Latest News :

விக்ரம் வேதா

croppedImg_71839311.jpeg

Casting : மாதவன், விஜய் சேதுபதி, வரலட்சுமி, ஷரத்த, கதிர்

Directed By : புஷ்கர் - காயத்ரி

Music By : சாம் சி.எஸ்

Produced By : ஷசிகாந்த்

விக்ரமாதித்தன் - வேதாளம் கதையின் பின்னணியில் போலீஸ் - ரவுடி படமாக உருவாகியிருக்கும் படமே ‘விக்ரம் வேதா’

 

சென்னையின் மோஸ்ட் வாண்டட் தாதாக்களில் ஒருவரான விஜய் சேதுபதியை, பெஸ்ட் போலீஸ் பட்டியலில் முக்கியமானவரான மாதவன் அண்ட் டீம் என்கவுண்டரில் போட்டு தள்ள பிளான் செய்து, அவரை தேடி வர, ஒரு நாள் விஜய் சேதுபதியே மாதவனிடம் சரணடைகிறார். சரணடைந்த விஜய் சேதுபதி, ஒரு கதையை மாதவனிடம் சொல்லிவிட்டு அதில் இருந்து கேள்வி கேட்க, அதற்கு மாதவன் பதில் சொல்லும் போது விஜய் சேதுபதி ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார். அவரை ஜாமீனில் எடுப்பது மாதவனின் காதல் மனைவி ஷரத்தா ஸ்ரீநாத். இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் டிவிஸ்ட் நிறைந்தவையாக நகர, மீண்டும் விஜய் சேதுபதியை என்கவுண்டரில் போட மாதவன் திட்டம் போடும் போதும், அவரிடம் சரண்டையும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு கதையை சொல்லி, அதில் இருந்து ஒரு கேள்வியை கேட்டு எஸ்கேப் ஆகிறார். இப்படி விஜய் சேதுபதி மாதவனுக்கு சொல்லப்படும் மூன்று கதைகளும், அந்த கதைகளில் உள்ள சஸ்பென்ஸின் முடிச்சுகள் அவிழ்வதும் தான் ‘விக்ரம் வேதா’ படத்தின் கதை.

 

போலீஸ் - ரவுடி என்று இரண்டு வேடங்களுக்கு மிகச்சரியான தேர்வாக இருக்கும் விஜய் சேதுபதி - மாதவன், இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். தனது இயல்பான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு மூலம் ரசிகர்களை விஜய் சேதுபதி கவர்வது போல, தனது ஸ்டைலிஷ் நடிப்பு மூலம் மாதவன் அசத்துகிறார். மொத்தத்தில் இந்த வேடங்களுக்கு இவர்களை விட்டால் ஆள் இல்லை, என்பது போல படம் முழுவதுமே விக்ரமும், வேதாவும் ஜொளிக்கிறார்கள்.

 

சிறிய வேடமாக இருந்தாலும் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்துள்ள கதிரின் வேடம் ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொள்கிறது. வரலட்சுமி, ஷரத்தா ஸ்ரீநாத் என இரண்டு நாயகிகளும், தோற்றம், நடிப்பு என தங்களது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தெரிகிறார்கள்.

 

பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பலமாக பயணித்திருப்பது போல, படத்தொகுப்பாளரும் படத்திற்கு பலம் சேர்த்திருந்தாலும், மூன்றாவதாக சொல்லப்படும் கதையால் ரசிகர்கள் குழப்பமடைவது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்துவிட்டது.

 

படத்தின் திரைக்கதை, ட்விஸ்ட்கள் நிறைந்த காட்சிகள் என்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இயக்குநர் புஷ்கர் - காயத்ரி படத்தை நகர்த்தியிருப்பதோடு, கதாபாத்திரங்களை சித்தரித்த விதமும், அவர்களின் செயல்பாடும் போலீஸ் - ரவுடி பாணி படங்களுக்கு வேறு ஒரு ஸ்டைலை கொடுத்துள்ளது. 

 

விக்ரமாதித்தனுக்கு கதை சொல்லி, அதில் இருந்து புதிரோடு கேள்வி கேட்டு தப்பிக்கும் வேதாளம் கதையை வைத்து, சிறப்பான கதையை எழுதியுள்ள புஷ்கர் - காயத்ரி, சொல்லியிருக்கும் இரண்டு கதைகளும், எதிர்ப்பார்ப்போடு இண்டர்ஸ்டிங்காக இருந்தாலும், மூன்றாவதாக சொல்லப்படும் கதை தான் சற்று ரசிகர்களை குழப்பமடைய செய்துவிடுகிறது. அதை மட்டும் இன்னும் தெளிவாக சொல்லியிருந்தால் ‘விக்ரம் வேதா’ வேற லெவல் படமாக இருந்திருக்கும். இருந்தாலும், அந்த ஒரு சிறு குறையை தவிர்த்துவிட்டு பார்த்தால், ‘விக்ரம் வேத’ செம படம் தான்.

 

ஜெ.சுகுமார்