Jun 01, 2018 04:19 PM

ரஜினியை யார் நீங்க? என்று கேட்ட இளைஞர் மீது வழக்கு!

ரஜினியை யார் நீங்க? என்று கேட்ட இளைஞர் மீது வழக்கு!

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்திக்க சென்ற ரஜினிகாந்தைப் பார்த்து, காயமடைந்த இளைஞர் ஒருவர், “யார் நீங்க?” என்று கேள்வி எழுப்பினார். இளைஞரின் இந்த அனுகுமுறை, இணையத்தில் வைரலானது.

 

ரஜினியை யார் நீங்க? என்று கேள்விகேட்டவர் 22 வயதுடைய சந்தோஷ் ராஜ் என்ற கல்லூரி மாணவர் ஆவார்.

 

சந்தோஷ் ராஜ் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்தவர். அனைத்து மாணவர் கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். 

 

ரஜினி வந்து மருத்துவமனையில் உள்ளவர்களிடம் ஆறுதல் சொன்ன போது, சந்தோஷிடமும் பேசினார். அப்போது, “100 நாட்கள் போராட்டம் நடைபெற்றபோது, சென்னை ரொம்ப தூரத்தில் இருந்திச்சோ, அப்போல்லாம் எங்களை பார்க்க வரவில்லை, இப்போது வந்துள்ளீர்கள். மற்றபடி நீங்கள்தான் ரஜினிகாந்த் என்பது எங்களுக்கு தெரியும்.” என்று சந்தோஷ் கூறினார்.

 

இதனை கேட்ட ரஜினிகாந்த், கோபமடைந்ததோடு, அங்கேயிருந்து அடுத்த படுக்கைக்கு கிளம்பி சென்றுவிட்டார். 

 

இந்த நிலையில், எதிர்த்து கேள்வி கேட்ட சந்தோஷ் ராஜ் மீது தேச துரோகி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 'சோ கால்டு' ரஜினி ஆதரவாளர்கள், சோஷியல் மீடியாவில் ஒரு போட்டோவை பரப்பி வருகிறார்கள். தேசிய கொடியை எரித்த திலீபனுக்கும் சந்தோஷ் ராஜுக்கும் தொடர்பு உள்ளதாகவும், இவர் ஒரு 'ஆன்டி இந்தியன்' என்றும் அவர்கள் குமுறுகிறார்கள்.

 

இது குறித்து சந்தோஷ் ராஜ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில், “தேசிய கொடியை எரித்ததாக திலீபன் மீது வழக்கு உள்ளதாகவும், எனக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. நான் இதற்கு முன்பு திலீபனை பார்த்தது கூட இல்லை. அவருக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. ரஜினிகாந்த் வந்து சென்ற பிறகுதான் திலீபன் மருத்துவமனைக்கு வந்து சென்றார். எனக்கும் திலீபனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி வழக்குப் பதிவு செய்ய முயற்சி நடப்பதாக தெரிகிறது. அப்படி நடந்தால் என்னுடைய எதிர்காலம் பாதிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.