Sep 26, 2020 05:12 AM

மக்கள் மனதில் வாழும் எஸ்.பி.பி-க்கு மரணமே இல்லை - நடிகர் துரை சுதாகர் இரங்கல்

மக்கள் மனதில் வாழும் எஸ்.பி.பி-க்கு மரணமே இல்லை - நடிகர் துரை சுதாகர் இரங்கல்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், ‘களவாணி 2’ மற்றும் ‘டேனி’ திரைப்படங்கள் மூலம் தனது எதார்த்தமான நடிப்பால் பாராட்டு பெற்ற நடிகர் பப்ளிக் ஸ்டார் நடிகர் துரை சுதாகர், மக்கள் மனதில் வாழும் எஸ்.பி.பி-க்கு மரணமே இல்லை, என்று கூறியிருக்கிறார்.

 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தனது குரல் மூலம் மக்களை மகிழ்வித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், காதல், துக்கம், சந்தோஷம், கம்பீரம், அழகு என அனைத்தையும் தனது குரல் மூலம் வெளிப்படுத்தியவர். இசை மீது ஆர்வம் இல்லாதவர்கள் கூட இவரது பாடல்களை கேட்ட பிறகு இசை பிரியர்களாகி இவருடைய பரம விரிசியாகியிருக்கிறார்கள்.

 

இந்திய மொழிகள் அனைத்திலும் பாடல்கள் பாடிய பாடகர் என்ற தனிச்சிறப்போடு வலம் வந்த எஸ்.பி.பி-யின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். என் வாழ்க்கையில் அவரது பாடல் கேட்காத நாள் இல்லை, என்று சொல்லும் அளவுக்கு அவர் பாடலுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். அவர் உயிர் பிரிந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

 

காலத்தின் கட்டாயத்தால் அவர் நம்மை விட்டு பிரிந்தாலும், நம் இதயத்திற்குள் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் எஸ்.பி.பி-க்கு மரணமே இல்லை.

 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.