Jul 18, 2021 06:12 AM

அருள்நிதி படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றிய சக்தி பிலிம் பேக்டரி!

அருள்நிதி படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றிய சக்தி பிலிம் பேக்டரி!

தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பட விநியோக நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி, அருள்நிதி நாயகனாக நடித்திருக்கும் படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியுள்ளது.

 

சினிமாத்துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த பி.சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி பல வெற்றிப்படங்களை விநியோகம் செய்து வருவதோடு, திரைப்படங்களின் வியாபார பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனம் வெளியிடும் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களும் பார்க்க கூடிய தரமான படமாகவும், அதே சமயம் வியாபார ரீதியாக வெற்றி பெறும் படமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடமும், திரையுலகினரிடமும் ஏற்பட்டுள்ளது. 

 

தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான பி.சக்திவேலன், தனது சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் வெளியிடும் திரைப்படங்களை தனது புதுமையான மார்க்கெட்டிங் யுக்தியால் பட்டிதொட்டியெல்லாம் சேர்ப்பதோடு, அந்த படத்தை பார்க்க கூடிய ஆர்வத்தையும் தூண்டும் வகையில் விளம்பர யுக்திகளையும் கையாண்டு வருகிறார். எனவே, சக்தி பிலிம் பேக்டரி மூலம் வெளியாகும் திரைப்படங்களுக்கு வெற்றி உறுதி என்ற நிலை தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது.

 

இப்படி ஒரு பெருமையை பெற்றுள்ள சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம், அருள்நிதியின் 15 வது திரைப்படத்தின் முழு உரிமையையும் பெற்று அப்படத்தை வெளியிட உள்ளது. சக்தி பிலிம் பேக்டரி ஒரு திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறை என்றாலும், அவர்களுடைய சிறப்பான பணி மூலம் இது தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

’எரும சாணி’ என்ற யூடியுப் சேனல் மூலம் பிரபலமான விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தை எம்.என்.என் பிலிம்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரித்துள்ளார். 

 

முதல் முறையாக ஒரு திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியது குறித்து சக்தி பிலிம் பேக்டரி பி.சக்திவேலன் கூறுகையில், “நடிகர் அருள்நிதி மிக வித்தியாசமான களங்களில், ரசிகர்கள் ரசிக்கும்படியான படங்களையும், குடும்பத்தினர் கொண்டாடும் படங்களையும், தொடர்ச்சியாக தந்து வருகிறார். அவரது சமீபத்திய படமான ’களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தின் வெற்றி திரைத்துறையில் அவரது மதிப்பை உயர்த்தியிருக்கிறது. ஒரு நண்பரின் மூலமாக அவரது இந்த திரைப்படத்தின் இறுதி பதிப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் முடியும் வரையிலும் படம் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்க முடியாதபடி, பல ஆச்சர்யஙகளை தந்தது இந்த திரைப்படம். அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும் அம்சங்கள் படத்தில் நிரம்பியிருந்தது. படம் முடிந்த கணத்திலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று விட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் உண்டானது. படத்தின் கதையில் அருள்நிதியின் நடிப்பு மிக அபாரமானதாக இருந்தது. 

 

இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர் முன்னணி நட்சத்திரங்களுல் ஒருவராக உயர்வார். பல படங்களில் பெருமையுடன் வழங்குகிறோம் என்பதை வாய்வார்த்தையாக உபயோகிப்பார்கள். ஆனால்  இத்திரைப்படம் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்திற்கு மிக உணர்ச்சிகரமான தருணம் ஆகும். உண்மையிலேயே இப்படத்தை மிக பெருமையுடன் வழங்கவுள்ளோம். இப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.” என்றார்.

 

படத்தின் இயக்குநர் ‘எரும சாணி’ விஜய்குமார் ராஜேந்திரன் கூறுகையில், “எனது முதல் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த போது, எனது முழுத்திறமையை மட்டும் நிரூபித்தால் போதாது, சினிமா இயக்கும் கனவுகளோடு இருக்கும், மற்ற யூடியூபர்களுக்கு முன்னுதாரணமாகவும் நான் இருக்க வேண்டும், என்பதில் உறுதியாக இருந்தேன். தற்போது எனது படைப்பு, சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் போன்ற மிகப்பெரும் நிறுவனத்தால் அங்கீகரிகப்பட்டு, அவர்கள் மிகப்பெரும் வெளியீடாக, இப்படத்தை வெளியிட இருப்பது,  மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்படம் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படமாக இருக்கும். அதிலும் கல்லூரி பின்னணியில் கதை நடப்பதால், இளைஞர்களை கண்டிப்பாக ஈர்க்கும். மிகப்பெரிய அளவில் படத்தினை விளம்பரப்படுத்தி, அனைத்து ரசிகர்களிடமும் இப்படத்தினை கொண்டு செல்லும் முனைப்பில் இருக்கிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும்.” என்றார்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் தற்காலிகமாக ‘அருள்நிதி 15’ என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.