Apr 29, 2021 05:59 AM

மேனேஜரால் வாழ்க்கையே நாசமாகிவிட்டது - புலம்பும் ‘சேது’ அபிதா!

மேனேஜரால் வாழ்க்கையே நாசமாகிவிட்டது - புலம்பும் ‘சேது’ அபிதா!

பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘சேது’ படம் மூலம் பிரபலமானவர் அபிதா. குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், தமிழ், மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்தாலும், சேது திரைப்படம் தான் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது.

 

’சேது’ படத்திற்குப் பிறகு விக்ரம் எப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களின் பட்டியலில் இடம் பிடித்தாரோ, அதுபோல் அபிதாவும் முன்னணி நாயகியின் பட்டியலில் இடம் பிடிப்பார், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்தவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதோடு, அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் படு தோல்வியடைந்தது.

 

இதையடுத்து சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய அபிதாவுக்கு ‘திருமதி செல்வம்’ என்ற தொடர் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அத்தொடரை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தவர், திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

 

தற்போது சீரியல்களில் நடிப்பதோடு, திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் அபிதா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை தோல்வியடைந்ததற்கான காரணத்தை கூறுகையில், ”சரியான பி.ஆர்.ஓ மற்றும் மேனேஜர் இல்லாததால் எந்த திரைப்படங்களை தேர்வு செய்வது என்று தெரியவில்லை. சில மோசமான திரைப்படங்களில் நடித்ததால், எனக்கு நல்ல கதைகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பி.ஆர்.ஓ மற்றும் மேனேஜரின் தவறான வழி காட்டுதலால் என் சினிமா வாழ்க்கையே நாசமாகி விட்டது.” என்று தெரிவித்துள்ளார்.