May 17, 2022 10:06 AM

ரசிகராக இருந்து என்னை லோகேஷ் இயக்கியிருப்பது எனக்கு தான் பெருமை - கமல்ஹாசன் பேச்சு

ரசிகராக இருந்து என்னை லோகேஷ் இயக்கியிருப்பது எனக்கு தான் பெருமை - கமல்ஹாசன் பேச்சு

விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், என் ரசிகராக இருந்த லோகேஷ் என்னை இயக்கியிருப்பது எனக்கு தான் பெருமை, என்று கூறியிருக்கிறார்.

 

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “ "உயிரே உறவே வணக்கம்".. கிட்டத்தட்ட  நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய படத்தின் விழா நடக்கிறது .தமிழ்நாட்டை பொருத்தவரை சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்தவை. அதை தான் நானும் செய்கிறேன். நான் முழுமையான அரசியல்வாதியும் இல்லை நடிகனும் இல்லை. நான் முதன் முதலில் அரசியலுக்கு போகிறேன் என்று சொன்ன போது சிம்புவின் அப்பா டி.ஆர். என்னை தேடி வந்து என்னை கட்டி பிடித்து கேவி கேவி அழுதார். 'எப்படி சார் நீங்கள் இதை செய்யலாம்?' என்று கேட்டார். என் தகுதிக்கு மீறிய புகழை மக்களான நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அதை நான் திருப்பி கொடுக்க வேண்டும். நான் பணத்துக்காக நடிக்க வந்திருந்தால் இது நடந்திருக்காது. நான் சிறு வயதில் சிவாஜி, எம்.ஜி.ஆர். அலுவலகத்தின் வெளியில் எல்லாம் சென்று நின்றிருக்கிறேன். அப்படி இருந்தவனுக்கு நீங்கள் என்ன இடம் கொடுத்தாலும் அது பெரிதுதான். ஐந்து வயதில் வந்தவனை இன்னும் நீங்கள் தோளில் இருந்து இறக்கவில்லை.

 

நான் poltical cultrist என்று என்னை குறிப்பிட்டு கொள்வேன். மொழி போராட்டங்கள் சுதந்திர காலத்தில் இருந்து நடந்து வருகிறது. இந்தியாவின் அழகே பன்முகம் தான். இந்தி ஒழிக என்று சொல்கிறீர்களா என்று கேட்காதீர்கள். நான் இந்தியும் தமிழும் சுமாராக தான் பேசுவேன். எந்த மொழியையும் ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அது நுண்ணுர்வு சம்பந்தப்பட்டது. இது அனைவருக்கும் இருக்க வேண்டும். அனைத்து மொழிகளும் கற்று கொள்ள வேண்டும். ஆனால், தாய் மொழியை விட்டு கொடுக்கக் கூடாது.

 

இதுக்கிடையிலே எங்கள் திறமைகள் பளிச்சிட திரையரங்குகள் முதல் சாளரம். சாட்டிலைட் வந்த போது சினிமா கெட்டு விடும் என்று எதிர்த்த போது எதிர் குரல் கொடுத்தவன் நான். ஓடிடியை முன்பே கணித்தவன் நான். இவை எல்லாம் வருவதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாது. இதற்கு உதாரணம் காலண்டரில் வெங்கடாசலபதி படம் போடுவதால் திருப்பதியில் கூட்டம் குறையாது.

 

இந்த ஒலி, கரவொலி எல்லாம் கேட்பதற்கு என் தாய் தந்தை இல்லை. சந்திரஹாசனாவது இருந்திருக்கலாம். சாருஹாசன் எங்கோ இருந்து 92 வயதில் கேட்டுக் கொண்டிருப்பார். இயக்குநர் ரஞ்சித் உங்கள் எதிர்ப்பார்ப்புக்கான விதையை தூவி விட்டு தான் சென்றிருக்கிறார். நிச்சயம் அது நடக்கும். படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது என்பதை பலரும் கேட்டார்கள். ஸ்டாலின் எனக்கு அரசியல் தாண்டிய நண்பர். ஏன் நானும் ரஜினியும் திரையில் இருந்தாலும் நண்பர்களாக இல்லையா. இளவயதில் நாங்கள் ஏதும் எதிராக பேசி இருக்கலாம். ஆனால், எங்கள் நட்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி பயணப்பட வேண்டும் என்பதை 25 வயதில் முடிவு செய்தவர்கள் நாங்கள். அது போல கலைஞரிடம் ஆரம்பித்த உறவு, அவரது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது 

 

என் காரை தொட்டு பார்த்த ரசிகராக இருந்த லோகேஷ் என்னை இயக்கி இருப்பது எனக்கு தான் பெருமை. இந்த வெற்றி கூட்டணி தொடரும். 

 

விஜய்சேதுபதி நான் 22 வயதில் வேலை செய்தது போல அவர் இப்போது 44 வயதில் செய்து கொண்டிருக்கிறார். நான் அந்த வயதில் ஒரு வருடத்தில் எத்தனை படங்கள் நடித்தேனோ அது போல விஜய்சேதுபதி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறார்.

 

இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அபாயகரமானதாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். அதற்கு காரணம் அன்பறிவு. அனிருத் இசையில் 'பத்தல பத்தல' வெற்றி எனக்கே இப்படி கிடைத்ததில்லை. மூன்று மொழிகளிலும் நானே பாடி இருக்கிறேன். இந்த படம் வெல்லும் என அனைவரும் நம்பிக்கையாக சொல்வதற்கு காரணம் வலுவான அணி அமைந்திருக்கிறது. படத்தில் நடித்து கொடுத்த சூர்யாவுக்கு நன்றி.” என்றார்.