கொரோனா பாதிப்பு! - கோலிவுட் நடிகை வீட்டுக்கு சீல்
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் தினந்தோறும் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பிரபல நடிகை குஷ்பூவின் நெருங்கிய உறவினர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சினிமா பிரபலங்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், வேறு மாவட்டத்திற்கு பயணித்துள்ள சில சினிமா பிரபலங்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரபல தமிழ் நடிகைகளில் ஒருவரான பிந்து மாதவி, கொரோனா பாதிப்பால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், கொரோனா தொற்று அவருக்கு ஏற்படவில்லை. அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த முழு அடுக்குமாடி குடியிருப்பையும் மாநகராட்சி ஊழியர்கள் அலுமினிய ஷீட் போட்டு அடைத்ததோடு, அந்த குடியிருப்பில் இருக்கும் அனைத்து குடியிருப்புவாசிகளையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதனால், நடிகை பிந்து மாதவி 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகையான பிந்து மாதவி, 2009 ஆம் ஆண்டு வெளியான ‘பொக்கிஷம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ’வெப்பம்’, ‘கழுகு’,’தேசிங்கு ராஜா’, ’ஜாக்சன் துரை’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர், தற்போது ‘மாயன்’, ‘கழுகு 2’, ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
இதோ அவரது அறிவிப்பு,
One of the resident in my apartment is tested covid positive and so it’s self isolation for all of us in the building for the next 14 days.... #redzone pic.twitter.com/l1MaTP7UDm
— bindu madhavi (@thebindumadhavi) May 30, 2020