May 22, 2024 07:38 AM

”எல்லா ஆட்டைத்தையும் ஆடியாச்சு, பாட்டையும் பாடியாச்சு” - நடிகர் ராமராஜனுக்கு ஏற்பட்ட சலிப்பு

”எல்லா ஆட்டைத்தையும் ஆடியாச்சு, பாட்டையும் பாடியாச்சு” - நடிகர் ராமராஜனுக்கு ஏற்பட்ட சலிப்பு

தமிழ் சினிமாவின் முன்னாள் முன்னணி நாயகரான ராமராஜன், தற்போது 10 வருடங்களுக்குப் பிறகு ‘சாமானியன்’ படம் மூலம் மீண்டும் நாயகனாக களம் இறங்கியுள்ளார். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இப்படத்தை ஆர்.ராகேஷ் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

 

விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சாமானியன்’ படம் குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துக் கொண்ட ராமராஜன், “நான் எப்போதுமே சினிமாவை விட்டு விலகியதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஏன் நடிக்க வில்லை என்றால், எனக்கு ஏற்ற கதை வரவில்லை. அல்லது கேட்ட கதை எனக்கு பிடிக்கவில்லை.

 

அதோடு 2010 ம் ஆண்டு .நான் மீட்டிங் போய் விட்டு வரும்போது மிகப்பெரிய கார் விபத்தை சந்தித்தேன். அதில் இருந்து மயிரிழையில் உயர் தப்பினேன் என்று சொன்னால் சரியாக இருக்கும். அதிலிருந்து மீண்டு நான் உயிரோடு இருப்பேன் என்றோ, மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்றோ நினைத்து கூட பார்த்தது இல்லை. , இப்படி ஒரு படம் நடிப்பேனா என்பது உலக அதிசயம் போல நடந்திருக்கிறது. இதற்கு காரணம், என்னுடைய ரசிகர்களின், தமிழக மக்களின் பிரார்த்தனைதான்.. இந்த ரசிகர் மன்றங்களுக்கு நான் எதுவும் செய்ததில்லை. ஆனால் எனக்காக உயிரை தரக்கூடிய அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்கள்.

 

இந்த சாமானியன் படத்தில் ஏன் நடித்தேன் என்றால் இயக்குனர் ராகேஷ் சொன்ன கதை தான் காரணம். இது வரை நான் நடிக்காத கதை. இதுவரை திரை உலகம் சந்தித்து இராத கதை. படத்தின் கதை என் காலகட்டத்திற்கு ஏற்ற கதையாகவும், அதே சமையம் இந்த கால கட்டத்துக்கு ஏற்ற கதையாகவும் இருக்கும். குடும்பமும் இருக்கும். குதூகலமுமிருக்கும், நகைசுவையும் இருக்கும். நளினமும் இருக்கும். எல்ல அம்சமும் கூடிய கதை இது. இதனால் தான் இப்படத்தை தேர்ந்தெடுத்தேன்,. . இந்த படத்தின் திரைக்கதையை உலகில் பிறந்த எவரும் கடக்காமல் போகவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு அருமையான கதை இது. படம் பார்த்து விட்டு வரும்போது தாய்மார்கள் மட்டுமல்ல, என்னுடைய ரசிகர்களும் ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் அளவிற்கு ஒரு கதை.

 

என்ன இப்படத்தில் என் ரசிகர்களுக்கு சின்ன வருத்தம் வரும். அது என் திரையுலக புகழுக்கு காரணம் இளையராஜாவின் இசை தான். அவர் இல்லாமல் நான் இல்லை. இந்த 23 வருடங்களிலும் என்னை ராமராஜன் என்று சொல்கிறார்கள் என்றால், இளையராஜாவின் பாட்டு தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று பல இடங்களில் இளையராஜா, ராமராஜன் பாடல்களை தான் கேட்கிறேன் என்கிறார்கள்.

 

ஆனால் இப்படத்தின் கதை படி இப்படத்தில் எனக்கு ஜோடி இல்லை. அதோடு பாட்டும் இல்லை .அதனால் இசை அமைப்பாளராக யாரை போடுவது என்பதில் பட ஆரம்பத்தில் சிறு குழப்பம் இருந்தது. பட்ஜெட்டும் இடித்தது. ஆனால் ராமராஜன் என்றால் இளையராஜா இருந்தால் தான் நன்றாக இருக்கும் என பலரும் சொல்லவே, ராஜாவிடம் சென்றோம் அவர் கதையை கேட்டதுமே, ‘‘ஏம்பா… ராமராஜனும் நானும் சேர்ந்தால் பாட்டுதானேப்பா…ஆனால் பாட்டு இல்லாம ஏங்கிட்ட வந்து இருக்கீங்களே..‘‘ என கேட்டார்.. கதை அப்பட்டிண்ணே என்றோம். பிறகு எனக்காக ஒரு பாட்டை படத்தில் சேர்த்தார். ஆனால் இளையராஜா இப்படத்துக்கு வந்த பிறகு படத்தின் எதிர்பார்ப்பு எகிறி விட்டது.

 

இப்படத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன். இரண்டு கதை எனக்கு பிடித்து இருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த அறிவிப்பு வெளிவரும்.

 

இப்படத்தில் தான் எனக்கு ஜோடி இல்லையே தவிர இனி வரும் படங்களில் என் படங்களில் கண்டிப்பாக ஜோடி இருக்கும். டூயட் கூட பாடலாம் என இருக்கிறேன். கதை நல்லா இருந்தால் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள்.

 

‘கரகாட்டக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளி வருமா என கேட்கிறார்கள். என்னிடம் கூட இயக்குனர் கங்கை அமரன் வந்து ‘கரகாட்டக்காரன்’ இரண்டாம் பாகம் எடுக்கலமா? என கேட்டார். நான் மறுத்து விட்டேன். கரகாட்டக்காரனிலேயே எல்லா ஆட்டைத்தையும் ஆடியாச்சு. பாட்டையும் பாடியாச்சு. இனி என்ன ஆட்டம் ஆடுறது. அதனால் வேண்டாம் சார் என சொல்லி விட்டேன். கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம் இல்லை.” என்றார்.