Dec 02, 2021 04:39 PM

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் அரசியல் படம் ‘ரிபெல்’! - பூஜையுடன் தொடங்கியது

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் அரசியல் படம் ‘ரிபெல்’! - பூஜையுடன் தொடங்கியது

ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் ‘பேச்சுலர்’ மற்றும் ‘ஜெயில்’ என இரண்டு படங்கள் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், இன்று அவர் நடிக்கும் அரசியல் திரைப்படமான ‘ரிபெல்’ படத்தின் துவக்க விழா பூஜையுடன் நடைபெற்றது.

 

ஸ்டுடியோ கிரீன் மற்றும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா மற்றும் சி.வி.குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்குகிறார்.

 

இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.இரஞ்சித், நலன் குமாரசாமி, கெளரவ், தயாரிப்பாளர்கள் டி.சிவா, தனஞ்செயன், நடிகர் ஆரி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

படம் குறித்து பேசிய இயக்குநர் நிகேஷ், “இது ஒரு அரசியல் படம், ரஞ்சித் சார் திரைப்படங்கள் தான் எனக்கு சினிமா கற்று தந்தது. அவர் இங்கு வந்து வாழ்த்தியது மகிழ்ச்சி. இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சி.வி.குமார் சாருக்கு நன்றி. இந்தப்படத்தை புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக்கொண்ட ஜீவி சாருக்கு நன்றி. சமூகத்திற்கு தேவையான படமாக இப்படம் இருக்கும்.” என்றார்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “ஞானவேல் சார், சி.வி.குமார் சார், புதுசா ஒரு படம் ஆரம்பிச்சிருக்காங்க. இந்தக்கூட்டணி எனக்கு ரொம்ப பிடிச்ச கூட்டணி.  ஜீவி சார் நடிக்கிறார். அவருக்கு என் படங்கள் பிடிக்கும், என் படங்கள் பார்த்து பேசுவார். அவருடன் இணைந்து ஞானவேல் ராஜா தயாரிப்பில், விரைவில் ஒரு படம் செய்ய பேசிட்டு இருக்கோம். இந்தப்படம் பற்றி சொன்னார்கள். இந்தப்படம் முக்கியமான ஊரின் வரலாறை பேசுவதாக சொன்னார்கள். மூணாறு ஊரின் அரசியல் எனக்கு தெரியும். அந்த அரசியலை இந்தப்படம் பேசுவது மகிழ்ச்சி. சிறப்பான படைப்பாக இருக்குமென்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசுகையில், “நான் 24 படம் பண்ணிட்டேன். இவ்வளவு பெரிய பூஜை இந்தப்படத்திற்கு தான். இந்தப்படத்தை ஒப்புக்கொள்ளவே, ஒரு தைரியம் வேணும்.  அது K E ஞானவேல் ராஜா சாரிடம் இருக்கிறது. இது ஒரு அரசியல் கதை, இது எப்படி அமையப்போகிறது என பயம் இருந்தது. ஆனால் இந்தப்படத்தில் நல்ல கூட்டணி அமைந்திருக்கிறது. கதையும் நன்றாக உள்ளது. ஒரு சிறந்த அரசியல் படமாக இப்படம் இருக்கும்.’ என்றார்.

 

தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா பேசுகையில், “பேச்சிலர் படம் பார்த்தேன், மிகவும் பிடித்தது. படம் ரொம்ப பிரமாதமாக இருந்தது. ஜீவிக்கு வாழ்த்துகள். ரிபெல் கதையை நிகேஷ் சொல்லும்போதே ரொம்ப பிடித்திருந்தது. ஒரு காலேஜ் கதை, அரசியல், தமிழுணர்வு எல்லாம் கலந்திருந்தது. ஜீவி சரியாக இருப்பார் என அவரிடம் சொன்னேன் அவர் கதை கேட்டு,  நான் ரசித்த இடங்களை அப்படியே அவரும் ரசித்ததாக சொன்னார். இப்போது ரிபெல் படத்தை ஆரம்பித்திருக்கிறோம். இன்றைக்கு மாலை  எங்கள் நிறுவனத்தின் சார்பில் வேறொரு அறிவிப்பும் வருகிறது. இரண்டு படங்களுக்கும் உங்கள் ஆதரவு தேவை. ரஞ்சித் பிரதர் உடன் ஆரம்பத்தில் படம் செய்துள்ளேன். இன்று அவர் பெரிய உயரத்தில் இருக்கிறார். நலன் சாருடன் அடுத்த அறிவிப்பு விரைவில் வரும். இருவரும் இங்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. இந்தப்படம் ஒரு சிறப்பான அரசியல் கதையை சொல்லும். ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

நடிகர் ஜீவி பிரகாஷ் பேசுகையில், “கே.இ.ஞானவேல் ராஜா சார் தான் என்னை ஒரு நடிகனாக என்னை அறிமுகப்படுத்தி வெற்றி பெற வைத்தார். ஒரு நடிகனாக எனக்கு ஒரு பிஸினஸை ஏற்படுத்தி நிலை நிறுத்தியவர் அவர் தான். அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்வது மகிழ்ச்சி. நாங்கள் இணைந்து செய்த அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் இந்தப்படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நிகேஷ் திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது. சமூகத்திற்கு சொல்ல வேண்டிய ஒரு கதை இதில் இருக்கிறது. அதை நாங்கள் சரியாக சொல்வோம் என்று நம்புகிறேன்.” என்றார்.