”வட போச்சே...”! - கவலையில் நயன்தாராவின் காதலர்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமைகளோடு வலம் வரும் நயன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தினாலும், முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில், ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து ‘அண்ணாத்தே’ படத்திலும் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ’மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் நயன்தாரா, அவரது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ என்ற படத்தில் நடிப்பதோடு, அவரது இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடிக்கிறார்.
இதில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்றாலும், ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 சதவீதம் முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக தடைபட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.
இதற்கிடையே, ‘நெற்றிக்கண்’ படத்தை தயாரிக்கும் நயன்தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது “வட போச்சே...” என்று வடிவேலுவை போல கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம். அவரது கவலைக்கு அம்மணி நயன்தாரா தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
அதாவது, ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு முன்பாகவே விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தை விக்னேஷ் சிவன் தொடங்கி விட்டார். ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, படப்பிடிப்புக்கு திடீர் பிரேக் விட்ட நயன்தாரா, முதலில் மூக்குத்தி அம்மன் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு பிறகு, நம் படத்தின் படப்பிடிப்பை தொடரலாம் என்று விக்கியிடம் யோசனை கூறியிருக்கிறார். இதற்கு பொருளாதார பிரச்சினையும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
நயன்தாராவின் ஆலோசனையை கேட்ட இயக்குநர் விக்னேஷ் சிவனும், தலையை ஆட்ட, நயனும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை முடித்துக் கொடுத்து விட்டார். தற்போது பின்னணி வேலைகளும் முடிவடைந்து மூக்குத்தி அம்மன் முழு படமும் தயாராகி விட, படத்தை ஒடிடி நிறுவனம் பெரிய தொகைக்கு கேட்கிறதாம். ஆனால், படத்தை சினிமா தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும், என்பதில் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி உறுதியாக இருக்கிறாராம்.
இதனை அறிந்த இயக்குநர் விக்னேஷ் சிவன், மூக்குத்தி அம்மன் படத்திற்கு முன்பாக தான் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தால், கொரோனா ஊரடங்கில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து, ஒடிடி நிறுவனத்தில் படத்தை ரிலீஸ் செய்து பெரிய தொகையை பார்த்திருக்கலாம். ஆனால், தற்போதைய நிலையில் அது முடியாமல் போய்விட்டதால் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம்.
திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு முழுவதுமாக அனுமதி அளிக்கவில்லை என்றாலும், 5 முதல் 10 நாட்கள் படப்பிடிப்பு எஞ்சியுள்ள மற்றும் முடியும் தருவாயில் உள்ள படங்களின் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளுவதற்காவது அனுமதி அளிக்க வேண்டும், என்று தயாரிப்பாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்த கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி அளித்தாலும், ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பை இந்த வருடம் முடிக்க முடியுமா, என்பது சந்தேகம் என்பதால், அப்படத்தின் தயாரிப்பாளரான நயன்தாராவின் காதல் விக்னேஷ் சிவன், “வட போச்சே...” என்ற புலம்பியபடி இருப்பதாக கூறப்படுகிறது.