Latest News :

’காளிதாஸ் 2’ திரைப்பட விமர்சனம்

c99df4aab7a447e04f87e466e4380152.jpg

Casting : bharath, Ajay Karthi, Sangeetha, Bhavani Sri, Abarnathi, Anand Nag, Prakash Raj, Kishor

Directed By : Sri Senthil

Music By : Sam CS

Produced By : Sky Pictures - Five Star K.Senthil, Dr.N.Yogeshwaran

 

புறநகர் சென்னையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அபர்ணதி - அனந்த் நாக், தம்பதியின் 4 வயது பெண் குழந்தை காணாமல் போகிறது. குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ விசாரணையில், அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் எழுகிறது. அவரை கைது செய்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது, காணாமல் போன குழந்தையின் சடலம் கிடைக்கிறது. இதற்கிடையே, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அஜய் கார்த்திக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லாததால், அவரை வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் காப்பற்றி அழைத்துச் சென்று விடுகிறார்.

 

குழந்தையின் இறப்புக்கு காரணம் யார் ? என்பதை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் பரத்தின் புலன் விசாரணை ஒரு பக்கமும், அஜய் கார்த்தி தான் குற்றவாளி என்று நிரூபிக்க போராடும் பவானி ஸ்ரீ, அதிரடியாக பயணித்துக் கொண்டிருக்கும் போது, அதே அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இதனால், குடியிருப்பு வாசிகளிடத்தில் அச்சம் அதிகரிக்கிறது. இந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன ?, இதற்கு பின்னணியில் இருக்கும் உண்மையான குற்றவாளி யார் ? என்பதை பரத் எப்படி கண்டுபிக்டிக்கிறார், என்பதை பரபரப்பாக சொல்வது தான் ‘காளிதாஸ் 2’.

 

கதையின் மையக்கரு ஒரு சம்பவம் என்றாலும், அதற்கான திரைக்கதையில் பல்வேறு குற்ற சம்பவங்களை இணைத்து, அதன் மூலம் பல்வேறு திருப்பங்களோடு படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், குற்றவாளி யார் ? என்பதில் கடைபிடித்திருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார். 

 

காளிதாஸ் கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத், முதிர்ச்சியான நடிப்பின் மூலம் உண்மையான காவல்துறை அதிகாரியை பிரதிபலித்திருக்கிறார். போலீஸுக்கான துணிச்சலுடன் பயணித்தாலும், நிதானமான அனுகுமுறை மற்றும் கூர்மையான விசாரணை மூலம், நெருக்கடியான சூழ்நிலைகளை அனுபவம் வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் எப்படி சாமர்த்தியமாக கையாள்வார்கள், என்பதை தன் நடிப்பின் மூலம் பரத் மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார். ஜோடி, காதல் பாட்டு, கதாநாயகன் அறிமுகப்பாடல், என கமர்ஷியல் ஹீரோவுக்கான எந்த அம்சங்களும் இல்லை என்றாலும், காளிதாஸ் என்ற காவல்துறை அதிகாரியை மக்கள் மனதில் பதிய வைப்பதில் பரத், சிறப்பான பங்களிப்பை வழங்கி படம் முழுவதும் பளிச்சிடுகிறார்.

 

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி, அதிகம் பேசவில்லை என்றாலும், படம் முழுவதுமே அவரைப் பற்றி தான் பேசுகிறது.  படத்தின் ஆரம்பத்திலேயே அமைதியான முகத்தோடும், பல்வேறு விசயங்களை பேசும் கண்களோடும் அறிமுகமாகி கவனம் ஈர்க்கும் அஜய் கார்த்தி, திருப்பம் மிக்க கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து ஸ்டீபன் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் ‘பூவே உனக்காக’ சங்கீதா, எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார். 

 

காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, களப்பணி பற்றி சரியாக தெரியாமல், பதவி அதிகாரத்தின் மூலம் அதிரடியாக செயல்பட்டு, பிறகு அவஸ்தைப்படும் ஆர்வகோளாறு அதிகாரிகளை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

அபர்ணதிக்கு சிறிய வேடம் என்றாலும் திரைக்கதையின் திருப்பத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

அனந்த் நாக், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் ஆகியோரின் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, பார்வையாளர்களின் கவனம் வேறு எந்த பக்கமும் திரும்ப கூடாது என்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, படம் முழுவதிலும் குறிப்பிட்ட ஒரு வண்ணத்தை அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் சென்னையை பல்வேறு கோணங்களில் காட்டி, அனைத்து காட்சிகளையும் பரபரப்பாக நகர்த்தி செல்கிறார்.

 

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் பெரிதாக பேச வைக்கவில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. அதிகப்படியான சத்தம் இல்லாமல் படம் முழுவதுதிலும் ஒருவித அமைதியான சூழல் இருப்பதற்கு ஏற்ப பின்னணி இசையிலும் ஒருவித அமைதியை பின்பற்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் கடத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.

 

ஒரு குற்ற சம்பவத்துடன் தொடங்கும் கதையின் பயணம் பல்வேறு சம்பவங்களின் கோர்வையாக விரிவது தான் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் பாணி, என்றாலும் இயக்குநரின் திருப்பங்களை பார்வையாளர்கள் யூகிக்க முடியாதபடி காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசனின் பணியும் பாராட்டுக்குறியது.

 

படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவர்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டினாலும், திரைக்கதையில் அவர்களுக்கான பங்களிப்பு அதிகம் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கும் திரைக்கதை ஆசிரியர் அரவிந்தன் ஆனந்த், கதையில் இருக்கும் ஒரு சம்பவத்துடன், பல குற்ற சம்பவங்களை இணைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீ செந்தில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற விறுவிறுப்பு மற்றும் பரபரப்போடு படத்தை வேகமாக நகர்த்தி சென்றாலும், காவல்துறையின் அமைப்பு மற்றும் அதன் பணிச்சுமை ஆகியவற்றுடன் அதிகாரிகளின் இக்கட்டான சூழ்நிலை ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார்.

 

படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் பார்வையாளர்களை இழுத்து விடும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், அடுத்தடுத்த காட்சிகளில், கதையை பல அடுக்குகளாக மாற்றி, ஒவ்வொரு அடுக்கிலும் ஒரு திருப்பம், ஒரு சஸ்பென்ஸ் என்று படம் முழுவதையும் எதிர்பார்ப்புடன் பார்க்க வைப்பதோடு, இறுதிக் காட்சியிலும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை வைத்து ‘காளிதாஸ்’-ன் வெற்றிப் பயணம் 2ம் பாகத்தையும் கடந்து தொடரும், என்ற ரீதியில் படத்தை முடித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘காளிதாஸ் 2’ காவல்துறைக்கு பெருமை சேர்க்கும்.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery