Latest News :

’இறைவன்’ திரைப்பட விமர்சனம்

68058e24cd699090aaeb125a0e60e90b.jpg

Casting : Jayam Ravi, Nayanthara, Vijayalakshmi, Rahul Bose, Narain, Ashish Vidyarthi, Charle, Ashwin Kuma,Vinoth Kishan, Azhagam Perumal, Bagavathi Perumal

Directed By : I. Ahmed

Music By : Yuvan Shankar Raja

Produced By : Passion Studios

 

காவல்துறை அதிகாரிகளான ஜெயம் ரவி மற்றும் நரேன் நெருங்கிய நண்பர்கள். நரேனின் தங்கை நயன்தாரா ஜெயம் ரவியை காதலிக்கிறார். இதற்கிடையே இளம் பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலையாளியான ராகுல் போஸை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது நரேன் கொலை செய்யப்படுகிறார். தனது நண்பனை காப்பாற்ற முடியாமல் போனதால் குற்ற உணர்ச்சிக்கு உட்படும் ஜெயம் ரவி போலீஸ் வேலையை விட்டுவிட்டு நரேன் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்கிறார். சிறையில் இருந்து தப்பிக்கும் ராகுல் போஸினால் மேலும் சில பெண்கள் கொலை செய்யப்படுவதோடு, ஜெயம் ரவிக்கு நெருக்கமான குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்ணும் கடத்தி கொலை செய்யப்படுகிறார்.  இதனால், மீண்டும் சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஜெயம் ரவி ஈடுபடும் போது, ராகுல் போஸை தவிர மேலும் ஒரு சைக்கோ கொலையாளி இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்த கொலையாளி யார்? அவரை ஜெயம் ரவி கண்டுபிடித்தாரா?, இல்லையா? என்பதை சொல்வது தன படத்தின் மீதிக்கதை.

 

ஜெயம் ரவி போலீஸாக பல படங்களில் நடித்திருந்தாலும், ஒவ்வொரு படத்திற்கு தனது லுக் மற்றும் நடிப்பில் மிகப்பெரிய வேறுபாட்டை காட்டி வருகிறார். பயம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி, எப்படிப்பட்ட இக்கட்டான தருணத்தில் பயம் துளி கூட இல்லாமல் இருப்பதை தனது நடிப்பில் மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தன் பார்வையின் மூலமாகவே குற்றவாளிகளை அடையாளம் காணும் அவரது விசாரனை முறையிலும், அதில் காட்டும் அதிரடியும் மிரட்டல். குறிப்பான வில்லன் குழந்தையை கடத்தி வைத்துக்கொண்டு ஜெயம் ரவியை மிரட்டும் போது கூட எந்தவித பதற்றமோ பயமும் இன்றி பார்வையினாலேயே அவரை எதிர்கொள்ளும் காட்சிகளில் ஜெயம் ரவி அழுத்தமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

ஜெயம் ரவியை காதலிக்கும் நயன்தாராவுக்கு வயதாகிவிட்டது அப்பட்டமாக தெரிகிறது. சில காதல் காட்சிகள், பாடல் என்று முதல் பாதி முழுவதும் வருபவர், இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளில் முகம் காட்டிவிட்டு காணாமல் போய்விடுகிறார். பிறகு க்ளைமாக்ஸ் காட்சியில் தலைகாட்டுகிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் ராகுல் போஸ் பார்வையிலேயே மிரட்டுகிறார். அவரது தோற்றம் மற்றும் பார்வை சைக்கோ கொலையாளி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருக்கிறது.

 

வினோத் கிஷன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு நடிக்க இயக்குநர் ஏகப்பட்ட வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதை சரியாக பயன்படுத்தி வினோத் நடித்திருந்தாலும், அவருடைய கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது.

 

நரேன், ஆசிஷ் வித்தியார்த்தி, விஜயலட்சுமி, பகவதி, அழகம் பெருமாள் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஹரி கே.வேதாந்தத்தின் ஒளிப்பதிவு கொலைகளையும், சடலங்களையும் மிக கொடூரமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. அந்த காட்சிகள் பார்வையாளர்களுக்கு பயத்தை கொடுப்பதோடு, முகம் சுழிக்கவும் செய்கிறது.

 

யுவன் சங்கர் ராஜாவின் சையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும், பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக காட்சிகளை வைத்து திரைக்கதையை வேகமாக நகர்த்தி சுவாரஸ்யமான படத்தை கொடுக்க இயக்குநர் அகமது பெரிதும் முயற்சித்திருக்கிறார்.

 

கடத்தப்படும் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சிகளும், அந்த சடலங்களை போலீஸ் கண்டெடுக்கும் காட்சிகளும் தர்ரூபமாக இருப்பதோடு, கொடூரமாகவும் இருக்கிறது. சைக்கோ கொலையாளியை மையப்படுத்திய படம் தான் என்றாலும் சில கொடூரமான காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

 

நாயகனான ஜெயம் ரவி ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற பெரிதும் முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சி இறுதியில் வீண் போய்விடுவது திரைக்கதையை பலவீனப்படுத்துகிறது. ஒரு ஹீரோ என்றால் அவரால் ஆபத்தில் இருப்பவர்கள் காப்பாற்ற பட்டால் மட்டுமே படம் ரசிக்கும்படி இருப்பதோடு, அங்கே ஹீரோயிசத்தால் திரைக்கதை சுவாரஸ்யமாகவும் நகரும். ஆனால், இயக்குநர் அகமது ஹீரோவை காட்டிலும் வில்லன்களை தான் அதிகம் வெற்றி பெற செய்கிறார். இறுதியில், எல்லாம் படங்களிலும் நடப்பது போல் ஹீரோ ஜெயிப்பதும், காவல்துறை படை வருவதும் எந்தவித சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தவில்லை.

 

காதல் காட்சிகள், பாடல் போன்றவற்றின் மூலம் வேகமாக பயணிக்கும் திரைக்கதை நொட்டியடிக்க செய்கிறது. அதேபோல், க்ளைமாக்ஸ் காட்சியில் விஜயலட்சுமிக்கு ஏற்படும் விபத்து உள்ளிட்ட காட்சிகளும் தேவைற்றவைகளாகவே இருக்கிறது. இதுபோன்ற காட்சிகளை தவிர்த்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருந்திருக்கும்.

 

சைக்கோ கொலையாளிகள் உருவாவதன் பின்னணி, அவர்களின் நோக்கம், கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் காவல்துறையின் செயல் ஆகியவற்றை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குநர் அகமது, படத்தை சுவாரஸ்யமாக கொடுத்திருந்தாலும், சில தவறுகளால் சில இடங்களில் தடுமாறவும் செய்திருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘இறைவன்’ எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

 

ரேட்டிங் 2.8/5