Jan 01, 2021 05:28 PM

‘மாயத்திரை’ இசை வெளியீட்டு விழாவில் அரசிடம் கோரிக்கை வைத்த குஷ்பு

‘மாயத்திரை’ இசை வெளியீட்டு விழாவில் அரசிடம் கோரிக்கை வைத்த குஷ்பு

ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மாயத்திரை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், அசோக் குமார், ஷீலா ராஜ்குமார், இயக்குநர் சம்பத்குமார், தயாரிப்பாளர் வி.சாய்பாபு மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு சுந்தர் மற்றும் சுஹாசினி மணிரத்னம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

 

‘மாயத்திரை’ இயக்குநர் சம்பத்குமார் பேசுகையில், “இந்தப் புத்தாண்டு தினத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர் சாய் பாபு அவர்கள்.இந்த படம் ஒரு பேயின் பேரன்பை சொல்லும் படம். திரு பாலுமகேந்திரா அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை, ஒரு கதை அதற்கான கதாபாத்திரங்களை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார். அதன்படிதான் இந்த படம் அமைந்துள்ளது. இந்த படம் ஒரு கதாநாயகியை மையப்படுத்திய படம். ஷீலா ராஜ்குமார் வாழ்ந்திருக்கிறார். அசோக்குமார் என் நீண்ட கால நண்பர் இந்த படத்தில் நடித்து இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இசை வெளியீடு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சுகாசினி மற்றும் குஷ்பு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.” என்றார்.

 

நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு பேசுகையில், “இங்கு சினிமாவைப் பற்றி மட்டும்தான் நான் பேச வந்திருக்கிறேன், அரசியல் பற்றி அல்ல. தமிழக அரசிற்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். மதுபான கடைகளை அனைத்து இடங்களிலும் திறக்க அனுமதி வழங்கி இருக்கிறீர்கள். அதேபோல் திரையரங்குகளையும் 100 சதவீதம் பார்வையாளர்கள் பார்க்க அனுமதித்தால்  சினிமா நல்லபடியாக வளர எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். கொரோனா காலத்திற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சினிமாவில் தயாரிப்பாளர்களில் சில பிரச்சனைகள் இருந்தால் முரளி ராமசாமி அவர்களை சந்தியுங்கள். விரைவில் தீர்வு கிடைக்கும். சிறிய தயாரிப்பாளர்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக முரளி ராமசாமி அவர்கள் இருக்கிறார்.” என்றார்.

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி பேசுகையில், “ஆடியோ வியாபாரமாகி இசை வெளியீட்டு விழா நடைபெறுவது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் வருடத்தின் முதல் நாளில் நடைபெறுவது சிறப்பு. இது ஒரு மற்ற படங்களுக்கு ஒரு ஆரம்பமாக இருக்கும் என கருதுகிறேன். புதுமுகமாக யாரேனும் படம் தயாரிக்க வந்தால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு பக்க பலமாக இருக்கும். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் புதிய முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகிறது. சிறிய படம் பெரியப்படம் அனைத்திற்கும் நன்மை பயக்கும் விதமாக இந்தப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

 

நடிகை சுகாசினி மணிரத்னம் பேசுகையில், “நான் இன்றுடன் திரையுலகிற்கு அறிமுகமாகி 40 வருடங்கள் ஆகின்றது. வேறு எந்தத் துறையைத் தவிர சினிமாவை மட்டுமே நான் மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதுகிறேன். அசோக்குமார், ஷீலா, சம்பத்குமார் சாய்பாபு படத்தில் நடிப்பது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த படத்தில் நடித்த அசோக், ஷீலா மற்றும் இயக்குநர் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். படம் மிகப்பெரிய வெற்றி அடையும் நம் எல்லோருடைய ஆதரவும் அன்பையும் இப்படத்திற்கு அளிப்போம்.” என்றார்.

 

நடிகை ஷீலா ராஜ்குமார் பேசுகையில், “இந்த வருடத்தின் முதல் நாள் நல்ல தொடக்கம் என நான் நினைக்கிறேன். இந்த படத்தில் பல அனுபவங்களை நான் கற்றுக்கொண்டேன். தயாரிப்பாளர் அவர்கள் என்னை இந்த படத்திற்கு தேர்ந்தெடுத்தது மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக நான் கருதுகிறேன். பேய் படம் என்பதால் பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே எடுக்கப்பட்டது. இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவர்க்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் அசோக் குமார் கூறுகையில், “இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சாய்பாபு அவர்களுக்கு என் நன்றி. ERO-ல இருந்து carrier-ஆ ஆரம்பிச்சு வாழ்க்கை செல்கிறது. இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் ஒரு அடையாளம் கிடைக்கும். இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் சாய்பாபு பேசுகையில், “காஸ்டீயும் டிசைனர் ஆக வாழ்க்கையை தொடங்கி இன்று தயாரிப்பாளராக மாரி இருக்கிறேன். பல உச்ச நட்சதிரங்களுக்கு காஸ்டீயும் டிசைனர் ஆக பணியாற்றி இருக்கிறேன். நான் என்னை போல் சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் பலபேரை தெரியப்படுத்துவேன். இந்த சினிமா என்ன எனக்கு கொடுத்ததோ அதையே திருப்பிக்கொடுப்பேன். இப்படத்தின் இயக்குநர் சம்பத், அசோக், ஷீலா மற்றும் தொழில்நுட்ப ஆட்கள் அனைவருக்கும் நன்றி. இந்த விழாவை சிறப்பித்துக்கொடுத்த குஷ்பு மற்றும் சுஹாசினி அவர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

 

இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரி பேசுகையில், “வித்யாசமான கதைக்களத்திற்கு இசை அமைத்தது சவாலாக இருந்தது. பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது.” என்றார்.