Nov 23, 2021 07:26 PM

பப்ளிக் ஸ்டாரை பதற வைத்த காவி துண்டு!

பப்ளிக் ஸ்டாரை பதற வைத்த காவி துண்டு!

‘தப்பாட்டம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அப்படத்தை தொடர்ந்து ‘டேனி’, ‘க/பெ.ரணசிங்கம்’ சமீபத்தில் வெளியான ‘உடன்பிறப்பே’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் ‘நான் ஒரு முட்டாள்’ படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக களம் இறங்கியிருப்பதோடு, அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

 

அவர் பாடிய, “குடியின் மவன் நான் குடிமகன்...விஸ்கி பிராந்தி சீரு கேட்கும் மருமகன்...” என்று தொடங்கும் யூடியூப் தளத்தில் வைரலாகி வரும் நிலையில், காவி துண்டால் அவர் பதறிய சம்பவம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கும் திரைப்படம் ‘ஆன்டி இண்டியன்’. பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ள இப்படத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதாவது, படத்தின் திருப்புமுனையே இவருடைய கதாப்பாத்திரம் தான்.

 

அப்படிப்பட்ட முக்கியமான கதாப்பாத்திரத்திற்காக தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பப்ளிக் ஸ்டாருக்கு இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், காவி துண்டு ஒன்றை அணிவித்து, சில வசனங்களை கொடுத்து, காட்சியை விவரித்து நடிக்க சொல்லிவிட்டாராம். காவி துண்டை அணிவித்ததும் பதறிப்போன பப்ளிக் ஸ்டார், நம்மை வைத்து ஏதாவது சர்ச்சையை கிளப்ப போகிறார்களோ, என்ற அச்சத்திலேயே அந்த காட்சியில் நடித்து முடித்தாராம்.

 

இதற்கிடையே, படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக படக்குழுவினர் நீதிமன்றத்தை நாடியதால், மேலும் பதற்றம் அடைந்த பப்ளிக் ஸ்டார், நிச்சயம் படத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று உணர்ந்து படத்தின் டிரைலர் வெளியீட்டுக்கே வரவில்லையாம். ஆனால், தற்போது படத்தை பார்த்தவர்கள், அப்படிப்பட்ட காட்சிகள் படத்தில் ஏதும் இல்லை என்று, கூறியதால் அவர் நிம்மதியடைந்துள்ளாராம்.

 

இந்த தகவலை, நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், இன்று நடைபெற்ற ‘ஆன்டி இண்டியன்’ திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

 

Anti Indian

 

மேலும், இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் குறித்து பேசுகையில், “நான் பல்வேறு முயற்சிகளின் மூலம் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் உருவான ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு பெற்று, நடித்தும் முடித்துவிட்டேன். படம் வெளியாக இருக்கும் நிலையில், நான் கவலைப்பட்டது அண்ணன் ப்ளூ சட்டை மாறனுக்கு தான். விமர்சனத்தில் தனது நடிப்பை என்ன சொல்வாரோ என்று பயந்தேன். அதனால் எனக்கு அன்றைய இரவு தூக்கமே வரவில்லை. காரணம், கஷ்ட்டப்பட்டு நடித்திருக்கிறோம், தனது நடிப்பு குறித்து அவர் தாறுமாறாக பேசி, நம் சினிமா கனவை ஒரே படத்தில் சிதைத்து விடுவாரோ என்று பயந்தேன். அதனால், அவரை தொடர்பு கொள்ள கூட முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. பிறகு அவர் விமர்சனம் செய்யும் போது, என் கதாப்பாத்திரத்தை எதுவும் சொல்லவில்லை. அப்போது தான் நான் நிம்மதியடைந்தேன்.

 

அதேபோல், இந்த படத்தில் எனக்கு அவர் நடிக்க வாய்ப்பு கொடுத்த போது, எனக்கு சம்பளம் பேசப்பட்டது. ஆனால், நான் அவருக்கு எதாவது உதவி வேண்டுமா? என்று கேட்டேன், ஆனால், அவர் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார். அப்போது தான் தெரிந்தது, அவர் இப்படி நேர்மையாக இருப்பதால் தான், திரைப்பட விமர்சனங்களையும் நேர்மையாக சொல்கிறார், என்று.

 

‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் வெளியான பிறகு நிச்சயம் பல இயக்குநர்கள் விமர்சகர்களாக மாறுவார்கள். ஆனால், ப்ளூ சட்டை மாறன் அண்ணன் மீது கோபமாக இருப்பவர்கள் படத்தை பார்த்தால், அவரை நிச்சயம் திட்ட முடியாது. அந்த அளவுக்கு படம் சிறப்பாக வந்துள்ளது.” என்றார்.