Jun 06, 2018 06:49 AM

'காலா’ வை முதல்வர் காப்பாற்றுவார்! - ரஜினிகாந்த் நம்பிக்கை

'காலா’ வை முதல்வர் காப்பாற்றுவார்! - ரஜினிகாந்த் நம்பிக்கை

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் நாலை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் வெளியிடுவதற்கு அம்மாநில வர்த்தக சபை தடை விதித்துள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால், கன்னட அமைப்புகள் ரஜினிகாந்தின் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

காலா படத்தை கர்நாடாகவில் ரிலீஸ் செய்ய, கர்நாடக வர்த்தக சபையுடன் தேசிய வர்த்தக சபை பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதே சமயம் தடையை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் தனுஷும், அவரது மனைவியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை ரிலீஸ் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது, என்று கூறியதோடு, படம் வெளியானால் உரிய பாதுகாப்பு தர வேண்டும், என்று உத்தரவிட்டது.

 

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ”’காலா’ படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல்படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு. காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை, உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதல்வர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது.” என்று தெரிவித்தார்.

 

காலா படத்திற்கு தடை விதித்திருக்கும் கர்நாடக வர்த்தக சபை, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும், என்று ரஜினிகாந்த் கூறினால், தடையை விலக்கிக் கொள்வதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.