Latest News :

’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்பட விமர்சனம்

5aca3bdcedea48605e8cf4d961ad7078.jpg

Casting : Vijay Sethupathi, Megha Akash, Magizh Thirumeni, Vivek, Ragu Aditya, Mathura, Kaniha, Riythvika, Mohan Raja, Karu Palaniappan, Chinni Jayanth, Vidya Pradeep, Imman Annachi, Rajesh

Directed By : Venkata Krishna Roghanth

Music By : Nivas K. Prasanna

Produced By : S.Essaki Durai

 

ஈழத்தமிழரான விஜய் சேதுபதி சிங்கள ராணுவ தாக்குதலில் தப்பி அகதியாக கேரளாவுக்கு வருகிறார். அங்கிருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால், அவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாததால், மற்றொரு ஈழத்தமிழர் மூலம் போலியான அடையாளமும் அதற்கான ஆவணமும் உருவாக்கப்பட, அந்த அடையாளம் விஜய் சேதுபதிக்கு பல சிக்கல்களை உருவாக்குகிறது. அவை என்ன சிக்கல்கள்? அவற்றால் விஜய் சேதுபதி எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்? என்பதை ஈழத்தமிழர்களின் வலி நிறைந்த பதிவாக சொல்வது தான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

 

ஈழத்தமிழ் அகதியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, அகதி என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் வலி நிறைந்த வாழ்க்கையை படம் பார்ப்பவர்கள் உணரக்கூடிய விதத்தில் நடித்திருக்கிறார். சத்தங்களை கேட்டு பயப்படுவது, தனக்கான அடையாளத்தை தேடி அலைதல், திறன் இருந்தும் அகதி என்பதற்காக நிராகரிக்கப்படுதல் என்று பல இடங்களில் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் விதத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ஈழத்தமிழர்களின் வாழ்க்கை இன்னமும் கேள்விக்குறியாக இருப்பதை தன் நடிப்பு மூலம் உலகிற்கு உரக்க சொல்லியிருக்கிறார்.

 

விஜய் சேதுபதியை காதலிக்கும் மேகா ஆகாஷ், காதலில் உருகும் காட்சிகளில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் அடையாளத்தால் தவிக்கும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.

 

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் மகிழ் திருமேனி, கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அவரது குரலில் உள்ள கம்பீரமும், வன்மமும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

மறைந்த நடிகர் விவேக் குணச்சித்திர நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். சிறிது நேரம் வந்தாலும் சின்னி ஜெயந்தின் வேடமும், நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

 

கனிகா, கரு.பழனியப்பன், மோகன்ராஜா, தபியா உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.

 

வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவில் ஈழத்துக்கொடுமைகள் கண் கலங்க வைக்கும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடல், காடு, நகரம், யுத்த களம் என்று பல தளங்களில் சுழன்றிருக்கும் கேமரா படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

 

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருப்பதோடு, பின்னணி இசைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

கலை இயக்குநர் வீரசமர், படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் என தொழில்நுட்ப கலைஞர்களின் பணி படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

 

ஈழத்தமிழர்களின் வாழ்க்கை குறித்து பேச தயங்கும் பல விசயங்களை தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்தை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம்.

 

முதல் பாதி திரைக்கதை சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் வேகம் எடுத்து படம் விறுவிறுப்பாக நகர்கிறது. 

 

குறைகள் சில இருந்தாலும், ஈழத்தமிழரை ஹீரோவாக்கி, அவர்களின் வலியை அழுத்தமாகவும், கமர்ஷியல் கதைக்களத்திலும் சொல்லிய விதத்தில் படம் ரசிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3.5/5