Apr 24, 2019 05:21 AM

கஸ்தூரி போலீஸாக நடிக்கும் ‘இ.பி.கோ 302’

கஸ்தூரி போலீஸாக நடிக்கும் ‘இ.பி.கோ 302’

சர்ச்சை நாயகியாக வலம் வரும் நடிகை கஸ்தூரிக்கு தற்போது பட வாய்ப்புகளும் ஏராளமாக வர தொடங்கியுள்ளது. அந்த வரிசையில், கஸ்தூரிக்கு காக்கி சட்டையை மாட்டியிருக்கிறது ‘இ.பி.கோ 302’.

 

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் துர்கா ஐ.பி.எஸ் என்ற கதாபாத்திரத்தில் பவர்புல்லான காவல் துறை அதிகாரியாக கஸ்தூரி நடிக்கிறார். நாக சக்தி, வர்ஷிதா ஆகிய புதுமுகங்கள் முக்கிய வேடங்களில் நடிக்க, வையாபுரி, ராபின் பிரபு, போண்டா மணி, வின்ஸ்குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் சலங்கை துரை படம் பற்றி கூறுகையில், “கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள். முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாதபடி படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது. செத்தவன் யார் என்றும் தெரியவில்லை, கொலை செய்தவன் யார் என்றும் தெரியவில்லை. காவல் நிலையத்துக்குள் அடைக்கலம் தேடி வந்த இளம் ஜோடிகள். வெளியே போனால் ஜாதி கொலையாகக் கூடிய வாய்ப்புள்ள பிரச்சனை.

 

இன்னொரு படு கொலை வழக்கு. இந்த மூன்று கதைகளும் ஓரிடத்தில் வந்து நிற்கிற திரைக்கதை. அந்த முடிச்சை அவிழ்க்கிற துர்கா ஐ.பி.எஸ் தான் கஸ்துரி. ரொம்பவும் பவர்புல்லான வேடம் அவருக்கு...நிறைவாக செய்திருக்கிறார்.” என்றார்.

 

தண்டபாணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அலெக்ஸ்பால் இசையமைத்திருக்கிறார். காளிதாஸ் எடிட்டிங் செய்ய, மணிமொழியான் கலையை நிர்மாணித்துள்ளார். தினா நடனத்தை வடிவமைக்க, தீப்பொறி நித்யா ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். முத்துவிஜயன் பாடல்கள் எழுத, ராஜசேகர் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். ஆர்.பிரபு இணை தயாரிப்பை கவனிக்க, செங்கோடன் துரைசாமி தயாரிக்கிறார்.

 

கரண் நடித்து வெற்றி பெற்ற ‘காத்தவராயன்’ படத்தை இயக்கிய சலங்கை துரை, ‘இ.பி.கோ 302’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே, புதுமுகம் நிர்மல்ராஜ் என்பவரை வைத்து ‘எதிர்வினை’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அப்படத்தை இதே செளத் இந்தியன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

 

EPCO 302

 

இரண்டு படங்களும் நல்ல மெசஜ் சொல்லும் தரமான படங்களாக உருவாகியுள்ளதாக கூறும் இயக்குநர் சலங்கை துரை, இரண்டு படங்களையும் விரைவில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம்.