May 11, 2025 04:36 PM

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் இருமொழிப் படத்தின் அறிவிப்பு!

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் இருமொழிப் படத்தின் அறிவிப்பு!

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன், தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தை இயக்குகிறார். ரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் 5 வது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

’உய்யாலா ஜம்பாலா’ படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களின் மனதை வென்ற ராஜ் தருண், ’குமாரி 21F’, ’சினிமா சூப்பிஸ்த மாமா’ போன்ற ஹிட் படங்களை கொடுத்து தெலுங்கு திரையுலகின் கவனம் ஈர்த்த நிலையில், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

 

இந்த நிலையில், ராஜ் தருணின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

 

’10 எண்ணுறதுக்குள்ள’, ’கோலி சோடா’, ’கோலி சோடா 1.5’,’கடுகு’, ’பைரகி’ உள்ளிட்ட விமர்சனம் மற்றும் வணிக ரீதியாக வெற்றியடைந்த படங்களை இயக்கியிருக்கும் விஜய் மில்டன்,  ஒளிப்பதிவாளராக, சிவராஜ்குமார், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் 40-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறுகையில், “இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். கோலி சோடா பாணியை தொடர்ந்து- இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை கொண்டு வருகிறது  . ராஜ் தருண் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் தோன்றுகிறார்; தமிழ் ரசிகர்களை அவருடைய நடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என எனக்கு நம்பிக்கை உள்ளது.

 

புரொடக்‌ஷன் நம்பர் 5 படமானது, கோலி சோடா திரைப்படங்கள் போலவே, நியாயமான ஆனால் தாக்கம்மிக்க காட்சிப்படுத்தலோடு தொடரும். தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களை இணைக்கும் முயற்சியாகவும், வலுவான கதையம்சம் மற்றும் பிரதான கதாநாயகனின் அர்ப்பணிப்பு நிறைந்த நடிப்பை வழங்கும் நோக்கத்துடனும் உருவாக்கப்படுகிறது.

 

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ராஜ் தருண் போன்ற ஒரு சக்திவாய்ந்த, திறமைமிக்க நடிகரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவதில் ரஃப் நோட் புரொடக்‌ஷன் பெருமை கொள்கிறது. மேலும் இந்தப் படத்தைப் பற்றிய தகவல்களை  ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறது.” என்றார்.