May 10, 2019 07:17 PM

போராட்டம் நடத்த முடிவு செய்த பாடகி சின்மயிக்கு காவல் துறை தடை!

போராட்டம் நடத்த முடிவு செய்த பாடகி சின்மயிக்கு காவல் துறை தடை!

பாடலாசிரியர் வைரமுத்து மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு கூறிய பின்னணி பாடகி சின்மயி, தொடர்ந்து சிலர் மீது கூறிய பாலியல் புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சின்மயிக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்ததை போல, பலர் எதிர்ப்பும் தெரிவித்தார்கள்.

 

இதற்கிடையே, உச்ச நீதிமன்ற நீதிஅப்தி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். ஆனால், அவரது புகாரில் அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பிக்க, அந்த பெண்னின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

இருப்பினும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்களும், பெண் உரிமை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வெளியே சில போராட்டங்களும் நடைபெற்றது.

 

அந்தவகையில் பாடகி சின்மயியும் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பெண் ஊழியர் கொடுத்த புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தப்போவதாக கூறியிருந்தார். போராட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், அவரது போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

 

தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 12ம் தேதி போராட்டம் நடத்துவதற்கு பாடகி சின்மயி அனுமதி கேட்டிருந்ததாகவும், அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.