Nov 18, 2023 06:09 PM

ரசிகர்களின் ஆவலை தூண்டிய ‘லேபில்’ தொடரின் 4வது பகுதி வெளியானது!

ரசிகர்களின் ஆவலை தூண்டிய ‘லேபில்’ தொடரின் 4வது பகுதி வெளியானது!

இந்தியாவின் முன்னணி ஓடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள தமிழ் இணையத் தொடர் ‘லேபில்’. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், ஜெய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இத்தொடர் வட சென்னையை மையப்படுத்திய விறுவிறுப்பாக ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் தொடராக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு, விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

 

இந்த தொடரின் முதல் மூன்று பகுதிகளை கடந்த நவம்பர் 10 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டது. மூன்று பாகங்களிலும் இருந்த திருப்புமுனை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளின் வடிவமைப்பு ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, இயக்குநர் மேக்கிங்கும் பெரும் பாராட்டு பெற்றதோடு, மூன்று பாகங்களில் இருந்த திருப்பங்கள் மற்றும் சஸ்பென்ஸ்களுக்கு விளக்கமளிக்கும் நான்காவது பாகத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆவல் ஏற்பட்டது.

 

இந்த நிலையில், ரசிகர்களுக்கு ஆவலை தூண்டிய ‘லேபில்’ தொடரின் நான்காவது பாகத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், ரசிகர்களிடம் பேசுபொருளாக பிரபலமடைந்து வரும் இந்த தொடரின், ஒவ்வொரு புதிய பாகமும் ஒவ்வொன்றாக ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

 

மூன்றாவது எபிஸோட், வட சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபா, ஒரு கொலை வழக்கில் சிறைக்குச் செல்லும் வீரா மற்றும் குமார் ஆகிய இரு இளைஞர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதைக் காட்டியது. ஆனாலும், தவறான வழிநடத்தையில் இருக்கும் இளைஞர்கள், லேபில் பட்டத்தை பெறும்   ஆசையில், மேலுமொரு பயங்கரமான சம்பவம் ஒன்றைச் செய்கிறார்கள். 

 

நான்காவது  எபிஸோடில் அந்தச் இளைஞர்களின் கணக்குகள் எப்படி தவறாக முடிகிறது,  என்பதைக் காட்டுகிறது. லேபில் பட்டம் கிடைப்பதற்கு பதிலாக அவர்கள் மீது மரண நிழல் சூழ ஆரம்பிக்கிறது. ஒரு புறம் மோசமான ரௌடி கும்பல் இன்னொருபுறம் காவல்துறையினரும் அவர்களை கொலை செய்ய முயல்கிறார்கள். இந்த நிலையில்  அவர்களை மீட்க பிரபா என்ன செய்யப் போகிறான் ?

 

இந்த தொடரை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.

 

லேபில் தொடரை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் .சி.எஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடன அமைப்பை  அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

ஜெய் நாயகனாக நடித்திருக்கும் இத்தொடரில் தன்யா ஹோப் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் மாஸ்டர் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.