Sep 28, 2022 03:14 AM

’நானே வருவேன்’ படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லாதது ஏன்? - தயாரிப்பாளர் தாணு விளக்கம்

’நானே வருவேன்’ படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லாதது ஏன்? - தயாரிப்பாளர் தாணு விளக்கம்

‘திருச்சிற்றம்பலம்’ வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘நானே வருவேன்’. இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனுஷ் என்ற வெற்றி தொடர் வெற்றி கூட்டணி படம் என்பதாலும், இப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என்று தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாலும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

நாளை (செப்.29) உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘நானே வருவேன்’ திரைப்படம் வெளியாகும் நிலையில், அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் தனுஷ் ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைந்திருப்பதாக் அதகவல் வெளியாகியுள்ளது.

 

பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடுவது வழக்கமாகி விட்டது. அதுபோல தான் ‘நானே வருவேன்’ படத்திற்கும் அதிகாலை காட்சி இருக்கும் என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

 

ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும் விதமாக ‘நானே வருவேன்’ படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு மட்டுமே தொடங்குகிறது. இந்த தகவலால் தனுஷ் ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைந்த நிலையில், அவர்களுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு விளக்கம் அளித்துள்ளார்.

 

நானே வருவேன் படத்திற்கு அதிகாலை காட்சிகள் வைக்காதது ஏன்? என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேட்டி ஒன்றில் கூறுகையில், “நான் தயாரித்த அசுரன் மற்றும் கர்ணன் இரண்டு படங்களையும் காலை 8 மணி காட்சிக்குத்தான் நான் வெளியிட்டேன்.

 

தமிழகத்தில் சில ஊர்களில் மட்டும் தான் அதிகாலை 4 மற்றும் 5 மணி காட்சிகள் திரையிடப்படுகின்றன. மற்ற ஊர்களில் பொதுவாக 8 மணிக்கு தான் காட்சிகள் தொடங்குகின்றன. அப்போது தான் உலகம் முழுக்க அனைவராலும் ஒரே நேரத்தில் படத்தை பார்க்க முடியும்.

 

மற்றொரு காரணம், அதிகாலை 4 மணி காட்சிக்கு நள்ளிரவே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்துவிடுகின்றனர். அது தேவையில்லை என நினைக்கிறேன். எனவே தான் அதிகாலை 4 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது.”  என்று தெரிவித்துள்ளார்.

 

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் இந்த நியாயமான விளக்கத்தை ஏற்றுக்கொண்ட தனுஷ் ரசிகரக்ள் காலை 8 மணி காட்சியை விமர்சியாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

 

மேலும், தன்னுடைய படங்களின் விளம்பரங்களை மிக பிரமாண்டமாக செய்யும் கலைப்புலி எஸ்.தாணு, ‘நானே வருவேன்’ படத்திற்காக மேற்கொண்ட விளம்பர பணிகளால் அப்படம் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது.