முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று வரும் அறிமுக நாயகி அனு ஸ்ரீ!

தமிழ் சினிமாவில் நாயகியாக நுழைவதும், அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்வதும் மிகப்பெரிய சவால் ஆகும். தற்போதைய காலக்கட்டத்தில் அத்தகைய சவாலை சாமர்த்தியமாக சமாளிக்க அழகு மட்டுமே போதாது, அதனுடன் பல்வேறு துறைகளில் திறமை மிக்கவராக இருத்தல் மிக மிக அவசியம் என்பதை தற்போதைய திரைப்படங்களும், அதில் நடிக்கும் நாயகிகளும் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், நம்பிக்கை நட்சத்திரமாக கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாக இருக்கும் அனு ஸ்ரீ-க்கு முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே வரிசையாக பட வாய்ப்புகள் கிடைக்கிறது, என்றால் அவர் எத்தகைய திறமைசாலி என்பது தெரிகிறது.
இயக்குநர் ரங்கா இயக்கத்தில் உருவாகும் தலைப்பு வைக்கப்படாத புதிய படத்தில் நாயகியாக நடித்து வரும் அனு ஸ்ரீ, அப்படத்தை விரைவில் முடித்துவிட்டு அடுத்ததாக எஸ்.ஜெ.சூர்யா நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார். முதல் படத்தின் பணிகள் விரைவில் முடிய உள்ள நிலையில், அவருக்கு உடனடியாக இரண்டாவது பட வாய்ப்பு கிடைத்திருப்பதோடு, மேலும் சில படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் வந்திருப்பதால், அறிமுக படம் வெளியாவதற்கு முன்பாகவே பல படங்களின் வாய்ப்புகளை பெற்று வரும் நடிகை என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளவர், தனது சினிமா பயணம் மற்றும் சினிமா மீதான தனது ஆர்வம் பற்றி நம்மிடம் பகிர்ந்துக் கொண்டது இதோ,
சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விசயம், அதிலும் முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்தடுத்த படங்கள் என்று பிஸியாக இருக்கிறீர்களே, எப்படி?
நான் பள்ளி பருவத்திலேயே நடனம், மேடை நாடகம் போன்றவற்றில் ஈடுபடுவேன், கல்லூரி படிக்கும் போது சினிமா தான் என் எதிர்காலம் என்று முடிவு செய்துவிட்டேன். சினிமாவில் நாயகியாக நடிக்க வேண்டும் என்ற முடிவோடு தான் எனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தேன். அதற்காக நடிப்பு, நடனம் ஆகியவற்றை முறையாக கற்றுக் கொண்டதோடு, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொண்டேன். படிப்பு முடிந்த பிறகு சினிமாவில் வாய்ப்பு தேடிய போது, என் புகைப்படத்தை பார்த்து ஆடிசனுக்கு அழைத்தார்கள், ஆடிசனில் என்னுடைய நடிப்பை பார்த்தப் பிறகு எனக்கு நாயகியாக வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது, அதே சமயம் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சினிமாவில் நாயகியாக நிலைத்து நிற்க வேண்டும் என்று முடிவு செய்தேன். படம் விரைவில் முடிய இருக்கிறது. படத்தின் தலைப்பு உள்ளிட்ட விவரங்களை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
முதல் படத்தில் ஐடி துறையில் பணியாற்றும் பெண்ணாக நடித்திருக்கிறேன். துறுதுறுவென்று இருக்கும் ஒரு கதாபாத்திரம் மிக அழகாக வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். முதல் படத்தில் நடிக்கும் போது என் நடிப்பை பார்த்து பாராட்டியவர்கள் மூலமாக தான் இரண்டாவது பட வாய்ப்பும் கிடைத்தது. அதில், கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். எஸ்.ஜெ.சூர்யா சார் நடிக்கிறார். படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அதேபோல் மேலும் சில படங்களின் வாய்ப்புகள் வந்திருக்கிறது, அது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இப்போதைக்கு இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறேன்.
சினிமா மீதான ஆசை எப்படி வந்தது ?
நான் சென்னை பொண்ணு தான். பள்ளி, கல்லூரி எல்லாமே சென்னையில் தான், பி.பி.ஏ மற்றும் பி.எஸ்.சி ஃபேஷன் டிசைனிங் படித்திருக்கிறேன். என் அம்மாவும் நடிகை தான், ஆனால் அவங்க ஹீரோயினாக நடிக்கவில்லை. நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நான் சிறு வயதில் இருந்தே என் அம்மாவின் நடிப்பையும் ,சினிமாவுக்காக அவர்களின் உழைப்பும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும், அதனாலேயே எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது, அதுவே இப்போ என் லட்சியமாக மாறியிருக்கிறது.
ஆனால், என் குடும்பத்தார் நான் டாக்டராக வேண்டும் என்று விரும்பினார்கள், நான் ஆக்டராக வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். என் ஆசையை கேட்டதும் அவர்கள் ஓகே சொல்லி விட்டார்கள். வெறும் சினிமா மீதான ஆசையை மட்டுமே வைத்துக்கொண்டு நான் வாய்ப்பு தேடவில்லை, நடிப்பு, நடனம், சிலம்பம் ஆகியவற்றை முறையாக கற்றுக்கொண்டு வாய்ப்பு தேடினேன். அதன் மூலமாகவே இரண்டு படங்களின் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் நாயகியாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது என் லட்சியமாக உருவெடுத்துள்ளது, அதற்கான பாதையில் தான் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
தற்போதைய சினிமாவும், சினிமா மீதான உங்கள் பார்வை என்ன ?
சினிமாவை பற்றி பலர் பலவிதமாக பேசலாம், ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் சினிமாவில் படித்தவர்கள் வரத்தொடங்கி விட்டார்கள், பல புதிய தொழில்நுட்பங்கள் வருகிறது. எனவே சினிமா என்பது மிகப்பெரிய உலகம். அதில் வாய்ப்பு பெறுவதும், அதை தக்க வைத்துக்கொள்வதும் சாதாரண விசயம் இல்லை, என்பது எனக்கு தெரியும். அதனால் தான் சினிமாவுக்கு என்ன தேவையோ அதை கற்றுக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறேன், நிச்சயம் எனக்கான இடத்தை என்னால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை, எனக்கு இருக்கிறது.
நாயகியாக நடிக்கும் உங்களுக்கு கனவு கதாபாத்திரம் என்று எதாவது இருக்கிறதா?
கதாநாயகியாக அறிமுகமாகிறேன், தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பேன். அதே சமயம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் வில்லியாக மிரட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக வில்லி என்ற இமேஜை உருவாக்க வேண்டாம், வில்லியாகவும் மிரட்டுவேன், கதாநாயகியாகவும் கவர்ந்திழுப்பேன்.
எனக்கு சமந்தா மற்றும் சிம்ரன் இருவரையும் பிடிக்கும், அவர்கள் சினிமாவில் எப்படி தங்களுக்கு என்று தனி இடத்தை உருவாக்கி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்களோ அதுபோல் நிச்சயம் நானும் எனக்கான இடத்தை உருவாக்குவேன்.
ஹீரோக்களில் உங்களுக்கு யாரைபிடிக்கும், யாருடன் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ?
ரஜினி சார் முதல் சிவகார்த்திகேயன் வரை எனக்கு அனைத்து ஹீரோக்களையும் பிடிக்கும், அனைவருடனும் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் விக்ரம் சார் படத்தில் நடிக்க வேண்டும், அவருடன் போட்டி போட்டு நடிக்க வேண்டும், என்பது என் தீவிர ஆசை.
நம்பிக்கையோடு பேசும் நடிகை அனு ஸ்ரீ-க்கு நடிப்புடன் சொந்தமாக திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறதாம். அதற்காக இப்போதே சினிஸ்குவாட் தேவி புரொடக்ஷன் என்று தனது அம்மா பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருப்பவர் நிச்சயம் என் நிறுவனம் சார்பில் எதிர்காலத்தில் திரைப்படங்கள் தயாரிப்பேன், என்று சொல்கிறார்.
வளர்ந்து வரும் இளம் நடிகை அனு ஶ்ரீ, திரைத்துறையில் மட்டும் இன்றி வணிகத் துறையிலும் சிறந்து விளங்கி வருகிறார். தன்னுடைய வணிகத்தில் அவர் சம்பாதிக்கும் தொகையில் ஒரு பகுதியை கொண்டு ஏழை எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்கு பல உதவிகள் செய்துக் கொண்டிருக்கிறார்.
ஈகை எண்ணம் கொண்ட இந்த நவீன நாயகியின் உயர்ந்த உள்ளம் போல் அவருடைய எதிர்கால திரையுலக லட்சியப் பயணத்தில் வெற்றி பெற்று, அவரது கனவுகள் மெய்ப்பட வேண்டும், என்று நாமும் வாழ்த்துவோம்.