Oct 22, 2021 07:47 PM

சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் போட்டியாளர் அக்சரா ரெட்டி! - மறைக்கப்பட்ட தங்கக் கடத்தல் உண்மை

சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் போட்டியாளர் அக்சரா ரெட்டி! - மறைக்கப்பட்ட தங்கக் கடத்தல் உண்மை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய சில தினங்களிலேயே போட்டியாளர்களில் ஒருவரான அக்சரா ரெட்டி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது, 2013 ஆம் ஆண்டு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் அக்சரா ரெட்டியும் சம்மந்தப்பட்டவர், அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது.

 

கீர்த்தனா எனும் நபர் ட்விட்டரில் இது குறித்து வெளியிட்ட தகவல் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரித்ததில், அந்த தகவல் உண்மை என்றாலும், அந்த வழக்கின் போது பிரபலங்கள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டதை போல் நடிகையும் மாடலான அக்சரா ரெட்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

 

மேலும், அந்த சமயத்தில் அக்சரா ரெட்டியின் பெயர் ஸ்ரவ்யா சுதாகர் ரெட்டி என்பதாகும். மாடலிங் மற்றும் நடிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த ஸ்ரவ்யா, திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கேரளாவை சேர்ந்த டி.கே.பைஸ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

 

இந்த டி.கே.பைஸ் தான் தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஆவார். இவர் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படதை தொடர்ந்து இவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் போலீஸ் விசாரிக்கும் பணியை மேற்கொண்டது. சுமார் 238 பேரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான சினிமா பிரபலங்களும் இருந்தனர். அந்த வகையில், சினிமா நடிகையும், மாடல் அழகியுமான ஸ்ரவ்யா சுதாகர் ரெட்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

 

விசாரணைக்கு பிறகு ஸ்ரவ்யா சுதாகர் ரெட்டி குற்றமற்றவர் என்று அறிவித்த சிபிஐ, தங்கக் கடத்தலில் அவருக்கு தொடர்பு இல்லை என்றும், வழக்கு சம்மந்தமுள்ளதாக கருதப்பட்ட 238 பேரில் ஒருவராக அவரிடம் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தது.

 

மேலும், ஸ்ரவ்யா சுதாகர் ரெட்டியின் துணிச்சலான வாக்குமூலத்தின் மூலம் தங்கக் கடத்தல் வழக்கின் பல மர்மங்கள் வெளியுலகிற்கு தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

 

அதேபோல், ஸ்ரவ்யா சுதாகர் ரெட்டி என்ற தனது பெயரை அக்சரா ரெட்டி என மாற்றிக் கொண்டதையும், அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்டதையும் குறிப்பிட்டு சிலர் அவருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

ஆனால், அவர் பெயர் மாற்ற காரணம் ராசி தானாம். சினிமாவில் பொதுவாக நடிகர், நடிகைகள் இயற்பெயர்களை விட புனைப்பெயர்களில் தான் உலா வருகிறார்கள். இதற்கு ஜோதிடம் தான் காரணம். அதே ஜோதிடத்திற்காகவே ஸ்ரவ்யா சுதாகர் ரெட்டி என்ற தனது பெயரை அவர் அக்சரா ரெட்டி என்று மாற்றிக்கொண்டார்.

 

அதேபோல், சுவாசிப்பதில் பிரச்சினை இருந்ததால் மருத்துவர்கள் ஆலோசனை பேரில், ரைனோபிளாஸ்டிக் என்ற சிகிச்சை முறையை அக்சரா ரெட்டி மேற்கொண்டார். இதுவும் நடிகைகள் வழக்கமாக செய்வது தான்.

 

அக்காலத்து நடிகை ஸ்ரீதேவி தொடங்கி நயன்தாரா, சமந்தா என பல நடிகைகள் தங்களது அழகை கூட்டுவதற்காக அவ்வபோது சில பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைகளை செய்துக் கொள்கிறார்கள். அதுபோல தான், நடிகை அக்சரா ரெட்டியும் செய்துக் கொண்டிருக்கிறார்.

 

ஒரு நடிகையாக திரைத்துறையில் நிலைநிறுத்திக் கொள்ள அக்சரா ரெட்டி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சாதாரணமான நிகழ்வு, என்பது இதன் மூலம் தெரிகிறது.

 

மொத்தத்தில், கேரள தங்கக் கடத்தல் வழக்குக்கும் அக்சரா ரெட்டிக்கும் தொடர்பு இல்லை, என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.