Casting : Premgi, Dhivadarshini, Deepa Shankar, Valakku en Muthuraman, CR Rajith, Supergood Subramani, Subramanian Madhavan, Vidhu, Poraali Dileepan
Directed By : Karuppaiya Murugan
Music By : GKV
Produced By : Battlers Cinema - Karuppaiya Murugan
மனைவியை இழந்த விவசாயி பிரேம்ஜி, தனது மகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வருகிறார். வாடகை வீடு, வேலை, மகளின் பள்ளி படிப்பு என்று அனைத்தும் அவர் நினைத்து போல் நடக்கிறது. இதற்கிடையே மகளின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக மருத்துவரை சந்திக்கும் போது, சிறுமி அவருக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. தனக்கு நேர்ந்த அநீதி இனி யாருக்கும் நடக்க கூடாது, என்று எண்ணும் சிறுமி, தன்னை சீரழித்த குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடித்து அவரை கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.
மகளின் மனநிலையை புரிந்துக் கொள்ளும் பிரேம்ஜி, குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடித்து, அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார். சாமானிய மனிதர்களின் அசாத்தியமான இந்த முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகளின் குமுறலாகவும், கோபமாகவும் சொல்வதே ‘வல்லமை’.
பிரேம்ஜி நன்றாக நடித்திருக்கிறாரா? என்று பார்ப்பதை விட, இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சித்திருப்பதையே பாராட்டலாம். ஏதோ வந்தோம், கையை அசைத்தோம், தாடியை தடவினோம், சில வசனங்கள், பல ரியாக்ஷன்க்ள் என்று இல்லாமல் உணர்வுப்பூர்வமாக நடிக்க கூடிய ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் மனுஷன் நடிக்க முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சியை தாராளமாக வரவேற்கலாம்.
பிரேம்ஜியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி திவதர்ஷினி, தனக்கு நேர்ந்த அநீதிக்கு பழிதீர்ப்பதற்கு எடுத்த முடிவு அதிர்ச்சியளித்தாலும், தன் குழந்தை முகத்தோடு அதற்கான காரணத்தை சொல்லும் போது, பார்வையாளர்களின் இதயம் கனக்கச் செய்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ’வழக்கு எண்’ முத்துராமன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணியம், தொழிலதிபராக நடித்திருக்கும் சி.ஆர்.ரஜித், கார் ஓட்டுநராக நடித்திருக்கும் சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடும் இளைஞராக நடித்திருக்கும் விது, பள்ளி உதவி பணியாளராக நடித்திருக்கும் திலீபன் என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.கே.வி மற்றும் ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி இருவரும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே எளிமையாக பயணித்தாலும், கதை மற்றும் திரைக்கதையில் உள்ள இருக்கத்தையும், உணர்வுகளையும் சிதைக்காமல் நேர்த்தியாக பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் சி.கணேஷ் குமார், தன்னால் முடிந்த வரை இயக்குநர் சொல்ல நினைத்ததை சுறுக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்ல முயற்சித்து 2 இரண்டு மணி நேரத்திற்கு குறைவாக படத்தின் நீளத்தை குறைத்திருந்தாலும், காட்சிகளின் நீளத்தை இன்னும் கூட குறைத்திருக்கலாமே, என்று எண்ண வைக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரிக்கவும் செய்திருக்கும் கருப்பையா முருகன், பெண் பிள்ளைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் தற்போதைய காலக்கட்டத்தின் அவலத்தை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண் பிள்ளைகள் பற்றி செய்திகளாக மட்டுமே கடந்து போகும் இந்த சமூகத்திற்கு, பாதிக்கப்படும் பிள்ளைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அனுபவிக்கும் வலியை பார்வையாளர்களிடம் கடத்துவதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
சமூகத்தில் நடக்கும் அவலத்தை, திரை மொழியில் சற்று சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் கருப்பையா முருகனின் கதைக்கரு பலம் வாய்ந்ததாக இருந்தாலும், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் பலவீனமாக இருப்பதோடு, இது சாத்தியமா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
மொத்தத்தில், ‘வல்லமை’ சரியான தண்டனை!
ரேட்டிங் 3/5