Sep 14, 2021 11:02 AM

அமிதாப் பச்சன் பாராட்டால் உற்சாகத்தில் ‘கிளாப்’ படக்குழு

அமிதாப் பச்சன் பாராட்டால் உற்சாகத்தில் ‘கிளாப்’ படக்குழு

ஆதி நடிப்பில், பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கிளாப்’. விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

 

இந்த நிலையில், ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ‘கிளாப்’ படத்திற்கு தற்போது திரையுலகினரிடம் இருந்தும் பேராதரவு கிடைத்து வருகிறது. அதிலும், எதிர்ப்பார்க்காத ஒன்றாக, இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன், ‘கிளாப்’ படத்தின் டீசரைப் பார்த்து பாராட்டியிருப்பது ஒட்டுமொத்தப் படக்குழுவினரையும் பெரும் உற்சாகமடைய செய்துள்ளது. மேலும், நடிகர் ஆதி, நடிகை அகான்ஷா மற்றும் இயக்குநர் பிரித்வி ஆதித்யா ஆகியோரது பணி குறித்து அமிதாப்பச்சன் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

 

இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி.கார்த்திகேயன் கூறுகையில், “நடிகர் அமிதாப்ஜிக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்தியாவின் பெரிய நட்சத்திரத்திடமிருந்து கிடைக்கும் போது பாராட்டும் மிகப்பெரியதாகவே இருக்கிறது.  எங்கள் எதிர்பார்ப்பையும் மீறி ’கிளாப்’ படத்திற்கு  பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் களங்கள் விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் மட்டுமே. அந்த வகையில் ‘கிளாப்’ திரைப்படம் பார்வையாளர்கள் மட்டுமல்லாமல், திரைப்பட பிரபலங்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி, அதிலும் இந்திய சினிமாவின் பேரரசர் அமிதாப் பச்சன் அவர்கள் பாராட்டியது படக்குழுவினருக்கு உட்சபட்ச மகிழ்ச்சியை தந்துள்ளது.  இயக்குநர் பிரித்வி ஆதித்யா தன்னுடைய மூலக்கதையை திரைவடிவில் மிகவும் அருமையாக படமாக்கியுள்ளளார். ’கிளாப்’ திரைப்பட டீசர் சிறந்த வரவேற்பை பெற்றது எனக்கு தனிப்பட்ட வகையில் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. குறிப்பாக தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வரவேற்பை பெற்றுள்ளது.

 

ஆதியின் நடிப்பு திறமை  மென்மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறது மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படம் வெளியான பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அவர் நடசத்திர அந்தஸ்து அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடும் என்பதை நான் நம்பிக்கையோடு கூறுகிறேன். இந்தப் படத்திற்கு மேலும் பன்மனடங்கு பலம் சேர்க்கும் விதமாக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களின் இசை அமைந்துள்ளது. இப்படம் அனைவருக்கும் பிடித்த வகையில் எல்லோரையும் திருப்திபடுத்தும் படமாக இருக்கும்.” என்றார்.

 

Clap

 

ஆதி, ஆகான்ஷா சிங் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் கிரிஷ் குருப், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘கிளாப்’ படத்தின் இணை தயாரிப்பாளராக பி.பிரபா பிரேம், மனோஜ் மற்றும் ஹர்ஷா பணியாற்றுகின்றனர். 

 

படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு அதை தொடர்ந்து படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பு தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.