடுக்கும்போது நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு யஷ் பெரிய ஹீரோவா என்றால் அப்போது இல்லை. ஆனால், அந்தக் கதையை நம்பி அந்தப் படம் எடுத்தார்கள். இதே தான், ‘பாகுபலி’ பிரபாஸூக்கும். அதுபோல தான், இந்தக்கதையை தயார் செய்துவிட்டு நாங்கள் தயாரிப்பாளர்களிடம் சென்றபோது, ‘சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா’ எனப் பலரும் தயங்கினார்கள். ஆனால், இந்தக் கதையை மட்டுமே நம்பி பீப்பிள் மீடியா ஃபேக்டரி விஸ்வா சார் வந்தார். எனக்கு இதுதான் பெரிய முதல் பட்ஜெட் படம். கதையை நம்பிய தயாரிப்பாளர்கள் எப்போதுமே தோற்றதில்லை. இந்தப் படம் தயாரிப்பாளருக்கு நிச்சயம் வெற்றிக் கொடுக்கும். கார்த்திக் இந்தக் கதையை நேர்த்தியாக செய்திருக்கிறார். தியேட்டரில் பார்க்கும் போது நிச்சயம் மகிழ்வீர்கள். படம் நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

 

எப்பவுமே ஆர்யா என்னை பார்த்தால் என் உடம்பை தான் முதலில் பார்ப்பான். ஏன் இங்கே சதை போட்டு இருக்குன்னு திட்டுவான். ஒருமுறை புத்தாண்டு பார்ட்டிக்கு செல்லலாம் என யோசித்து ஆர்யாவுக்கு தெரியாமல் கால் செய்துவிட்டேன். புது வருஷம் அதுவுமாக என்னை ஜிம் போக வைத்துவிட்டான். எந்தவொரு ஃபைனான்ஸியரை பார்க்கப் போனாலும் ஆர்யா எப்படி இருக்கிறார் என என்னிடம் கேட்பார்கள். ஆர்யா போனால் சந்தானம் எப்படி இருக்கிறார் என கேட்பார்கள். நலம் விசாரிக்க அல்ல! நாங்க ரெண்டு பேரும் அந்த அளவுக்கு கடன் வாங்கியிருக்கோம். ஏதாவது படம் நடிக்கிறோமோ, படம் ஓடுதா, பணம் வருமான்னு தான் விசாரிப்பாங்க. தங்க முட்டை போடுற வாத்து ஒன்னு கிடைச்சிருக்குன்னு ஆர்யா ஒருமுறை சொல்லி விட்டு ஒருத்தரிடம் அழைத்துச் சென்றான். வாத்து முட்டை போடுதான்னு பின்னாடியே கை வச்சு பார்த்தா எங்களுக்குத் தான் பின்னாடி ரத்தம் வருது. அந்த வாத்து யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் பற்றி சில் சர்ச்சையான தகவல்கள் பரவியது. ஆனால், அப்டத்தில் அப்படிப்பட்ட எந்த விசயங்களும் இல்லை. இயக்குநர் கார்த்தி யோகியும், என்னை போல் தீவிரமான கவுண்டமனி ரசிகர். அதனால் அவரது முதல் படத்தின் தலைப்பையும் டிக்கிலோனா என்ற கவுண்டமணி சார் பேசிய வசனத்தை வைத்தார், அதேபோல் இந்த வடக்குப்பட்டி ராமசாமியும் கவுண்டமணி அண்ணன் பேசிய வசனம் தான். அடுத்து நானும், ஆர்யாவும் இணைந்து நடிக்க இருக்கும் படத்திற்கும் கவுண்டமணி சாரின் வசனத்தின் தலைப்பை தான் பதிவு செய்து வைத்திருக்கிறார். அதனால் படத்தில் எந்தவிதமான சர்ச்சை விசயங்களும் இருக்காது, முழுக்க முழுக்க ஜாலியான படம். நான்  சினிமாவுக்கு வந்தது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தான், அதை தான் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறேன், தொடர்ந்து செய்வேன். மற்றபடி எந்த ஒரு சர்ச்சைக்குள்ளும் நான் போக விரும்பவில்லை. என் படத்தை பார்க்கும் மக்கள் கவலைகளை மறந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் கொடுக்கிறேன், அந்த வகையில் இந்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படமும் உங்களை நிச்சயம் மகிழ்விக்கும்.” என்றார். 

 

நடிகர் ஆர்யா பேசுகையில், “’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் நடிக்கும்போது எனக்கும் சந்தானத்திற்கும் ஒரே கேரவன் தான். அப்போது கேரவனுக்குள்ளேயே சந்தானத்தைப் பார்க்க ரசிகர் ஒருவர் வந்துவிட்டார். அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக உள்ளனர். நிச்சயம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஹிட்டாகும். இயக்குநர் கார்த்திக்கும் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள விஸ்வா தெலுங்கில் நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தமிழில் இந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கும். 65 நாட்கள் ஷூட்டிங் என்றதும் ஹெல்த் டிப்ஸ் எல்லாம் கேட்டார். நானும் சொன்னேன். பிறகு கேட்டால் அவர் மேகா ஆகாஷூடன் ஷெட்டில் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றார். அந்த அளவுக்கு ஹெல்த் கான்ஷியஸ் அவருக்கு உண்டு. படத்தில் அனைவரும் சிறப்பாக உழைப்பைக் கொடுத்துள்ளனர். நானும் சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம்” என்றார். 

 

இயக்குநர் கார்த்திக் யோகி பேசுகையில், “’டிக்கிலோனா’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுதான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆரம்பிக்கக் காரணம். இதன் பட்ஜெட் ரொம்பவே பெருசு. தயாரிப்பாளர் விஸ்வா கதைக் கேட்டதும் பிடித்துப் போய் சம்மதித்தார். எனக்கு சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்த என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. ’டிக்கிலோனா’ படத்திற்கு சந்தானம் அண்ணன் கொடுத்த ஆதரவு பெரிது. மீண்டும் மீண்டும் சந்தானம் அண்ணாவுடன் படம் செய்வேன். அந்த அளவுக்கு அவர் என் மேல் அன்பு வைத்துள்ளார். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”. என்றார்.

 

நடிகை மேகா ஆகாஷ் பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி விஸ்வா சாருக்கும் கிரியேட்டிவ் புரொடியூசர் நட்டி சாருக்கும் நன்றி. படப்பிடிப்பின்போது என் பாட்டி இறந்ததால் எனக்கு அப்போது சிரமமாக இருந்தது. அதை எல்லாம் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். நிறைய நடிகர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்தது. இயக்குநர் கார்த்திக் எனக்கு ‘கயல்’ என்ற வலுவான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். நன்றி. சந்தானம் சாருடைய நடிப்புக் குறித்து நான் தனியாக சொல்லத் தேவையில்லை. சிறந்த நடிகர் அவர். பிப்ரவரி 2 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”. என்றார்.

 

Vadakkupatti Ramasamy

 

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் நடராஜ் பிள்ளை பேசுகையில், “கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து பீப்பிள் மீடியா ஃபேக்டரி இயங்கி வருகிறோம். இந்த ஏழு வருடங்களில் தெலுங்கில் ’கார்த்திகேயா2’, ‘வெங்கி மாமா’, ‘நிசப்தம்’ என நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளோம். இப்போது தமிழிலும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் மூலம் இங்கு வந்திருக்கிறோம். எங்கள் தயாரிப்பாளர் விஸ்வா தெலுங்கில் மட்டுமல்ல பல மொழிகளிலும் படங்கள் தயாரித்துள்ளார். ’வடக்குப்பட்டி ராமசாமி’ படக்குழுவினருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்”. என்றார்.

 

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், “இந்தப் படத்தில் முதலில் நான் சந்தித்தது இயக்குநர் கார்த்திக் யோகியைதான். படத்தின் கதையை அவர் சொன்னபோது நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். நிச்சயம் நல்ல காமெடி எண்டர்டெயினர் படமாக இது இருக்கும். சந்தானத்தை பாடகாராக முதலில் பயன்படுத்திய இசையமைப்பாளர் நான் என்பது எனக்குப் பெருமை. அவருக்குப் பாட வரவில்லை என்றாலும் முயற்சி செய்து அதை சிறப்பாகவும் செய்துள்ளார். நான் சந்தானம் சார் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால், இந்தப் படம் இன்னும் சிறப்பாக எல்லோருக்கும் பிடித்தவிதமாக வந்துள்ளது. இயக்குநர் கார்த்திக் நல்ல மனிதர். பெரிய பட்ஜெட்டில் நல்ல படமாக சவால்களைக் கடந்து கொண்டு வந்துள்ளார். படம் வெற்றிப் பெறும்”. என்றார்.

 

இயக்குநர், நடிகர் தமிழ் பேசுகையில், “இந்த வாய்ப்புக் கொடுத்த தயாரிப்புத் தரப்புக்கும் இயக்குநர் கார்த்திக்கும் நன்றி. 65 நாட்கள் என சிங்கிள் ஷெட்யூலில் இந்தக் கதையை நம்பி கார்த்திக் எடுத்து முடித்துள்ளார். படத்திற்கு கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். நிச்சயம் நல்ல படமாக வெற்றி அடையும். பிற்போக்குத்தனங்களைப் பேசும் படம் இது”. என்றார்.

 

நடிகர் ரவி மரியா பேசுகையில், “இத்தனைப் படங்கள் வெற்றிப் பெற்றப் பின்பும் ஹீரோ என்ற தலைக்கனம் இல்லாதவர் நடிகர் சந்தானம். சந்தானம் சாருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இந்தப் படம் இருக்கும். அந்த அளவுக்கு காமெடி எண்டர்டெயினராக வந்திருக்கிறது. நான் நடிகரானதுக்குப் பிறகு சந்தானம் சாருடன் நல்ல கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்படி பல வருடங்கள் கழித்து கார்த்திக் எனக்கு நல்ல வாய்ப்புக் கொடுத்துள்ளார். படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவும் சிறந்த பணி செய்துள்ளனர்”. என்றார்.

 

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசுகையில், “’வடக்குப்பட்டி ராமசாமி’ அழகானத் தமிழ்ப் பெயர். ‘பார்க்கிங்’ படம் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது.  அதற்கு இயக்குநர் கார்த்திக்கிற்கு நன்றி. எனக்கு நல்ல கதாபாத்திரம். காண முடிகின்ற உருவங்களில் நம்மால் கடவுளைக் காண முடியும். காண முடியாத சில விஷயங்களில் நம்மால் கடவுளை உணர முடியும். இந்த விஷயத்தை அற்புதமாக கார்த்திக் யோகி இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார். படம் நிச்சயம் வெற்றி அடையும்”. என்றார்.

 

நடிகர் அல்லு சிரீஷ் பேசுகையில், “நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக நடித்து வரும் காலத்தில் இருந்து அவரைக் கவனித்து வருகிறேன். அவருடைய படங்களில் நகைச்சுவை வெகுவாக ரசித்து இருக்கிறேன். படம் மட்டுமல்ல, அவருடைய பேட்டிகளும் எனக்குப் பிடிக்கும். விரைவில் உங்களுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஏவிஎம், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என அப்போதுள்ள தயாரிப்பாளர்கள் தெலுங்கு நடிகர்களை வைத்துப் படம் எடுத்தார்கள். அந்த டிரெண்ட் கடந்த சில வருடங்களாக இல்லை. இப்போது அது மீண்டும் இந்தப் படம் மூலம் ஆரம்பித்துள்ளது. இதை ஆரம்பித்து வைத்த விஸ்வா சாருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”. என்றார்.

 

இயக்குநர் மடோன் அஸ்வின் பேசுகையில், “’நாளைய இயக்குநர்’ செய்யும்போதில் இருந்தே நானும் கார்த்திக் யோகியும் நண்பர்கள். முதலில் நடிகராக இருந்து பிறகு இயக்குநரானார். படம் இயக்குவதில் திறமையானவர். நிறைய கற்றுக் கொண்டார். இந்த மேடை அவருக்குக் கிடைக்க பத்துவருடங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது. கடின உழைப்புக் கொடுத்து இந்த இடத்திற்கு வந்துள்ள அவருக்கு நிச்சயம் பெரிய வெற்றிக் காத்திருக்கிறது. அவருக்கு சிறந்த காமெடி சென்ஸ் உள்ளது. ‘டிக்கிலோனா’வில் அது வொர்க்கவுட் ஆனது. இந்தப் படமும் அப்படி உங்களுக்கு சிறப்பானதாக அமையும்”. என்றார்.

 

இயக்குநர் ஸ்ரீகணேஷ் பேசுகையில், “இந்தப் படத்தின் கதை எனக்குத் தெரியும். படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும். ’லொள்ளு சபா’ சமயத்தில் இருந்தே சந்தானம் சாரின் பெரிய ரசிகன் நான். அவர் படம் நடிக்க வந்ததும் நிறையப் படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். கார்த்தி முதலில் சந்தானம் சாருக்கு கதை சொல்லப் போகிறேன் என்று சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்தப் படம் முக்கியப் படமாக அமைந்து பெரிய வெற்றிப் பெற வாழ்த்துகள்!” என்றார்.

 

இயக்குநர் ராம் பேசுகையில், “கார்த்திக் அண்ணா ரொம்ப ஜாலியான நபர். ‘டிக்கிலோனா’ படம் போல ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படமும் இன்னும் ஜாலியாக இருக்கும். சந்தானம் சாரும் இந்த காம்பினேஷனில் இருக்கும் போது நிச்சயம் தியேட்டர் கலகலப்பாக இருக்கும்.” என்றார்.

Related News

9485

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...