Latest News :

‘அடவி’ விமர்சனம்

5acc6df7001c20f4217cd347e27c6469.jpg

Casting : Vinoth Kishan, Ammu Abirami, RNR Manohar, Sambasivam

Directed By : Ramsh G

Music By : Sarathjada

Produced By : Sambasivam

 

காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் ஏற்படும் விளைவுகளை அழுத்தமாக சொல்வதோடு, அக்காடுகளை அழிப்பவர்கள் யார்? எதற்காக அழிக்கப்படுகிறது, என்பதை தைரியமாக பேசுவது தான் இப்படத்தின் கதை.

 

‘அடவி’ என்றால் அடர்ந்த காடுகள் என்று அர்த்தம். அப்படி ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியை அழித்து உல்லாச விடுதி கட்டி, பல்லாயிரம் கோடிகளை சம்பாதிக்க நினைக்கும் கூட்டம் ஒன்று, அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, அக்காட்டில் வாழும் பழங்குடியினரை விரட்டிவிட்டு, அவர்களின் குடியிருப்புகளை கைப்பற்றும் வேலையில் இறங்குகிறது. இந்த கூட்டத்திற்கு எதிராக அம்மக்கள் போராட, இறுதியில் மக்கள் போராட்டம் வென்றதா அல்லது அதிகாரிகளின் அடக்குமுறை வென்றதா, என்பது தான் கதை.

 

முறுக்கு மீசை, முகம் முழுவதும் தாடி என்று ஆக்ரோஷமான இளைஞராக நடித்திருக்கும் வினோத் கிஷன், மக்களுக்காக குரல் கொடுக்கும் போது வீரியமான நடிப்பை வெளிப்படுத்துபவர், காதல் காட்சிகளில் வெட்கமும், பயமும் கலந்த நடிப்பால் கவர்கிறார்.

 

ஹீரோயினாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, மலைவாழ் பெண் கதாப்பாத்திரத்திற்கு பொருந்திப் போவதோடு, அவர்களில் படித்த, எழுச்சிமிக்க பெண் என்று சொல்லும் போது, ஏற்றுக்கொள்ளும்படி அவரது தோற்றமும், நடிப்பும் இருப்பது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறது.

 

பணத்திற்காக காடுகளை அழிக்கும் ஆர்.என்.ஆர்.மனோகர், அவருக்கு உதவி செய்யும் காவல் துறை அதிகாரியான சாம்பசிவம், ஆகியோரது வில்லத்தனமும், தந்திரமும் கதிகலங்க வைக்கிறது. மலைவாழ் கிராம மக்களாக நடித்திருப்பவர்கள் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள்.

 

சரத்ஜடாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாக இருப்பதோடு, பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறது.

 

தேன்மொழி தாஸின் வசனங்கள், அதிகாரிகளின் அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் அனைத்து மக்களின் குரலாக இருப்பதோடு, காடுகள் பற்றியும், அவை அழிந்தால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

 

ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் ரமேஷ்ஜி, சமூகத்திற்கு தேவையான ஒரு படத்தை கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட கருத்துக்களை சொல்லும் படங்கள் எத்தனை வந்தாலும், அத்தனையையும் வரவேற்கலாம். 

 

கருத்து சொல்லும் படம் என்றாலும், திரைக்கதையில் ’சப்ப’ என்ற சஸ்பென்ஸை வைத்து, அதன் மூலம் சில கொலைகள் நடப்பது, மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும், கிராம மக்கள், சப்ப வந்துட்டா..., என்று சொல்லும் போது, படம் பார்ப்பவர்கள் சற்று அலறதான் செய்கிறார்கள்.

 

மக்களின் போராட்டம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இறுதியில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அடக்குமுறை தான் ஜெயிக்கும் என்பதை இயக்குநர் ரமேஷ்ஜி தெளிவாக சொல்லியிருக்கிறார்.

 

பொருளாதாரா ரீதியிலான சில குறைபாடுகள் படத்தில் இருந்தாலும், தான் சொல்ல வந்த கருத்தை மக்கள் மனதில் அழுத்தமாக பதிய செய்திருக்கும் இயக்குநர் ரமேஷ்ஜி, அதை கமர்ஷியலாகவும், நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறார்.

 

ரேட்டிங் 3/5