Jan 13, 2022 02:19 AM

லண்டனில் உருவாகும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ பாடல்கள்!

லண்டனில் உருவாகும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ பாடல்கள்!

வடிவேலு நாயகனாக நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தை சுராஜ் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் குக் வித் கோமாளி சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த் லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட மிகப்பெரிய காமெடி நட்சத்திர பட்டாளம் களம் இறங்கியுள்ளது.

 

இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இதையடுத்து படத்தின் இசையமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. வடிவேலுவுடன் நாய்கள் பல முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால், படத்தின் இசைப் பணிகளை லண்டனில் மேற்கொள்ள படக்குழு முடிவு செய்தது.

 

இதை ஏற்றுக்கொண்ட லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினர். 

 

இதன்போது படத்தின் தயாரிப்பாளரும் , தொழிலதிபருமான லைகா குழும  உரிமையாளர் சுபாஷ்கரன், அந்நிறுவனத்தின் துணை தலைவர்  பிரேம், அந்நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி  ஜி.கே.எம்.தமிழ்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடிப்பதாலும்,  அவர் இந்த படத்தில் பாடுவதாலும் லண்டனில் நடைபெற்று வரும் படத்திற்கான இசையமைப்பு பணி கவனம் பெற்றிருக்கிறது.